வியாழன், 22 டிசம்பர், 2011

கடதரங்கம்!

கடந்த மூன்று வருடங்களாக, சென்னை இசை விழாவில், சுகன்யா குழுவினர் நடத்தும் ஸ்திரீ தாள் தரங்கிணி நிகழ்ச்சியின் மிகச் சிறிய சாம்பிள். உங்கள் பார்வைக்கு. 

    

Sthree Thal Tharang (Laya Raga Sangamam – Ensemble) 
     

திங்கள், 5 டிசம்பர், 2011

சென்னை இசைவிழா கச்சேரிகள் 2011-12


எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு: 

சென்னை இசைவிழா 2011-12 கச்சேரிகள், ஒவ்வொரு தேதியிலும், எந்தெந்த நேரத்தில், என்னென்ன கச்சேரிகள், எங்கெங்கு நடக்கின்றன; அவைகள் காசுக் கச்சேரியா அல்லது ஓசிக் கச்சேரியா? கச்சேரிகள் நடக்கும் சபா விலாசம் என்ன போன்ற விவரங்களை, ஒரு பி டி எஃப் கோப்பாக வெளியிட்டுள்ளோம். 

அதைக் காண, தரவிறக்க,  >>>>இங்கே<<<<     சொடுக்கவும். 

நம் வாசகர்களுக்கு, மேலும் ஒரு வேண்டுகோள். 

இந்த சீசனில், நீங்கள் ஏதாவது கச்சேரிக்குச் சென்று வந்தால், உங்கள் கச்சேரி விமரிசனத்தை, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ, எழுதி, engalblog@gmail.com   மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

கச்சேரி விமரிசனம் எழுதுபவர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி எழுதலாம்.

கச்சேரி நடந்த தேதி: 

கச்சேரி நடந்த இடம்.

யார் பாட்டு?

பக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் யார்?  

நினைவிருக்கின்ற பாடல்கள் / ராகம்.

எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது.

கச்சேரியின் சிறப்பம்சம் என்று எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

பாடகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஏதாவது சொல்ல விரும்பினால், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

இந்த விவரங்கள் + உங்கள் எழுத்துத் திறமை ஆகியவற்றுடன், எழுதி அனுப்புங்கள். இயன்ற வரையில், வளரும் இளம் கலைஞர்களை, உற்சாகப் படுத்தும் வகையில் எழுதப் படுகின்ற விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பாடகர், உங்கள் சொந்த பந்தமாக அல்லது நண்பராக இருந்தாலும் ஆட்சேபணையில்லை! 
                         

சனி, 3 டிசம்பர், 2011

தவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)


(எழுதியவர் மீனாக்ஷி. )

."..காப்பாற்ற வேண்டும்.  தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்!"  என்று அவள் சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது.  

அவள் சொன்னதை கேட்டு புங்கவர்மன் மனம் இறங்கினாலும் தன்னுடைய நிலைமையை நினைத்துப் பார்த்தான்.  பின் அவளிடம் "இளவரசி.. நான் மீளமுடியாத பணப் பிரச்சனையில் இருக்கிறேன்.  இந்த நிலைமையை எப்படி சீர்செய்வது என்பதறியாமல் நானே பெருங்குழப்பத்தில் இருக்கிறேன்.  அதனால்தான் நாட்டில் இருக்க இயலாமல் அடிக்கடி வேட்டையாட காட்டுக்கு வந்து விடுகிறேன்.  இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு..." என்றான். 

அவன் முடிக்கும் முன்னமே அவள், "..உங்கள் ஒருவரால்தான் அவரை காப்பாற்ற முடியும்... நீங்கள் என் கணவரை மீட்டு வந்து என்னிடம் ஒப்படையுங்கள்.   நான் உங்களுக்கு வேண்டிய பொன்னும், பொருளும் அளிக்கிறேன்.  நீங்கள் மறுக்காமல் இந்த உதவியை எனக்கு செய்தே ஆகவேண்டும், ஏனென்றால் உங்கள் ஒருவரால்தான் அவரை, அவரை.." என்று சொல்லியபடியே மயங்கி சரிந்தாள்.

அவளுக்கு என்ன ஆயிற்று என்று அவள் அருகே செல்ல ஓரடி எடுத்து வைத்தான் புங்கவர்மன். 
      
எதிர்பாரால் அடித்த பலத்த காற்றினால் மேகங்கள் விலகி நிலவின் ஒளி மயங்கி விழுந்த அவள் மேல் பட, அவள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தவளை ஆனாள்.  மயக்கம் இன்னும் தெளியாத நிலையில் தவளை அப்படியே அசையாமல் படுத்திருந்தது.
    
பொன்னும், பொருளும் வேண்டிய அளவிற்கு கிடைக்க போகிறது என்பதினாலேயே புங்கவர்மன் உடனேயே செயலில் இறங்கினான்.  புறப்படும்முன் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளியை அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லி, தவளை உருவில் இருக்கும் அந்த இளவரசியை பாதுகாக்கும்படி ஆணையிட்டான்.   எப்படியாவது ஏழு கடல், ஏழு மலையை கடந்து இந்த சாதனையை செய்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் தங்கள் குல தெய்வமான புங்கனாதரை வேண்டிக் கொண்டு மேற்கு திசையை நோக்கி புறப்பட்டான்.
   
பாதையில் கவனம் வைத்து பயணத்தை செலுத்தி கொண்டிருந்தவனின் பாதையில் ஒரு மிகப் பெரிய மலைபாம்பு குறுக்கிட்டது.   புங்கவர்மன் சிறிதும் அஞ்சாமல் அதனுடன் போராடி, வென்று தன் பயணத்தை தொடர்ந்தான்.  இரவு நேரத்தில் தனிமையில் காட்டில் பயணிக்கும்போது ஓய்வெடுக்க வேண்டாம் என்ற தீர்மானத்துடன் பயணத்தை தொடர்ந்தவன், விடிந்ததும் சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் புறப்படலானான்.  பகல் நேரம் முழுவதும் வழியில் ஏற்பட்ட இடர்களை களைந்து,  தன் பயணத்தை தொடர்ந்தான்.  அந்தி நேரமும் வந்தது, அவன் பயணத்தின் முதல் கட்டமாக பரந்து விரிந்து கடலும் தென்பட்டது.  சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கினான்.  இருள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.  முற்றிலும் இருள் பரவுவதற்கு முன், எப்படியாவது இந்த கடலை கடந்து விட வேண்டும் என்ற உறுதியுடன் கடலை கடக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டான் புங்கவர்மன்.
  
"என்ன இது? என்ன பண்ணிண்டு இருக்க?" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

"இருட்டுறதுக்குள்ள கடலைக் கடந்தாகணும்" என்றான்.

"என்னடா உளறிட்டிருக்கே? கரண்ட் போறதுக்குள்ள ஹோம் வொர்க் முடிக்காம, இந்த புது வீடியோ கேமை  விளையாட ஆரம்பிச்சுட்டயா!  ஹோம் வொர்க்கை முதல்ல  முடிச்சுட்டு அப்பறமா விளையாடுனு உனக்கு எத்தனை தடவ சொல்றது?".  அம்மா அவனை கடிந்து கொண்டாள்.
   
'அம்மாக்கு எங்கேந்து புரிய போறது, ஹோம் வொர்காவது எமர்ஜென்சி லாம்ப் வெச்சுண்டு பண்ணிடலாம், வீடியோ கேம் ஆட முடியுமா?  யுபிஎஸ் ஒண்ணு வாங்குப்பான்னு ஒரு தடவ அப்பாகிட்ட கேட்டதுக்கு  எனக்கெல்லாம் அந்த காலத்துல....னு தன் பழைய ராமாயணத்தை பாட ஆரம்பிச்சவர்தான்.  நிறுத்தறதுக்கு ஒரு வாரம் ஆச்சு.  

இப்போ இந்த பாழாப்போன லாப் டாப்ல அப்பர் ஏரோ கீ சரியாவே வேலை செய்யல.  இதுல நான் எப்படி இந்த கடலை தாண்டறது.  அப்பாகிட்ட ஒரு புது லாப்டாப் வாங்கி தரயான்னு தப்பி தவறி கூட கேக்க முடியாது.  யுபிஎஸ் கேட்டதுக்கே ஒரு வாரம் ராமாயணம் பாடினவர், லாப்டாப் கேட்டா, யம்மா!   

இவங்களுக்கெல்லாம் என் நிலைமையை எப்படி புரிய வைக்கறது?  வகுப்புல பாதி பேர் இந்த கேம் முழுக்க முடிச்சாச்சு.  அவங்கள் எல்லாரையும் விட வேகமா நான் இதை முடிச்சு காமிக்கறேன்னு பெட் வேற கட்டி இருக்கேன்.  என் லாப் டாப் இருக்கற அழகுக்கு இந்த பெட் எல்லாம் நான் போட்டிருக்கணுமா?' என்று தன்னை தானே நொந்தபடி மீண்டும் மீண்டும் ஏரோ கீயை விரல் தேஞ்சு போற அளவுக்கு அழுத்தினான். 
  
பக்கத்துல இருந்து இவன் படற பாட்டை எல்லாம் பாத்து இவன் தம்பி சிரிச்சுண்டு இருந்தான்.  வர்ற ஆத்திரத்துக்கு.. 'அவ்வ்வன்ன்னை ஒண்ணும் பண்ண முடியாது.   ஏன்னா, அவன் ஏற்கெனவே இந்த கேமை இவனுக்கு முன்னாடி முடிச்சாச்சு' என்று நொந்தவனுக்கு தம்பியோட இளிப்பு வெறுப்பா இருந்துது.  
  
'தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே தேவலாம்னு எப்பவும் அம்மா சொல்லுவா.  இப்ப இந்த குட்டி பிசாசோட தயவு தேவை' நெனச்சு,  "ஏய், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"னு கெஞ்சலா கேட்டான்.
  
"நீ நேரா லெவல் அஞ்சுக்கு போ.  அங்க அந்த இளவரசியோட கணவன் இருப்பான்.  அவன் மேல கிளிக் பண்ணினா அவனுக்கு மயக்கம் தெளிஞ்சுடும்.  அதுக்கப்பறம் லெவல் ஆறு விண்டோ தானே ஓபன் ஆயிடும்.  அது ரொம்ப ரொம்ப ஈசி.  லெவெல் ஆரோட கேம் ஓவர்" என்றான் தெரிந்த பிசாசு.  

"டேய், ரொம்ப தேங்க்ஸ்டா!  கரண்ட் போறதுக்கு முன்னாடி இந்த கேமை முடிக்கறேன்".  அஞ்சாவது லெவலுக்குத் தாவினான். 

விண்டோ ஓபன் ஆகாமல்  திரும்ப டென்ஷன் ஆகி தம்பியிடம், ""என்னடா இதுக்கு கோட் வோர்ட் இருக்கா? க்ளிக் செஞ்சா ஒண்ணும் ஆகலியே? என்ன கோட் வோர்ட்? சொல்லித்தொலை" என்றான். 
  
"அதாண்டா.. அந்த இளவரசி மயக்கமாறதுக்கு முன்னாடி சொன்ன கடைசி வார்த்தை, அதான் கோட்" என்று தம்பி சொன்ன ஸ்பெல்லிங்கை வாய் விட்டு அழுத்தமாக சொல்லிக் கொண்டே டைப் செய்ய ஆரம்பித்தான்.....

அ வ ரை.     

செவ்வாய், 29 நவம்பர், 2011

மழையுடன் நாங்கள்!

 Dear EB,

Not a clean picture. But thats  how it is  infront of our house.

No one listens,  if we complain.

revathinarasimhan.



 டியர்   எங்கள் ப்ளாக்,
எங்கள் வீட்டு முன்னால் தொங்கும் தொலைபேசிக் கம்பிகள், கேபிள் கம்பிகள், மேலும் ஒரு மின்சாரக் கேபிள்.

மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது.
யார்கிட்டச் சொல்லியும் பிரயோசனமில்லை.
நடுவில் யாராவது வந்து உயர்த்தூக்கிக் கட்டுவார்கள். அடுத்த நாளே விழுந்துவிடும்.
எங்கள் கார்  சின்ன அளவு அதனால் வெளியே செல்வதில் பிரச்சினை இல்லை.
ரேவதி நரசிம்ஹன்....மழையுடன்  நாம்.



      

ஞாயிறு, 27 நவம்பர், 2011

பூகோள அறிவு!

 
பூகோள பாடத்தில் இது வரை நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் எல்லோரும், உங்கள் பூகோள அறிவை செப்பனிட்டுக் கொள்ளுங்கள். ஜெய் ஹிந்த்! 
   

வெள்ளி, 25 நவம்பர், 2011

அரக்கனுக்கு ஒரு மிஸ்டு கால்! (எங்கள் சவடால் 2K+11)

எழுதியவர் : குரோம்பேட்டைக் குறும்பன்.

தங்கத் தவளைப் பெண்ணே - முன் கதை இங்கே 

இளவரசி சொன்னதைக் கேட்ட புங்கவர்மனுக்கு தன காதுகளையே நம்ப முடியவில்லை.

"இன்னும் ஒருமுறை சொல்லு?"

"மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை கண்டு பிடித்து, கொல்லவேண்டும்." 

"என்ன? கொல்ல வேண்டுமா?"

"ஆமாம்" 

"ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி?" 
   
"விவரமா சொல்றேன் கேட்டுக்குங்க. என்னுடைய சுயம்வரத்திற்கு மொத்தம் அம்பத்தாறு தேச மன்னர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என் தந்தை. ஆனால் வந்தது என்னவோ நாற்பது தேச இளவரசர்கள்தான்."

"பாக்கி?"

"எப்படியோ எஸ்கேப் ஆயிட்டாங்க. ஆமாம் நீங்க ஏன் சுயம்வரத்திற்கு வரவில்லை"

"எப்போ நடந்திச்சு சுயம்வரம்?"
  
"நேத்திக்கு" 

"ஹி ஹி ... எங்கள் அரண்மனை தபால் ஊழியருக்கு நான்கு மாத சம்பள பாக்கி. இன்றைக்கு வருகின்ற தந்தியையே அவரு ஒரு வாரம் கழிச்சிதான் கொண்டு வந்து கொடுப்பாரு. சுயம்வர லெட்டர் போட்டிருந்தீங்கன்னா ஒரு மாதம் கழித்துத்தான் கொடுப்பாரு." 
  
"சரி. நாற்பது பேர்களில் நீ யார் கழுத்தில் மாலை போட்டாய்?"

"வந்த நாற்பதும் சுமாராகத் தான் இருந்தார்கள். அதுல இருந்தவர்களுக்குள் கமலஹாசன் போல இருந்த ஒருவருக்கு மாலை போட்டேன்." 

"என்னது! கமலஹாசன் போல இருந்தவரை சுமார் என்று சொல்கிறாய்?"

"ஓ சாரி. அவர் குணா கமலஹாசன் மாதிரி இருந்தார்." 
    
"அபிராமி, அபிராமி! அவரைத்தான் நான் தேட வேண்டுமா?" 

"இல்லை. அவரை இல்லை. நான் அவருக்கு மாலை இட்டதும், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, குறும்பானந்தா என்னும் சாமியார் இளவரசன், எனக்குச் சாபம் இட்டான்."

"என்ன என்று?" 

"என்னைப் போன்ற குறு(ம்பு)முனியை மணக்காமல், குணா கமலனை மாலையிட்ட உனக்கு இந்த சாபம் இடுகின்றேன். நீ மாலை இட்டவரை யார் கொல்கிறார்களோ அவர் உன் கணவராவார்." 

"அப்புறம்?"

"இதைக் காதில் கேட்டவுடன், குணாவுக்கு முன்னே இருந்த தனா அவரைக் கொன்றுவிட்டு, தானே என் கணவன் என்றான்."

"அய்யய்யோ! அப்புறம்?"

"குறும்பானந்தா சும்மா இல்லாமல், 'அப்படிக் கொன்ற கணவனை யார் கொல்கிறார்களோ அவனே உன் புருஷன்' என்றார்."  

"கொண்டவனைக் கொன்றவனை, கொண்டவன் என்றால் அவனைக் கொன்று கொண்டவனாகிறான் - கொல்லப்படுபவன்..... ஐயோ இப்பவே கண்ணைக் கட்டுதே!"

"எனக்கும் அப்படித்தான் கண்ணைக் கட்டிச்சு. குறும்பானந்தாவின் கால்களில் தடாலென்று விழுந்து, சாமீ - இந்த சாபத்திற்கு விமோசனம் கிடையாதா என்று கேட்டேன்."

"என்ன சாப விமோசனம் என்று சொன்னார்?"

"இப்படி ஒருவரை ஒருவர் கொன்று, கடைசியில் முப்பத்தொன்பதாவது கணவனைக் கொல்லுகின்ற, இந்த சுயம்வரத்திற்கு வராத இளவரசனே உன் முழு நேரக் கணவன் ஆவான். அது மட்டும் இல்லை இந்தத் தவ முனிக்கு மாலை இடாததால், நீ மாலை நேரங்களில் தவளையாக மாறிவிடுவாய். உன் நாற்பதாவது, நிரந்தரக் கணவனைக் கண்டதும், உன் தவளை உருவம் விலகிவிடும்'என்று சொன்னவாறு அவர் போட்டியிலிருந்து விலகி வெளிநடப்பு செய்துவிட்டார்."

"அப்புறம்?"

"ஒருவரை ஒருவர் வெட்டி சாயப்பதைப் பார்த்ததும், அதிர்ச்சியிலேயே மீதியிருந்த இளவரசர்களில் ஒருவர் மயக்கமாகி விழ, அவரை அந்த நாட்டு ஆபத்துதவிகள் தூக்கிச் சென்று விட்டார்கள்."

"அப்போ பாக்கி இருந்த முப்பத்தெட்டு பேர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்து முப்பத்தி எட்டாவது இளவரசர், உன்னை இங்கே சனிமூனுக்கு சாரி - ஹனிமூனுக்கு அழைத்து வந்தாரா?"

"ஆமாம்." 

"இங்கே நீங்க ரெண்டு பேரும் வந்து சேர்ந்தவுடன், அரக்கன் தோன்றி, அவரைக் கவர்ந்து சென்று விட்டான். சரியா?"

"அட! இவ்வளவு சமத்தா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை" என்றாள், தவளை இளவரசி. 


"இன்னும் பார் இளவரசியே என் சமத்தை. ஏழு கடல் ஏழு மலை சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரியும்?"


"அரக்கன் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தான்."


"எங்கே உன் மொபைலைக் கொடு."


"இந்தாருங்கள் மன்னா. ஆனால் அதிலிருந்து ஓ சி - எஸ் டி டி எதுவும் போட்டு என்னுடைய அக்கவுண்ட் பாலன்சை ஏப்பம் விட்டுவிடாதீர்கள்!"


"சேச்சே அப்படி எல்லாம் செய்துவிடமாட்டேன். அரக்கனின் நம்பரைப் பார்த்து, அவனுக்கு ஒரு மிஸ்டு கால் - என்னுடைய மொபைலில் இருந்து கொடுப்பேன். அப்புறம் பார் வேடிக்கையை! ஆனால் அதற்கு முன்பு வேறு இரண்டு வேலைகள் உள்ளன."


"என்ன இரண்டு வேலைகள்?"


"ஒன்று, அரக்கனின் மொபைல் நம்பரை ட்ராக் செய்து அவன் எங்கே இருக்கின்றான் என்று தெரிந்து கொள்வது. இரண்டாவது கூகிள் எர்த் போய், இங்கிருந்து ஏழு கடல், ஏழு மலை மேற்கே தாண்டினால், எந்த இடம்  வருகின்றது என்று பார்ப்பது." 


புங்கவர்மன், தன மொபைலில், இந்த இரண்டு வேலைகளையும் இரண்டே நிமிடங்களில் செய்து - வியப்படைந்தவனாக, 'அட' என்றான். பிறகு, அரக்கனின் நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான். 


அடுத்த நிமிடம், அரக்கனிடமிருந்து அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. 


புங்கவர்மன், அலைபேசியில், "மிஸ்டர் அரக்கன். பௌர்ணமி வரையில் வெயிட் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். தவளகிரி இளவரசியின் கணவனை இப்பொழுதே கொன்றுவிடு. முனிவர் இட்ட சாபத்தினால், தவளகிரி இளவரசியின் கணவனைக் கொல்பவர், அவளின் கணவன் ஆகிவிட முடியும்." என்றான். 
        
மறுகணம், அந்தக் காட்டின் ஈசான்ய மூலையில் இருந்த கார் ஷெட் - மன்னிக்கவும் - தேர் ஷெட்டிலிருந்து, "ஐயோ" என்ற சத்தம் கேட்டது.
     
புங்கவர்மன், புன்னகையுடன், "இளவரசியே உன்னுடைய முப்பத்து ஒன்பதாவது கணவன் தயார். இப்போ நான் அந்த முப்பத்து ஒன்பதாவது கணவனான அரக்கனைக் கொன்று, உன் நிரந்தரக் கணவன் ஆகிவிடுவேன்" என்றான். 
             
பிறகு, அரக்கன் மொபைலை டிராக் செய்ததில், அது புங்க தேசத்தின் புறநகர்ப் பகுதியைக் காட்டியதும், கூகிள் எர்த் சென்று பார்த்ததில், ஏழு கடல், ஏழு மலை தாண்டினால், அது இதே காட்டைக் காட்டியதையும், சுருக்கமாகச் சொன்னான். 
           
தவளகிரி இளவரசியை அழைத்துக் கொண்டு - தேர் ஷெட்டுக்கு சென்று. ஷெட்டின் கதவை திறந்து, அங்கே பதுங்கியிருந்த அரக்கனை, தன் வாளால் கொன்றான். அங்கு ஏற்கெனவே இருந்த முப்பத்து எட்டாவது கணவனின் உடலையும், அரக்கன் உடலையும் ராஜ மரியாதையோடு புதைக்க ஆணையிட்டான். 
    
தவளகிரி இளவரசி, புங்கவர்மனின் வீர சாகசத்தையும், சமயோசித அறிவையும், கண்டு, வியந்து, ஓடி வந்து கட்டிக் கொண்டாள், அவரை! 
         

வியாழன், 3 நவம்பர், 2011

ஆமாம் இவர்தான் அவர்.

நடிகை பாவனா 

சென்ற பதிவில் காணப்பட்ட குழந்தை, இவர்தான். தீபாவளி என்ற படத்தில், கதாநாயகியாக நடித்தவர். சரியான பதில் சொன்னவர்கள், அருகில் இருக்கின்ற ஒத்தைக் கடைக்குச் சென்று, ஆரஞ்சு சுளை மிட்டாய் இரண்டு வாங்கி சாப்பிட்டு, மிட்டாய் வாங்கிய 'பில்'லை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் அக்கவுண்டில், அதற்குரிய தொகையை செலுத்திவிடுகிறோம். 

சரியான பதில் சொல்லாதவர்கள், தங்கள் தலையில் தாங்களே குட்டிக் கொள்ளவும்.