சனி, 1 ஜூலை, 2017

அப்பாவின் மகள் - துரை செல்வராஜூ






* * *

அப்பாவின் மகள்
துரை செல்வராஜூ




அப்பா எனக்கு அது வேணும்!..

எதுடா.. செல்லம்?..

திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் -
அகல்யாவின் காதோரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன....

அமர்ந்திருந்த பூங்காவின் அழகில் அவளுடைய மனம் ஒன்றவில்லை...

அழகழகாக பூத்திருந்த பூக்கூட்டங்களோ அப்படியும் இப்படியுமாக தத்திக்
கொண்டிருந்த குருவி இனங்களோ அவளை ஈர்க்கவில்லை...

அனைத்தையும் மீறிய அலைகடலாக
அவள் மனம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது...

ஏன்?.. ஏன்?.. - இப்படியொரு சம்பவம் நடந்தது?...

எத்தனை எத்தனையோ நிமிடங்களாக நாட்களாக வருடங்களாக
நெஞ்சக் கிடங்குக்குள் சேர்த்து வைத்திருந்த நிம்மதியெல்லாம் ஒரு
விநாடியில் புகைந்து போனதே...

மீண்டும் அந்தக் குரல் அவளது செவிப்பறையில் மோதியது

திடுக்கிட்டுத் திரும்பினாள் - அகல்யா...

யாரொருவரும் அருகில் இல்லை..
ஆனாலும், காலையில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் கண் முன்னே விரிந்தது..

அந்தக் கடையின் விதானத்திலிருந்து
தொங்கிக் கொண்டிருந்தவற்றை அண்ணாந்து பார்த்தவாறு - அப்பா!..

அப்பா தான்.. அப்பாவே தான்!..

இருபது ஆண்டுகளுக்கு முன்பாக - தான் பிடித்து நடந்த கை..
இதோ அருகில்.. மிக அருகில்..

இன்னும் மாறாததாக -
இடக்கை மணிக்கட்டிற்கு மேலாக ஒரு தழும்பு...

அப்படியே தாவிப் பிடிக்க வேண்டும்..  முத்தமிட வேண்டும்..
அந்தத் தழும்பினை வருடிக் கொடுக்க வேண்டும் போலிருந்தது...

அகல்யாவிற்குப் பத்து வயது இருக்கையில் -
ஆசைப்பட்டாளென்று இளநீர்க் குலையை வாங்கி வந்து
வீட்டில் வெட்டினார் அப்பா..

இளநீர்க் காய் சற்றே வழுக்கிக் கொள்ள - வேகமாக இறங்கிய அரிவாள் -
இடது கை மணிக்கட்டிற்கு மேலாக பதம் பார்த்து விட்டது...

பீறிட்டு வழிந்த ரத்தத்தைப் பார்த்து பயந்து அலறி மயங்கி விழுந்தது
நினைவுக்கு வந்தது...

அப்பாவின் கையில் இருந்த காயத்தைப் பார்த்து கதறி அழுத நாட்கள்!?...

அந்த அழுகைக்கு எல்லாம் கிடைத்த பரிசு சொல்லக்கூடியதா என்ன!..

அப்பா.. உங்கள் நெஞ்சில் சாய்ந்தவாறு
நான் தூங்கிய நாட்கள் தான் எத்தனை?..

என்னை மார்பினில் வைத்துத் தாலாட்டியபடி
நீங்கள் தூங்கித் திளைத்த நாட்கள் தான் எத்தனை.. எத்தனை?..

உங்கள் நெஞ்சின் மேல் கிடந்ததோடு சரியா?..
உங்கள் நெஞ்சிற்குள் கிடக்கவில்லையா?..

என்னதான் பிரச்னை உங்களுக்கு?..
எது பிரச்னை என்றாலும் பத்து வயது மகளை
விட்டுப் பிரியும் அளவிற்கு உங்கள் மனம் என்ன மரத்துப் போனதா?..

அது சரி.. அப்பாவின் கையைப் பிடித்தவாறு
பதின்ம வயதுடைய பெண்.. யார்?.. யார் அவள்?..

அவள்.. தங்கையா?..

எனக்கும் ஒரு தங்கையா!..

சட்டெனச் சிலிர்த்துக் கொண்டாள் -
அதை எப்படி ஏற்றுக் கொள்வது?..

சண்டைக் கோழியாகச் சிலிர்த்துக் கொண்டது மனம்...

என் தாயைத் தழுவிய கைகள்.. இன்னொரு.. !?...

நீங்கள் போய் விட்டீர்கள்.. எனக்கென்ன என்று!..

ஆனால் - ஏற்பட்ட அவலம்... அவமானம்!..
நினைவில் வந்து விட்டால் ஏழு நாட்களுக்குக் கண்கள் தூங்காதே!..

தங்களுடையது காதல் திருமணம்!.. - அம்மாவுக்கு ரொம்பவும் பெருமை..

அந்த ஆசைப் பூவினை அக்னிக் குழிக்குள் போட்டீர்களே.. ஏன் அப்பா?..

அப்பா விட்டுட்டுப் போனார்களே.. ஏன் அம்மா?..
- இந்தக் கேள்வியை எத்தனை ஆயிரம் தடவை கேட்டிருப்பேன்!...

ஒவ்வொரு தடவையும் - தனக்கு ஏதும் தெரியாது என்பதைப் போல,
அம்மாவிடம் இருந்து மெல்லிய புன்னகை...

ஆனாலும் ஏதோ ரகசியம் உங்களுக்குள் இருக்கின்றது...
என்னைத் தான் நோகடித்து விட்டீர்கள்..

இன்று காலை உங்கள் குரலைக் கேட்கும் வரைக்கும் நன்றாக இருந்தேனே!..

இப்படி பொடிப் பொடியாக நொறுங்கி புலம்பிக் கொண்டிருப்பது புதிது.. அப்பா புதிது!..

இறைவா!.. இன்றைய பொழுதை ஏன் இப்படி விடிய வைத்தாய்?..

அகல்யாவின் விழி ஓரத்தில் நீர் வழியும் போலிருந்தது..

அகல்.. அகல்!.. ஏண்டா இங்கே உட்கார்ந்திருக்கின்றாய்!..

அம்மா.. அவளும் வந்து விட்டாள்.. அகல்யாவைத் தேடிக் கொண்டு...

இந்த பூங்காவிற்கு அருகில் தான் வீடு..

யாரோ சொல்லியிருக்கின்றார்கள்...
அங்கே பித்துக்குளி மாதிரி உங்க பொண்ணு உட்கார்ந்திருக்கின்றாள் - என்று!..

அதுதான் பரிதவிப்புடன் ஓடி வந்து விட்டாள்.. தாயல்லவா!..

அருகில் அமர்கின்றாள்.. ஆனாலும் இவள் நிமிர்ந்து பார்க்கவில்லை..

ஏம்மா!.. என்ன விஷயம்?.. - ஆதரவாகத் தலையைக் கோதி விட்டாள்..

கண்கள் கசிந்தன.. ஒருபக்கமாகத் திரும்பி நோக்கினாள்..

அந்தப் புன்னகை.. அதே மாறாத புன்னகை!..
பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.. சோறும் நீரும் வேண்டாம்...

ஏம்மா!.. - விழிகளால் வினவினாள்..

பார்த்தேன்.. நான் பார்த்தேன்!..

மௌனம்..

ஏண்டா பார்த்தோம்..ன்னு இருக்கு!.. என்னால தாங்க முடியலை!..

நானும் தான் பார்த்தேன்... தாங்கிக்கலையா!?..

அதிர்ச்சியுடன் முழுதாகத் திரும்பிப் பார்த்தாள்.....

என்ன சொல்கிறாய் நீ!?..

நேற்று முன் தினம்... காய்கறி வாங்கும் போது...

ஏன் எங்கிட்ட சொல்லலை?...

அதை ஒரு விஷயமாகவே நினைக்கலை.. அதான்!..

இரண்டு நாட்களாக அம்மா மனதிற்குள் பூட்டி வைத்திருக்கிறாளா?...
என்னை விட அவள் தானே அதிகம் பாரம் சுமந்திருப்பாள்!... அவளே அதிர்ந்து
போகாமல் அமைதியாக இருக்கிறாள் என்றால்?...

அவரை மறுபடியும் பார்த்தது அதிர்ச்சியா இல்லையா?..
அந்தத் துரோகம் உன் மனசுக்கு வருத்தமா இல்லையா?..

வாய் விட்டுக் கேட்டவாறே - தாயின் மடியில் சாய்ந்து கொண்டாள் - அகல்யா..

கடந்து போகணும்... எல்லாத்தையும் கடந்து போகணும்... காலம் போகிற
வேகத்துக்கு நடக்கவாவது வேணும்.. கால்..ல கட்டையைக் கட்டிக்கிட்டா  அது
முடியுமா?..

எப்படிம்மா.. எப்படிம்மா!.. உன்னால -

அகல்யா.. எழுந்திரு.. அங்கே பார் உங்க அப்பா!.. - அம்மா பதற்றமானாள்..

திடுக்கிட்டு எழுந்த அகல்யா நோக்கினாள்..

அந்த பன்னீர் மரத்தின் கீழ்... அவளுடைய அப்பா..

மறுபடியும் வர்றார் போல இருக்கு.. உறவு கொண்டாட!... வேண்டாம்..ன்னு
சொல்லிடு!... பட்ட கஷ்டம் எல்லாம் போதும்!..

அகல்யா முணுமுணுத்தாள்...

இருந்தாலும் அப்பாவை உற்று நோக்கினாள்..

அந்த கம்பீரம் கொஞ்சம் குறைந்திருப்பதாகத் தோன்றியது... வயதாகி விட்டது அல்லவா!...

மனமே.. மனமே.. அந்தப் பக்கம் போகாதே!..  - தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்..

அகல்யாவின் கண்களுக்கு அப்பா புன்னகைப்பது நன்றாகத் தெரிந்தது...

எதையோ சொல்ல விரும்புவதும் புரிந்தது.. காது கொடுத்துக் கேட்கலாமா!...

திடீரென சந்தேகம் அகல்யாவுக்கு...  எங்கே அந்தப் பொண்ணு!?..

அப்போது அம்மா சொன்னாள்...

பறி கொடுத்துட்டார்... அந்தப் பொண்ணு இப்போ தாயில்லாம!...

சடாரென சாட்டையால் அடி வாங்கியது போலிருந்தது அகல்யாவிற்கு...

நான் உள்ளுக்குள் நினைத்தது அம்மாவிற்கு எப்படித் தெரிந்தது?..

தாயின் முகத்தை நிமிர்ந்து நோக்கினாள்..

அம்மாவின் கண்களில் நீர்த்துளிகளைப் பார்ப்பது இதுவே முதன்முறை...

தாளாத துயரம் பொங்கியது அகல்யாவிற்குள்...

உதடுகள் முணுமுணுத்தன - அப்பா!..

அந்த வேளையில் -
மேகத்தினுள்ளிருந்து நகர்ந்து வரும் நிலவாக -

அப்பாவின் பின்னாலிருந்து அந்தப் பெண் குழந்தை
எட்டிப் பார்த்தது.. பிரியத்துடன் புன்னகைத்தது...

அப்பா அருகில்லாமல் நான் பட்ட அவஸ்தை எல்லாம் போதும்...
அம்மா இல்லாமல் நீ கஷ்டப்படவேண்டாம்!.. என் செல்லமே!..

அப்பா!.. என, விசும்பினாள்.. அவளை அறியாமல் அவள் கைகள் நீண்டன..

அப்பாவின் மகள் அகல்யாவை நோக்கி ஓடி வந்தாள்..

அன்பின் அரவணைப்பிற்குள் அகல்யாவின் தங்கை ஆனாள்..

அப்போது அந்தக் கடலை வண்டி கடந்து போக -
அதிலிருந்து தவழ்ந்த பாடல் எதையோ சொல்லாமற் சொல்லியது..

சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ!..
வண்ணத் தமிழ்ச் சோலையே..
மாணிக்க மாலையே ஆரிரோ. அன்பே ஆராரோ!..

ஓடி வந்து கட்டிக் கொண்டவளின்
உச்சியை முகர்ந்தவாறு அகல்யா கேட்டாள்..

உன் பெயர் என்னம்மா!..

***

33 கருத்துகள்:

  1. அந்தத் தந்தை என்ன தப்பு செய்தார் என்பதை மறைபொருளில் உணர்த்திக் செல்வது அழகு. தாயிழந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததும் கைவிடப்பட்ட இந்தத் தாயும் மகளும் மனம் மாறுவது பெண்மையின் பலவீனம்; அன்பின் அடையாளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அய்யாவின் பாணியில் கதை அருமை + நெகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் ஜி ..

      தங்கள் கருத்துரைக்காக காத்திருக்கின்றேன்... நன்றி..

      நீக்கு
  4. எதிர்பார்க்கவில்லை துரை செல்வராஜு அவர்களிடமிருந்து கதையை. வித்யாசமான சிந்தனை. வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லைத் தமிழன் ..

      தங்களது விரிவான கருத்துரைக்கு காத்திருக்கின்றேன்..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிலநேரங்களில் சில மனிதர்களின் வாழ்க்கையில் இதுபோலெல்லாமும் நடக்கலாம்தான்.

    யதார்த்தமான மிக அழகான கதை.

    இயல்பான எழுத்து நடை.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா ..

      தங்கள் இனிய கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திரு கௌதம் அவர்களின் பொருட்டு -
    எனது கதையை பதிவு செய்த திரு ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை! நல்ல ஆக்கபூர்வமான சிந்தனை! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  9. அன்பின் ஜி கடந்த கால தவறுகளை இலைமறை காயாக சொல்லி மனதை கனக்க வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியூர் பயணம் விரிவாக எழுத இயலவில்லை மன்னிக்கவும் செல்லின் வழி

      நீக்கு
    2. அன்பின் ஜி ..
      வெளியூர் பயணத்துக்கு இடையிலும் -
      தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  10. பெண்கள் இரக்க சிந்தனை உடையவர்கள். ஆண்கள் அப்படி அல்ல. அதனால் கதையின் போக்கை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நியாயமான பேச்சு.. பல இல்லங்களில் விளக்கெரிவது பெண்களின் இரக்க சிந்தனையால் தான்..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  11. கதை மிகவும் அருமை ஐயா....மனதையும் நெகிழ்த்திவிட்டது. உங்கள் மொழி ஆளுமை...அபாரம்...வாழ்த்துகள்...

    கீதா:துளசியின் கருத்துடன்..... வித்தியாசமான சிந்தனை.....மிகவும் மென்மையாக அப்பா பாதை மாறியது சொல்லப்பட்ட்இருப்பது அருமை.....என்னதான் வருத்தம் இருந்தாலும், தாயிழந்த அக்குழந்தையை....தாய்மை உணர்வுடான் அன்புடன் ஏற்றுக கொள்வது....தாய்மாயைச் சிறப்பித்த விதம் அழகு....எளிதில் ஜீரணிக்க முடியாத.இது போன்ற உணர்வுகளைக் கூட சைவமாகச் சொல்ல முடியும் என்பது கதாசிரியரின் அன்பு நிறைந்த மென்மையான உள்ளத்தையும் பிரதிபலிக்கிறது.....அழகிய தமிழ் நடை....வாழ்த்துக்கள், பாராட்டுகள் சகோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வானவில் போல மறையாத வர்ண ஜாலங்களை உடையன - பெண்மையும் தாய்மையும் ..
      அதன் முழுப் பரிமாணமும் உணர்ந்தார் எவரும் இலர்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ஒன்றை விட்டு ஒன்றைப்பிடித்து, அதுவும்போய் திரும்ப இடத்திற்கே மற்றொன்றுடன். இழந்த ஸந்தோஷம் அந்தப் பெண்ணிற்கும் வேண்டாம், அன்பினால் மன்னித்து ஆஹா எவ்வளவு விஷயங்கள் லாகவமாகச் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு வரி படிக்கக் காவியமாதிரி நடை. அகல்யாவும்,அவளம்மாவும். மிக்க அழகான கதை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      முதுபெரும் பதிவராகிய தங்கள் கருத்துரை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..

      நீக்கு
  13. யாரைப் போலும் இல்லாத தனித்துவம் வாய்ந்தவள் தாய். தாயின் பெருமை அருமை.
    சரள நடை. அழகான கருத்து.

    வார்த்தை ஜாலம் இல்லாத இயல்பான நடை.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> யாரைப் போலும் இல்லாத தனித்துவம் வாய்ந்தவள் தாய்..<<<
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி ..

      நீக்கு
  14. பிரிவின் ஆற்றாமையை வெளிப்படுத்தும் கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  15. அருமையான அன்பான கதை.
    பெண் எப்போதும் தியாகம், அன்பு, பாசம் நிறைந்தவள் என்று சொல்லும் கதை.
    அகல்யாவின் தாய்மை பாசம் அப்பாவின் மகளை ஏற்றுக் கொண்டது தங்கையாக.
    பாடல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பூரணம் என்பதே பெண்மை..
      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. மிகவும் அருமையாக ஒரு பெண் தாயுமானவளாவதை சித்தரித்துள்ளீர்கள் ஐயா ..
    தான் பட்ட கஷ்டம் அச்சிறுமிக்கு ஏற்படக்கூடாதெனும் குணம் ஏற்றுக்கொள்ளும் குணம் சிலருக்கே வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு