புதன், 28 ஜூன், 2017

காலம் தவறிய உணர்வுகள் - கீதா ரெங்கன்






     நம்ம ஏரியாவில் முதலில் சொல்லப்பட்ட கருவுக்கு கதை எழுதி இருக்கிறார் தில்லையகத்து கீதா ரெங்கன்.  ஒரு மழையைத் தொடர்ந்து காணாமல் போன கரண்ட், இணைய இணைப்பைப் பெற பல நாட்கள் போராடி வாங்கியிருக்கிறார்.  சற்றே பெரிய இந்தக் கதையை இரண்டு பகுதியாகப் போடாமல் ஒரே பகுதியாகவே வெளியிட்டு விட்டேன்.  
 

     நெல்லைத்தமிழன் கொடுத்த ஐடியாபடி கீதா ரெங்கன் கதையை முதலில் இங்கு பப்ளிஷ் செய்திருக்கிறோம்.  இந்த வகையில் இது முதல்.  கீதா பின்னர் இதைத் தனது தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம்!






காலம் தவறிய உணர்வுகள்


கீதா ரெங்கன்  




“கெட்டி மேளம் கெட்டி மேளம்”…..என்று ஐயர் சொல்லிட, கல்யாண மண்டபத்தின் இரைச்சலில், ஐயரின் மாங்கல்யம் தந்துனானே அமிழ்ந்துவிட, இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னைக் காப்பாற்றுவேன் என்று யாரோ பாடிட, குமார், தாரிணியின் கரம் பிடித்து அவள் கழுத்தில், அக்னி சாட்சியாக மூன்று முடிச்சுகளைக் கட்டினான். இப்பிறவியிலேயே கல்யாணம் நிலைப்பதில்லை எனும் போது ஏழேழ் பிறவி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவரோ? 10 வருடங்கள் கடந்தன.





திருவனந்தபுரம் ரயில் நிலையம். 





முதுகுப் பையுடன் வலது கையால் பெட்டியை இழுத்துக் கொண்டு கூட்டத்தின் இடையில் தள்ளப்பட்டு, அர்ச்சனையாக வந்த பல கெட்ட வார்த்தை நாமாவளியையும் புறம்தள்ளி வேகமாக ஓடினான் குமார்.


“யாத்ரகார் தயவாய் ஷ்ரத்திக்குக. ட்ரெயின் நம்பர் ஒன்னு ரண்டு ஆறு ரண்டு நாலு, திருவனந்தபுரத்திநின்னு சென்னை வர செல்லுன்ன சென்னை மெயில் மூணாமுத்த ப்ளாட்ஃபார்மிலினின்னு புறப்படுகையானு…….பாஸஞ்சர்ஸ் யுவர் அட்டென்ஷன்….ப்ளீஸ்…..


விசில் ஊதவும், பச்சை சிக்னல் விழவும், ரயில் மெதுவாகப் புறப்படத் தொடங்கியது. குமார் பதிவு செய்திருந்த பெட்டியை நெருங்கியதும். வாயிலின் கம்பியைப் பிடித்துக் கொண்டு கையிலிருந்த பெட்டியை உள்ளே வைக்க முயன்றவாறே ஏற முற்பட்ட போது, ஒரு கை நீண்டு அவனது பெட்டியை வாங்கி வைத்துவிட்டு அவன் கையைப் பிடித்து உள்ளே ஏற்றியது.







மூச்சு வாங்கியவாறே, “தாங்க் யு ஸார்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஏறியதும் நின்று உஃப் உஃப் என்று பெருமூச்சு விட்டவாறே சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். உதவிய நபருக்கு இவனை ஏற்கனவே எங்கோ பார்த்திருந்த நினைவு. ரயிலும் வேகமெடுத்தது. மீண்டும் அவனுக்கு உதவிய அந்த நபருக்கு நன்றி சொல்லி விட்டு தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இருக்கையைத் தேடிச் சென்றான். அங்கு ஒரு பெண் மட்டுமே ஜன்னல் அருகில் இருந்தாள். தனது பெர்த்/இருக்கை அப்பெண்ணிற்கு எதிர்புற ஜன்னல் இருக்கை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு அருகில் சென்று பெட்டியை இருக்கையின் அடியில் வைக்கும் போது எதிரே இருந்த ஜன்னல் இருக்கையில் உட்கார்ந்திருந்தவளைக் கண்டதும் திகைத்துவிட்டான். தாரிணி! அவள் அவனை கவனிக்கவில்லை. ஜன்னலில் தலை வைத்துச் சாய்ந்து கொண்டு கண்ணை மூடியவாறு உட்கார்ந்திருந்தாள். இவள் எப்படி இங்கு? அதுவும் தனியாக! என்று அவளைப் பார்த்த திகைப்பில் அவன் மனதில் எண்ண அலைகள் 10 வருடங்களுக்கு முன்னான வாழ்க்கைக்குப் பின்னோக்கிச் செல்லும் கடல் அலைகளைப் போல் இழுத்த நேரத்தில்... 



“ஓ ஒங்க பெர்த்தும் இங்க தானா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான், அவனுக்கு உதவிய அந்த நடுத்தர வயது இளைஞன். குரலைக் கேட்டதும் சட்டென்று தன் கண்களின் ஃப்ரேமை அவனிடம் மாற்றினான் குமார்.  “ஆமா ஸார்” என்று சொல்லிக் கொண்டே, “37 வயது இருக்குமோ? இருக்கலாம். என் வயதும் அதுதானே! ஒரு வேளை தாரிணியின்…. என்று நினைத்த குமார், தன் எண்ணங்களுக்கு ‘கட்’ சொல்லிவிட்டு, தன் பெட்டியையையும் முதுகுப் பையையும் சீட்டின் அடியில் வைத்துவிட்டு உட்கார்ந்தான். மற்ற மூன்று பெர்த்துகளும் காலியாக இருந்தன. அடுத்த ஸ்டேஷன்களில் ஏறலாமாக இருக்கும் என்று குமார் நினைத்த வேளையில், அந்த இளைஞன் கை குலுக்கக் கையை நீட்டிக் கொண்டே,



“ந்யான் சிவா, நீங்க?” என்றான்.


“ஐயாம் குமார்”


“ஸார் சென்னை அல்லே. ஸாரினை கண்டதும்….நம்மள் எங்கேயோ கண்டது போல ஓர்த்து. ஓர்மை கிட்டி...நம்ம ரண்டு பேரும் ஒரு 7, 8 கொல்லம் முன்பு ந்யான் மும்பையிலின்னு சென்னைக்கு ஃப்ளைட்டுல வரும் போழ் என்னோட ஸீட்டுக்கு அடுத்து ஸீட்ல ஸார். நாம கொஞ்சம் பேசினோம். ஸார் எந்தோ வாயிச்சுட்டு வந்தீங்க….” என்று சிவா சொன்னதும் குமார் நினைவுகளைச் சேமிப்புக் கிடங்கில் போட்டுவிட்டு சிவாவை செவிமடுத்தான்.


“ஆமா, சென்னைதான். ம்ம்ம் ஃப்ளைட்லயா? ம்ம்ம்ம்ம்.” ஓ! யெஸ் யெஸ்! நான் உங்கள அன்னிக்கு அதிகம் கவனிக்கலையா…..ஸோ….ஸாரி ஸாரி!!....இப்ப நினைவுக்கு வருது. அப்ப ரொம்ப ஒல்லியா இருந்தீங்க போல…இப்ப நீங்க கொஞ்சம் அதிகமா வெயிட் போட்டுட்டீங்க போல….” வைஃப் சாப்பாடோ என்று கேட்க வந்ததை அடக்கிக் கொண்டான். தாரிணிக்குக் கிச்சன், சமையல் பிடிக்காதே.


“ஆம ஸார். இப்போ தடி கூடிப் போச்சு…”


“சாய்ய்ய்ய், காப்பிஈயீயீய்” என்ற குரலைக் கேட்டதும், சிவா, அவளைத் தட்டி,


“சாயாவோ? காப்பியோ?” என்று அவளிடம் கேட்டுவிட்டு, குமாரிடம்


“இவ என்னோட வைஃப்.” என்று சொன்னான். குமாருக்குத் தான் கட் சொன்ன இடம் தொடர்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்த போது, கண்ணை மூடிக் கொண்டிருந்தவள் சிவாவை நோக்கித் திரும்பவும், முதலில் அவள் கண்ணின் ஃப்ரேமுக்குள் க்ளோசப்பில் சிக்கியது குமார். அவள் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. கரைக்கு வந்து சுழன்று பாறையில் மோதிச் சிதறும் கடல் அலைகளைப் போல பல எண்ணக்கலவைகள் அவள் முகத்தில் பளிச்சிட்டன.


“ந்யான் கேட்டுக்கிட்டுருக்கேன்…,நல்ல உறக்கமோ? என்ன பாக்குற? ஹோ இது குமார் என்று குமார் வண்டியில் ஏறியதைப் பற்றி அவளுக்குச் சொன்னான்…”


குமார் “ஹாய்” என்றான்.


சின்ன ஜெர்க்குடன், “இல்ல எனக்கு சாயா வேண்டா” என்று சிவாவுக்குப் பதில் சொல்லுவது போல் குமாருக்கும் பதில் சொல்லிவிட்டு, இவர் எப்படி இங்கு? அப்போது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறாரோ’ என்று நினைத்துக் கொண்டே குமாரை நேரடியாகப் பார்க்கும் சக்தி இல்லாமல் மீண்டும் ஜன்னலின் பக்கம் திரும்பிக் கொண்டாள். குமாருக்கு அவள் சற்று வெயிட் போட்டிருப்பது போல் தோன்றியது. அவளுக்குப் பிடிக்காதே! அப்படியென்றால் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான். டைவோர்ஸான கணவனும் மனைவியும் திடீரென்று இப்படி நேருக்கு நேர், அதுவும் மாஜி மனைவியின் கணவனும் இருக்க, எதிரெதிரே அமர்ந்து கொண்டு பல மணி நேரம் பயணிப்பது என்பது தர்மசங்கடமான நிலைதான்’ .என்று நினைத்துக் கொண்டிருந்த குமாரின் அந்த தர்மசங்கடமான நிலையைச் சற்று தளர்த்தியது சிவாவின் குரல்.


“ஸாருக்குச் சாயாவோ? காப்பியோ?”


“நான் இப்பத்தான் வரதுக்கு முன்னாடி லஞ் சாப்டுட்டு வந்தேன் இப்ப வேண்டாம் ஸார்.”


“ஓ! எனிக்கி எப்போழ்தும் லஞ்சு சாப்பிட்டதும், 10, 15 மினிட்டுல காப்பி குடிக்கணும்.” தமிழும், மலயாளமும் கலந்து பேசினான் சிவா.


இனி சிவா என்றே கூப்பிடலாமோ? சிவா நெருங்கிவிட்டானே என்று குமார் நினைத்தான். “சாப்பிட்டதும் சாய் குடிப்பது நல்லதில்லையே” என்று நா வரை வந்த சொற்களை விழுங்கினான். சேமிப்பில் இருந்த நினைவுகள் மூளையின் கரைக்கு வந்து மோதியது.


‘தாரிணியும் அப்படித்தானே! சாப்பிட்டதும் 10 நிமிடத்தில் சாயா வேண்டும் என்பாள். சாப்பிட்டதும் சாயா குடிப்பது நல்லதல்ல, உடலுக்குத் தீங்கு என்று நான் சொன்னதை அவள் கேட்டதில்லையே. அவளுக்கு டீ குடித்துக் கொண்டே இருக்க வேண்டுமே! ஆனால், இன்று வேண்டாம் என்று சொல்லுகிறாளே. மாறிவிட்டாளோ அல்லது என்னைக் கண்டதால் இருக்குமோ?’


சிவா தமிழும், மலயாளமும் கலந்து பேசியதாலும், லொட லொட பேர்வழியாக இருந்ததாலும் தாரிணிக்கு இவன் ஏற்றவன்தான் என்றும் குமாருக்குத் தோன்றியது. குமார் கொஞ்சம் அமைதிதான். சிவாவிடம் எதுவும் கேட்கவே வேண்டாம் போல. அவனே எல்லாம் சொல்லிவிடுவான் என்று தோன்றியதால், தாரிணியைப் பற்றி அறியும் ஆர்வம் மேலிட்டதை குமார் ஏனோ தடுக்க முயற்சி செய்யவில்லை.

“நாங்க தாமசம் இங்கதான். சென்னைக்கு ஒரு ஃபங்க்ஷனுக்கு வேண்டி போறோம். வைஃபுக்கு ஃப்ளைட்டுதான் இஷ்டம். அல்லெங்கில் ரயிலில ஏசி கோச். பக்ஷே ஏசி டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிட்டில்ல. இ ஸ்லீப்பர் கன்ஃபார்ம் ஆச்சு. அவளுக்கு தேஷ்யம். அதானு பேசாம அங்கேயே பார்த்துட்டு இருக்கா”


தாரிணி திரும்பிப் பார்த்தாள். சிவா மேலும் என்ன சொல்லப் போகிறானோ என்றக் கோபமாக இருக்கலாம். குமாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வெளியில் பார்வையைச் செலுத்தி ஜன்னலில் சாய்ந்து கொண்டாள். என்றாலும் அவளது கவனம் எல்லாம் இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்தான் இருந்தது என்பதும் தெரிந்தது.


“ஹாங்க் எனக்கும் அதேதான். புக் பண்ணும் போதே இது கன்ஃபார்ம்டா இருந்ததுனால ஏசி தட்காலும் ட்ரை பண்ணலை.”


வண்டி கொல்லத்தில் நின்றது. இருவர் இவர்கள் இருந்த பகுதியில் வந்து தங்கள் பெர்த்துகளை உறுதிப் படுத்திக் கொண்டு உட்கார்ந்தனர். வண்டி புறப்பட்டது.


“ஸார் தமிழ் அல்லே?!” – சிவா

“ஆமா. நீங்க தமிழ் கொஞ்சம் பேசுறீங்களே”


“நாங்க தமிழ்தான். பக்ஷே என்னோட பேரன்ட்ஸ் கேரளத்துல செட்டில் ஆனதுகொண்டு வெளிய மலையாளம், வீட்டுல மலையாளத் தமிழ். ரண்டும் மிக்ஸ் ஆயி போச்சு. தமிழ் வாயிக்க கொஞ்சம் தெரியும்”


“ஓ! ஓகே”. வேறு என்ன பேச என்பது தோன்றாததால், குமார் இடப்புறம் இருந்த சைட் சீட்டுகளின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினான்.


“லொட லோடனு வாஜகம் வேண்டா. அவர்க்கு இஷ்டம் கிடையாது” என்று வாய் வரை வந்ததை டக்கென்று நாக்கைக் கடித்துக் கொண்டு அடக்கிக் கொண்டாள் தாரிணி. வெளியே அஷ்டமுடி காயலின் நீர்ப்பரப்பினைக் காண, இப்புறம் ஜன்னல் பக்கம் திரும்பிய குமாருக்கு தாரிணியின் செய்கை ஏதோ உணர்த்தியது. மனம் மீண்டும் சேமிப்புக் கிடங்கைத் தோண்ட முயற்சிக்க, சிவா விடுவதாக இல்லை.


“ஸார் டயர்டா? உறக்கம் வருதா?”


“அதெல்லாம் இல்ல.” என்று புன்சிரிப்புடன் சொல்லிவிட்டு மீண்டும் தாரிணியின் பக்கம் இருந்த ஜன்னல் வழியாக வெளியில் பார்ப்பது போன்று தாரிணியைக் கவனித்தான். அவள் மனதிலும் பழைய வாழ்க்கையின் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.


‘தாரிணிக்கு இந்த வாழ்க்கை நன்றாகவே பொருந்தியிருக்கும். பிறந்ததிலிருந்து கேரளத்துக் கலாச்சாரத்தில் வளர்ந்த, அதுவும் மிகவும் செல்லமாக ஹைஃபையாக வளர்ந்தவள் கல்யாணமாகி சென்னையில் எங்கள் வாழ்க்கை முறையுடன் அட்ஜஸ்ட் செய்வதற்குச் சிரமப்பட்டாள் என்பதைவிட 25 வயதிலும் கொஞ்சமேனும் மெச்சூரிட்டி இல்லாமல் போகுமா என்று நாங்கள் நினைக்கும் அளவிற்கு நடந்து கொண்டாள். அவளுக்குச் சென்னை பிடிக்கவில்லை’. குமாரின் மனதில் ஓடிக் கொண்டிருந்த நினைவுகள் சிவாவுக்கு எப்படித் தெரிந்ததோ….


“சென்னை பயங்கர சூடு இல்லே? ஸார்?. எந்நாலும், சாருக்குச் சென்னை இஷ்டமாகியிருக்கும். ஸ்வந்தம் நாடல்லே! படித்தம் எல்லாம் சென்னையிலதானா? எனிக்கும் சென்னை இஷ்டம். ஒருவாடு ஓப்பர்சுனிட்டிஸ் உண்டு அல்லே! பக்ஷே என்னோட வைஃபுக்கு சென்னை இஷ்டம் இல்ல.”


“ஓ! அப்படியா. ம்ம்ம்ம் ஸ்கூல் படிப்பு சென்னைலதான். ஆனால் காலேஜ் படிப்பு மும்பை ஐஐடி….பிஎச்டியு…..” குமார் முடிப்பதற்குள்


“ஹோ! ஸார் பயங்கர புத்தி இல்லே” என்றான் சிவா.


குமார் கூச்சப்பட்டான். ஐஐடி பற்றி சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. எல்லாம் ஓர் ஆர்வம்தான். தாரிணி என்ன சொல்கிறாள் என்று அறிய. அவர்களின் பேச்சு ஜெனரலாகவும் தொடர்ந்தது. பின்னர் கொஞ்சம் சிவா மௌனம் காத்தான். குமாரின் நினைவுகள் அவனை பின்னுக்கு இழுத்த நேரம், ரயில் குலுங்கி நின்று நினைவுகளுக்கு ஒரு ப்ரேக் போட்டது. கோட்டயம் ஸ்டேஷன்.


ஜன்னல் அருகில் பழம் பொரி, பழம் பொரி என்ற குரல் கேட்டதும்,


“ஸார்! கேரளத்து பழம் பொரி சாப்பிட்டுண்டோ?” என்று கேட்டான் சிவா.


“இல்லை. அப்படினா?”


“நேந்திரன் பழ பஜ்ஜி தன்னே. பஷே கொஞ்சம் ஸ்வீட்டாயிட்டு இருக்கும். மைதேயில செய்யறது. சாப்பிட்டுப் பாருங்க. உங்களுக்கு இஷ்டமாகிடும்” என்று அவனாகவே சொல்லிவிட்டு, விற்பனையாளரிடம் மூன்று பழம் பொரி வாங்கினான் சிவா. குமார் உடனே தன் பர்சிலிருந்து பணம் எடுத்து, சிவா மறுத்தும் கேட்காமல் பழம் பொரிக்கான பணத்தைக் கொடுத்தான்.


ஓ இதைத்தான் தாரிணி அப்போது சொன்னாளோ? அப்போது இது புரியவில்லை. குமார் குடும்பத்திற்கு இதைப் பற்றித் தெரியவில்லை என்றதும் அவள் கேலி செய்து நகைத்த சம்பவத்தை அசை போட்டுக் கொண்டிருந்த போது


“வைஃபுக்கு இது ரெம்ப இஷ்டம்” என்று சொல்லிக் கொண்டே தாரிணியிடம் ஒரு பழம் பொரியைக் கொடுத்தான். அவள் வாங்கிக் கொண்டு குமாரைப் பார்த்துவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். ‘இதைத்தான் நான் அன்று சொன்னேன் என்ற அர்த்தமோ அந்தப் பார்வைக்கு? என்று குமார் பழம் பொரியை சுவைத்துக் கொண்டே எண்ணங்களையும் அசை போட்டான். பழம் பொரி நன்றாகவே இருக்கிறது. தெரிந்து கொள்ள அன்று முயற்சி செய்திருக்கலாமோ சின்னச் சின்ன விஷயம்தானே! என்றும் நினைத்துக் கொண்டான். சிவாவின் கேள்வி அவனது நினைவைக் கலைத்தது. வண்டியும் புறப்பட்டது.


“சாருக்கு எதுல ஜோலி?”


“என்ன கேட்டீங்க? ஜோலி? ம்ம்…வேலை?..…நான் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை செய்யறேன்.”


“ந்யான் குக்!” என்று சிவா நீளமான புன்சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுத் தொடர்ந்தான். ந்யான் கேட்டரிங்க் டிப்ளமா படிச்சிட்டு கெல்ஃபில் பெரிய ஹோஆட்டலில் ஜோலி செஞ்சேன். வைஃபுக்கு கெல்ஃப் இஷ்டமில்ல. அமெரிக்கே தன்னே இஷ்டம். அதுகாரணம் இப்போ திருவனந்தபுரத்துல செல்ஃபோயிட்டு ஓர்டர் எடுத்துச் செய்யிறேன்.”


இவன் அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறானே! அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் போவானோ? காரணம்? அவள் மீது அன்பு? அல்லது வாழ்க்கைனா அப்படித்தான் என்று அவன் நினைத்திருப்பானோ? இவள் கொஞ்சமேனும் அவனுக்கு விட்டுக் கொடுக்கிறாளோ? என்று மனதுள் நினைத்துக் கொண்டான்.


“ஓ! சூப்பர்! கேட்டரிங்க் ரொம்ப நல்ல தொழில். அதுவும் இப்ப நிறைய டிமான்ட் தான் இல்லையா?” இதைச் சொல்லிவிட்டு குமார் தாரிணியின் பக்கம் இருந்த ஜன்னலைப் பார்ப்பது போல் தாரிணியைப் பார்த்தான். தாரிணியைப் பொருத்தவரை இது கேவலமான தொழில்! அவள் எப்படி இவனை மணந்து கொண்டாள்? என்று நினைத்துக் கொண்டிருந்த போதே, அவளுக்கு வந்தது கோபம். உடனே அவள் சிவாவிடம்,


“இப்ப எதுக்கு அதைக் குறிச்சு பேசணும்?”


“ஸார் அவளை மைன்ட் செய்யண்டா. அவளுக்கு என் ஜோலி பிடிக்கல. பக்ஷே என்னோட சாப்பாடு ரெம்ப இஷ்டம்” என்று சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தான்.


தாரிணி மிகவும் கடுப்பானாள். சிவாவைப் பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். கோபம் கலந்த கண்ணீர் அவள் கண்களில் எட்டிப் பார்த்தது.


ஓ அப்போ இவன் தான் வீட்டில் சமைக்கிறான் போலும். அவள் மாறவில்லை. அல்லது பிடிக்காத திருமணமோ அதனால் தன்னை மாற்றிக் கொள்ளவில்லையாகவும் இருக்கலாம். ஆனால் நல்லகாலம். சிவாவைப் பிடிக்கவில்லை என்று சொல்லி வீட்டை விட்டு இறங்கவில்லையே’ என்று குமார் நினைத்துக் கொண்டு தனது இயல்பிற்கு மாறாகத் தன்னையும் மீறி சிவாவிடம்,


“லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் காம்ப்ரமைஸஸ்தான்! தெரியும். சிவா! நீங்க உங்க வைஃபுக்காக எல்லாமே விட்டுக் கொடுக்கறீங்க போல! பரவாயில்லையே! உங்க வைஃப் ரொம்ப லக்கிதான்!” என்று சொல்லிவிட்டு தாரிணியையும் ஆராய்ந்தான் குமார். அவள் முகம் இறுக்கமாக இருந்தது!


சிவா கொஞ்சம் வெட்கம் கலந்த சிரிப்பை சிரித்துவிட்டு, “யெஸ்! ஷெரியானு! ஜீவிதத்துல ஆரெங்கிலும் ஒரு ஆள் இப்படி ஆகுன்னது உண்டல்லோ ஸாரே!” என்று சொல்லிவிட்டு அவனாகவே தொடர்ந்தான். 


"ந்யங்கள்ட வீடு ரெம்ப பெரிசு ஸார். தோட்டம் கூடுதல் உண்டு.  எல்லா ஜோலிக்கும் ஆட்கார் உண்டு. குக்கிங்க் மாத்திரம் நாங்க செய்வோம். வைஃபினு கூடுதல் ஜோலி ஒன்னும் இல்ல. பின்னே வைஃபிண்ட பேரன்ட்ஸும் பெரிய வீடு வைச்சு கொடுத்தாங்க. வைஃபுக்கு ஒரு சகோதரி மாத்திரம். அவளு அமேரிக்கையிலு. அது காரணம் மற்ற எல்லா ப்ராப்பர்டீஸும் வைஃபுக்கு கொடுத்தாங்க. ஸார் அடுத்த ப்ராவஸ்யம் இங்க வரும் போழ் ந்யங்கள்ட வீட்டுக்கு வரணும்” குமார் புன்சிரிப்பொன்றை உதிர்த்தான்.


“இது இப்ப ரெம்ப ஆவஸ்ச்யம்” என்று தாரிணி முணு முணுத்தாள். சிவா அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.


‘அன்று நான் தாரிணியின் பிரச்சனையைச் சொன்ன போது, தாரிணியின் பெற்றோர் என்னிடமும், என் குடும்பத்தாரிடமும், இப்போது சிவா சொன்னது போல் பேரம் பேசினார்களே! ஆனால் நானோ என் குடும்பத்தாரோ பணத்திற்கு மயங்குபவர்கள் இல்லையே! என்று குமார் அன்று நடந்ததை நினைத்துக் கொண்டான்.


“ஸார் என்ன யோஜன?”


“ஒன்னும் இல்லை சிவா.”


“ந்யங்கள் எங்க போனாலும் சேர்ந்நுதான் போறதுண்டு. சாரோட ஃபேமிலி? அவங்க ஒங்க கூட வரலியா.”


“ஓ!………. இல்லை. இது அஃபிசியல் டூர்.”


“வைஃபுக்கும் ஜோலி உண்டோ?”


“வைஃப் இல்ல.”


“அது ஷெரி! அப்ப கல்யாணம் செய்தில்லையா? இல்ல…….”


“ம்ம்ம் நான் டிவோர்ஸி” என்று சொல்லி விட்டு தாரிணியைப் பார்த்தான். குமாருக்கு முதலில் இதைச் சொல்ல விருப்பமில்லைதான். ஆனால் தாரிணியின் மன நிலையை அறியவே சொன்னான்.  அவள் இவனைப் பார்க்கவில்லை என்றாலும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது.


“ஹோ! கஷ்டமாயல்லோ! ஸார் பின்னே அடுத்து கல்யாணம் செய்தில்லையா? அப்ப ஸார் தனிச்சா இருக்கீங்க”


“ஏனோ, அப்புறம் அடுத்த கல்யாணத்துல ஆர்வம் இல்ல. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை. எல்லோரும் சேர்ந்து இருக்கோம். சிவா, ஸார் ஸார்னு…வேண்டாமே. குமார்னே கூப்பிடலாம்.”


“ஹோ! எனிக்கு அப்படி சீலமாயிப் போச்சு..சார்.” என்று சொல்லி சிறிது நேரம் மௌனம் காத்தான். “எனிக்கும் ஃபர்ஸ்ட் கல்யாணம் டிவோர்ஸ் ஆகிப் போச்சு. ஆ குட்டி கல்யாணத்துக்கு முன்பே அவள்ட ப்ரேமம் குறிச்சு என்னோடு சொல்லியிருந்தா பிரஸ்ச்னமே இல்லாதாகியிருக்கும். பக்ஷே ஆ குட்டி கல்யாணம் கழிஞ்சு வீட்டுக்குள்ள வந்நு விளக்கு வைக்கும் போழ்தானு சொல்லியது. ஆகப் பிரஸ்ச்னம் ஆகி…பின்ன டிவோர்ஸ். ஆ குட்டியிண்ட வீட்டுல டிவொர்ஸ் கேஸ் கன்டெஸ்ட் செய்ததுனால பெட்டெனு டிவொர்ஸ் கிடைக்கல. தாமஸமாகிப் போச்சு.”


“ஓ! கஷ்டந்தான் இல்லையா?”


“என் வைஃப் கிட்ட ஆ குட்டியோட ஃபோட்டோ காட்டிட்டுண்டு. அல்லேடி?” என்று தாரிணியைப் பார்த்தான். அவளோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்தான் சிவா, ”இவள்ட ஆ ஹஸ்பண்ட ஃபோட்டோ ந்யான் காணனும்னு ஆக்ரஹிச்சேன். பக்ஷே இவர் ஆரும் காட்டலை. அது வேண்டானு.”


சிவா கொஞ்சம் அப்பாவிதான் போல. தாரிணியின் பெற்றோர் நல்ல சாமர்த்தியசாலிகள்தான். முதல் கல்யாணம் ஃபெயிலியர் ஆனதால், இந்த இரண்டாவது கல்யாணத்தைக் குறைகள் இருந்தாலும் ஏற்றுக் கொண்டிருப்பான் போலும். ஆனால் எனக்கு முதல் கல்யாணத்தின் தழும்பு இன்னும் போகலையே.’  என்று குமார் நினைத்துக் கொண்டான்.


சிவா தொடர்ந்தான். “ஸார் உங்க கேஸ் கன்டெஸ்ட் கேஸா இல்ல ம்யூச்சுவலா? பாக்க நல்லாயிருக்கீங்க. நல்ல ஜோலி உண்டு. பின்னே எப்படி டிவோர்ஸ் ஆயி?”


“என் கேஸ் முதல்ல கன்டெஸ்ட்னு ஆகி அப்புறம் ம்யூச்சுவல்….ம்ம்ம்ம்ம் எப்படி டிவோர்ஸ் ஆச்சு?...ம்ம்ம்ம்ம்” என்று இழுத்து வெளியே பார்வையைச் செலுத்தினான்.


குமாருக்கு அதைப் பற்றிச் சொல்வது சரியா என்று மனதுடன் விவாதம் நடத்தினான். என்னதான் சிவாவிற்கு, தான் தான் தாரிணியின் முதல் கணவன் என்பது தெரியாது என்றாலும், தாரிணியின் முன் அவளைப் பற்றி அவள் கணவனிடமே சொல்வது நாகரீகம் இல்லையே. அவள் மனம் வேதனைப் படாதோ? என்று நினைத்து என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தான். தாரிணியைப் பார்த்தான்.


தாரிணிக்குக் கொஞ்சம் பயம் வந்தது போல் தோன்றியது. குமார். காட்டிக் கொடுத்து விடுவானோ? அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற எதிர்பார்ப்பில் கடைக் கண்ணால் குமாரைப் பார்த்தாள்,


“சாருக்குச் சொல்ல இஷ்டம் இல்லைனா வேண்டா. பழம் பொரி இஷ்டமாச்சா ஸார்?” என்று சிவா கேட்டதும்


“தாங்க்ஸ் சிவா! அப்படியில்ல… இப்ப வேண்டாம்னு தோணுது. ஹான் பழம் பொரி நல்லாருந்துச்சு. புதுசா ஒன்னை டேஸ்ட் பண்ண வைச்சதுக்கும் தாங்க்ஸ்! சிவா நீங்க தப்பா நினைக்கலைனா, கொஞ்சம் நான் ரிலாக்ஸ் பண்ணிக்கவா?”


“ஹோ! ஸோரி ஸார்! ந்யான் ஒங்க பழைய லைஃப் பத்தி கேட்டு ஹேர்ட் செய்தோ?”


“ஹேய்! நோ! நாட் அட் ஆல்! ஜஸ்ட் கொஞ்ச நேரம்” என்று சொல்லி விட்டு, தாரிணி என்ன செய்கிறாள் என்று ஜன்னல் வழி வெளியே பார்ப்பது போல் ஒரு நோட்டம் விட்டான். அவளுக்கு இப்போது நிம்மதியாக இருந்திருக்கும். சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால், அவள் மூடிய கண்கள் அங்குமிங்கும் வேகமாக அசைந்ததைப் பார்த்த போது அவள் மனதிலும் எண்ணங்கள் ஓடுவது போல் குமாருக்குத் தெரிந்தது.  குமாரின் மனம் சேமிப்புக் கிடங்கில், பாதாளக் கரண்டியை வீசி அள்ளி எடுத்துப் போட்டது. சிவாவிடம் சொல்லுவது போல் மனம் பேசியது.


10 வருடங்களுக்கு முன் ஒரு சுப தினமோ, அசுப தினமோ? தாரிணி எங்கள் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள். மூட் இருந்தால் 7 மணிக்கு எழுவாள். இல்லை என்றால் 9, 10 மணிக்குத்தான் எழுவாள். இல்லை எழுந்திருக்கவே மாட்டாள். அம்மாவுக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக அம்மாவே அவளுக்கும் சேர்த்து எல்லாமும் செய்ய வேண்டியதாக இருந்தது. எங்கள் வீட்டுச் சமையல் கேரளத்துச் சமையல் போல இல்லை, பிடிக்கவில்லை. என்றாள். நான் ஸ்டாப்பாக அர்த்தமே இல்லாமல் படபடவெனப் பேசுவாள். அல்லது பேசாமல் ரூமிற்குள்ளேயே அதுவும் எப்போதும் ஏசி போட்டுக் கொண்டு இருப்பாள்.


வெளியில் செல்வது மிகவும் பிடிக்கும். தன்னை அலங்கரித்துக் கொள்ளவே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வாள். வெளியில் செல்லவில்லை என்றால் சில சமயம் குளிக்கக் கூட மாட்டாள். வெளியில் சாப்பிடுவதுதான் பிடிக்கும். வீட்டிலென்றால் சில சமயம் சாப்பிடுவாள்…சில சமயம் சாப்பிட மாட்டாள். எப்போதும் வெளியில் சுற்ற வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் சினிமாவில் வரும் காதல் ஜோடி போல இருக்க வேண்டும் என கற்பனை உலகில் எப்போதுமே. ஏதோ ஒரு ஆர்ட் ஃபில்மில் நடித்திருப்பதாகக் கூடச் சொன்னாள்.


மணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை, உடனே திருவனந்தபுரம் செல்ல வேண்டும் என்றாள். காரணம் எங்கள் வீடு பிடிக்கவில்லை. அவளுக்கு அவள் வீட்டில் பொறுப்பு கிடையாது. ஊர் சுற்றுவாள். எங்களிடம் அனுமதி கூடக் கேட்காமல், உன்னை பிடிக்கவில்லை, குட்பை என்று சொல்லிவிட்டு தன் அப்பாவை அழைத்து உடனே ஃப்ளைட் டிக்கெட் புக் செய்து சென்றுவிட்டாள். எங்கள் சொல் எதுவும் எடுபடவில்லை. எங்கள் அனைவருக்கும் ஷாக்…


ஸாரி என்று சொல்லிக் கொண்டு வந்தாள். ஏற்றுக் கொண்டோம். என் அம்மா அவளுக்குச் சமைப்பதற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார். அம்மா பொறுமைசாலி. அதே சமயம் கண்டிப்பானவர். தாரிணிக்கு அது பிடிக்கவில்லை. சீரியல் பார்க்க வேண்டும் என்பாள். எல்லா சினிமாக்களும் பார்க்க வேண்டும் என்பாள். அதுவும் ரிலீஸ் ஆகும் முதல் நாளே! நாங்கள் ஹனிமூன் கூட சென்று வந்தோம் என்றாலும் அவள் எதிர்பார்த்த அளவிற்கு என்னால் எப்போதும் அவளை வெளியில் அழைத்துச் செல்லவோ அல்லது அவளைத் திருப்திப்படுத்தவோ முடியவில்லை. என் பணியும் அப்படி. மூட் அவுட் ஆனாள். கோபப்பட்டாள். உன்னைப் பிடிக்கவில்லை என்று தாலியைக் கழட்டி ஸ்வாமி படத்தின் முன் வைத்துவிட்டாள். அம்மாவும் அப்பாவும் பதறிப் போனார்கள். நான் உட்பட வீட்டில் உள்ள அனைவருமே. அவள் யாரையாவது விரும்புகிறாளா? என்றும் கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டாள். அப்படி இறங்கியது இரண்டாம் முறை. அவளது அம்மா வந்து அவளை அழைத்துப் போனார்.


தாரிணிக்கு ஏதோ பிரச்சனை இருப்பது தெரிந்தது. கல்யாணத்திற்கு முன்பும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவளது பெற்றொரிடம் சொன்ன போது, அவளிடம் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூலாகச் சொன்னார்கள். நாங்கள் அன்பாக இருக்கவில்லையா என்ன? புரியவில்லை. மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும், மீண்டும் அவள் ஸாரி என்று சொல்லிக் கொண்டு வந்த போது மனம் இளகியது. அவளை ஏற்றுக் கொண்டேன். கொண்டோம். அவளை நல்வழியில் திருத்த முயன்றோம்.


ஒரு மாதம் அப்படியும் இப்படியுமாக ஓடியது. நாங்களும் சரியாகிவிடுவாள் என்று நம்பினோம். அவளது வேவ்லெங்க்தைப் புரிந்து கொண்ட, அவளை மகிழ்வாக வைத்துக் கொள்ளும் பையன் என்று ஒருவனைப் பற்றிச் சொன்னாள். நாங்கள் விசாரித்தோம். ஆனால் அந்தப் பையன் ஜஸ்ட் ஒரு நண்பன் என்று தெரிய வந்தது. வேலைக்குப் போனால் நல்ல சேஞ்ச் இருக்கும், உலகைப் புரிந்துகொள்வாள் என்று அவளை வேலைக்குப் போகச் சொன்னோம். அவளும் சென்றாள். 10 நாட்கள் தான். அங்கு வேலைப்பளு, டென்ஷன் என்று விட்டுவிட்டாள்.


அவளுக்குத் தான் நினைத்தது உடனே நடக்க வேண்டும். அவளது தோழிக்குக் கல்யாணம் வந்தது. கல்யாணத்திற்கு முன் தோழியர் பார்ட்டி என்று ஏதோ ரிஸார்ட் புக் செய்திருப்பதாக அவளை அழைத்தாளாம். அதற்கு ஒரு மாதம் முன்பே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து உடனே தன் வீட்டிற்குப் போக வேண்டும் என்று அடம் பிடித்தாள். நாங்களும் இது நல்லதல்ல என்று அவளை உட்கார்த்தி அட்வைஸ் செய்தோம். அவளுக்குக் கோபம் வந்துவிட குட்பை ஃபார் எவர் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டாள். அவளுக்குத் தாம்பத்தியத்தில் பயம் இருந்ததால், எங்களுக்குள் ஒன்றும் பெரிதாக நடந்திருக்கவில்லை. ஜஸ்ட் 8 மாத மண வாழ்க்கை. அதில் பெரும்பாலும் அவள் பிறந்த வீட்டில்தான் இருந்தாள்.


என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்பினேன்…” வண்டி பெரிய ப்ரேக் சத்தத்துடன் சிக்னலுக்காக நின்று குமாரைத் தட்டி இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது. பெருமூச்சொன்றை உதிர்த்த குமார் பாத்ரூம் வரை சென்று முகம் கழுவி வந்தான்.


“ஸார் இப்ப ஓகேயா?” என்றான் சிவா.


“ம்.. பெட்டர் நௌ”


“சாய்ய்ய்ய்ய்ய்ய” என்று வரவும் குமார் சிவாவிடம் கேட்டுவிட்டு, தாரிணிக்கு வேண்டுமா என்பது போல் அவளைப் பார்த்தான். சிவா அவளுக்கும் வாங்கச் சொல்லவே குமார் மூன்று ‘சாயா’ வாங்கிட,. சிவா அதனை தாரிணியிடம் கொடுத்தான். சிக்னல் கிடைத்ததும் வண்டி மெதுவாகப் புறப்பட்டது. இப்போது தாரிணியின் மனம் வேகமெடுத்தது.





“நான் தானே இறங்கி வந்தேன். குமார் வீட்டில் எல்லோரும் அன்பாகத்தானே இருந்தார்கள். குமாரும் அன்பாகத்தானே இருந்தார். அப்போது எனக்கு என்னாயிற்று? நான் குமாரை என் விருப்பப்படி இல்லை என்று சொல்லி வேண்டாம் என்று வந்தது தவறுதான். அந்த ரணத்தில்தான், நான் மீண்டும் என்னை ஏற்றுக் கொள்ளக் கெஞ்சிய போது அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். என்றாலும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாமே! குமார் மறுபடியும் திருமணம் கூட செய்துகொள்ளவில்லையே! ஏனோ? என் நினைவாக இருக்குமோ? ஆனால் அவர் தானே டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்பினார். என்னால் தனியாக இருக்க முடியாது என்று எனக்கு மீண்டும் மறுமணம்…இதோ இவர். என் மனம் இதையும் ஏனோ ஒப்பவில்லையே. பழைய வாழ்க்கையையே நினைக்கிறதே.” என்று நினைத்த தாரிணியின் கண்ணில் நீர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது…


பக்கத்துத் தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாகக் க்ராஸ் செய்தது. குமாரின் மனதிலும்….


“அவள் கெஞ்சினாளே! எனக்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் கொடுங்கள். நான் மாறுகிறேன்….என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று. ஆனால், மூன்று முறை ஏற்பட்ட ரணத்தில் நான் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். அவள் அப்படிச் செய்தது சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் தெரிந்து எல்லோரும் கேள்வி கேட்க, என் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு வேதனைப்பட்டார்கள். ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியம் அப்போது என் மனதில் இல்லையே!” என்று காஃபியைக் குடித்தவாறே நினைவில் மூழ்கியிருந்தவன் டக்கென்று,


“சிவா! நீங்க எப்படி டிவோர்ஸ் ஆச்சுனு கேட்டதுக்குச் சுருக்கமா சொல்றேன். என் மாஜி மனைவியை என்னாலயும் சரி, எங்க குடும்பத்தாலயும் சரி அவங்க எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தி மகிழ்ச்சியா வைச்சுக்க முடியலை. உங்களை மாதிரி எல்லாம் என்னால மூழுசா காம்ப்ரமைஸ் பண்ண முடியலை. ஸோ அவங்களுக்குப் பிடிக்காம போனது நியாயம் தானே! இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு…”


“ஸார்! அதே! காம்ப்ரமைஸஸ்! பக்ஷே…….போட்டு அது வேண்டா”. சிவா, எதையோ அடக்கிக் கொண்டது போல் தோன்றியது குமாருக்கு. “உங்க சைட் மாத்திரம் சொன்னீங்க. சாரமில்ல. ந்யான் ஒன்னு கேட்கட்டா….கலியாணத்தினு ஜாதகம் எல்லாம் பாக்குறாங்க. மேச்சுனு சொல்லி கலியாணமும் நடக்குது. பின்னே எங்ஙன டிவோர்ஸ் ஆகுது?”


“ஹ்யூமன் எரர் இன் கேல்குலேஷன்ஸ் ஆக இருக்கலாம். எனக்கு ஜோஸ்யத்துல நம்பிக்கை இல்லை. மேன் ப்ரொப்போஸஸ் காட் டிஸ்போஸஸ். கல்யாணம் நடக்கும்னு ஜோசியர் சொல்லிடுவாங்க. ஆனா, மனப்பொருத்தம் பத்தி எல்லாம் மோஸ்ட் ஆஃப் த ஜோசியர் சரியா சொல்லறது இல்லை. மனுஷங்க தானே! இதெல்லாத்துக்கும் மேல இறைவன் இருக்கார் இல்லையா அவர் கேல்குலேஷன்ஸ் யாராலும் கணிக்க முடியாதே! போன பிறப்பில் விட்ட குறை தொட்ட குறையா இருக்கலாம் இப்படியான வாழ்க்கைனு சொல்லி நாம ஜஸ்ட் சமாதானம் செய்துக்க வேண்டியதுதான்” இதைக் கேட்டதும் தாரிணியின் மனம் வெம்பியது.


“ம்ம்ம்ம் அப்படித்தான் இருக்கணும்! அப்படி நோக்கியால், என்னோட முதல் வைஃப்? ஆ குட்டி சில மணிக்கூர் என்னோடு இரிக்கணும்னு விதிச்சதாயிருக்கும். அல்லே ஸார்?”


“ம்ம்ம். அப்படி நினைச்சு ஒரு மனச் சமாதானம். இல்லைனா மனசை அடக்க முடியாதே! அக்னி சாட்சியா தாலி கட்டுறோம்….ஆனா அந்த அக்னி டிவோர்ஸுக்குச் சாட்சியா வரதில்லையே!!....அன்னிக்குத் தாலி கட்டினதும் பல பெண்கள், எனக்கு அப்ப வைஃபா வந்தவளை அதிர்ஷ்டக்காரி, இந்த ரெண்டாங்க்கெட்டான் அசட்டுப் பெண்ணுக்குப் பாரு அதிர்ஷ்ட லைஃப் அப்படினு எல்லாம் கமென்ட் அடிச்சதா காதுல விழுந்துச்சு. முடிவு? இப்போது அதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.” என்று சொல்லி குமார் தன் கண்களில் எட்டிப் பார்த்த நீரை அடக்க வெளியில் வேடிக்கை பார்த்தான்.


பாலக்காடு ஸ்டேஷனில் நின்ற ரயில் திடீரென்று சற்று பின்னோக்கிச் சென்றது.


“ரயில் பின்னோட்டு செல்லுனது போல லைஃபும் பின்னோட்டு போகாதே ஸார்!?”


“நெவர் டர்ன் பேக்! அதுலருந்து பாடம் மட்டும் எடுத்துக்கணும். அதுதான் நல்லது சிவா! எதையும் சரி செய்ய முடியாதே! நம்ம வாழ்க்கைப் பயணமும் ரயில் பயணம் மாதிரிதான்” என்று குமார் தத்துவம் சொன்னாலும், கண்கள் மின்னியது கண்ணீரினால். தூசியைத் துடைப்பது போல் துடைத்துக் கொண்டான். சிவாவைத் தவிர மற்ற இருவரின் மனதிலும் உணர்வுடன் ஆன டெலிட் செய்யக் கஷ்டப்படும் நினைவுகள், திணறல்கள். அதன் பின் அங்கு மௌனம் நிலவியது.


கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் மெதுவாக நுழைந்தது. குமார் தன் பெட்டி மற்றும் முதுகுப் பையை எடுத்துக் கொண்டான். நைஸ் டு மீட் யு சிவா! இதுதான் ரயில் ஸ்னேகமோ? பை மிஸஸ் சிவா! டேக் கேர்!” என்று சொல்லி தாரிணியை நேருக்கு நேர் பார்த்துவிட்டு. சிவாவின் கையைக் குலுக்கிவிட்டு குமார் இறங்கினான். சிவா தனது விசிட்டிங்க் கார்டை குமாரின் கையில் கொடுத்தான். இறங்கி யாருமில்லாத இடம் சென்றதும், அதுவரை கட்டுப்படுத்திய உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் முகத்தைக் கர்சீஃபால் மூடிக் கொண்டு பொங்கி அழுதான். தாரிணியும் பொங்கிய அழுகையைக் கட்டுபடுத்த முடியாமல் யாருக்கும் தெரியாமல் அழ வேண்டி பாத்ரூமை நோக்கிச் சென்றாள்.









நன்றி  :  படங்கள் இணையம்.

50 கருத்துகள்:

  1. தேஷ்யம் என்றால் என்ன கீதா? கோபம் என்று அர்த்தமோ?

    பதிலளிநீக்கு
  2. நீளத்தைப் பற்றிக்கவலைப்படாமல் படிக்க வைக்கிறது, அடுத்து என்ன ஆகுமோ என்கிற ஆவல். மலையாள வசனங்களுடன் புதிய பாணியில் சுவாரஸ்யமான கதை கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்......உங்கள் பாராட்டிற்கு....வேறு வார்த்தைகள் இல்லை...இத்தனை....ஊக்கம் கொடுப்பதற்கு....நன்றி நன்றி நன்றி....

      என்ன நம்ம மக்கள் பூசார்....ஏஞ்சல் இல்ல கும்மி அடிக்க

      நீக்கு
    2. நான் மகளின் ப்ரோம் பங்க்ஷனில் விஷயத்தில்பிசியாருந்தேன் அதான் லேட்டாகிடுச்சி ..
      ஊரில்லாம் இங்கே ஒரே நேரம் இந்த ப்ரோம் ஈவ்னிங் நடக்குது அதனால் ஹெர்ட்ரெஸ்ஸிங் அப்பாயிண்ட்மெண்ட்ஸ் எடுக்க ஓடிட்டிருந்தேன் நாளைக்குதான் ப்ரோம் :) நல்லவேளை இப்போ கண்ணில் பட்டது வந்திட்டேன் கீதா :)

      நீக்கு
    3. ஓ ஆமாம் ல ப்ரோம் ஃபங்கஷன்!! ஏஞ்சல் உங்கள் விருப்பப்படி அஃப்கோர்ஸ் என் விருப்பப்படி நீங்கள் ஊருக்குச் செல்லும் முன் போட்டாச்சு...உங்கள் கண்ணிலும் பட்டாச்சு!!! மிக்க மகிழ்ச்சி ஏஞ்சல்......பூஸார் தான் காணவில்லை...

      கீதா

      நீக்கு
  3. நிச்சயமாக அதிரா, ஏஞ்சலை மிஸ் செய்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்....சொல்லிட்டு வரேன் நீங்கலும் அதே....

      நீக்கு
    2. நான் இன்னும் பிளைட்டில் கால் வைக்கலை :) போனில் பெரிய கமெண்ட்ஸ் டைப்பறதுக்குள் தப்புத்தப்பா வரும் அதான் இப்போ தான வர நேரம் கிடைச்சது

      நீக்கு
    3. ஓ! ஏஞ்சல் இன்னும் பறக்கலையா!! என்றாலும் வந்து கருத்து சொன்னீங்களே மிக்க நன்றிப்பா...

      ஆமாம் மொபைல்ல அடிக்கும் போது தப்புத் தப்பா வருது...அடிக்கக் கஷ்டமாவும் இருக்கும்.

      கீதா

      நீக்கு
  4. முதலில் நன்றி. ஒரே பகுதியாகப் போட்டதுக்கு. நான் படித்துவிட்டு எழுதுகிறேன். (நாளைக்குள்). நீங்கள் ரெண்டு பகுதியாகப் போட்டிருந்தாலும் பிரச்சனை இல்லை, ஏனெனில் உடனேயே படிக்கமுடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை....உங்கள் கருத்திற்கு வெயிட்டிங்....

      நீக்கு
  5. நன்றாக உள்ளது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ அசோகன் குப்புசாமி....தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்ம்....

      நீக்கு
  6. //நெல்லைத்தமிழன் கொடுத்த ஐடியாபடி கீதா ரெங்கன் கதையை முதலில் இங்கு பப்ளிஷ் செய்திருக்கிறோம். //
    தாங்க்ஸ் நெல்லைத்தமிழன் அன்ட் நம்ம ஏரியா ..

    யெஸ் நானும் நினைச்சேன் முதலில் கதைகளை இங்கே பப்லிஷ் செய்தா அனைவரும் வாசித்து இங்கேயே கருத்துக்களை கூறலாம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பா வாங்க ஏஞ்சல்! பயண வேலையில் பிஸியாக இருந்து வருவீர்களோ என்று நினைத்தேன்/தோம்....அதுக்கிடையிலும் வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஆம் எனக்கும் இதே தான் தோன்றியது. கௌ அண்ணாவிடம் (பார்ப்போம் பூஸார் ராயல்டி கேட்டு ஓடி வருகிறாரா என்று!!!!) நானும் ஒரு ரிக்வெஸ்ட் போட்டேன். நெதவும் இங்கு சொல்லியிருப்பதைப் பார்த்தேன். ஸோ இங்க வந்தாச்சு!!! ரொம்ப தாங்க்ஸ் கௌ அண்ணா அண்ட் ஸ்ரீராம்! என் கதை தான் முதலில்!!நன்றி நன்றி அதுக்கும்....

      கீதா

      நீக்கு
  7. //“லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் காம்ப்ரமைஸஸ்தான்! தெரியும்.//

    மிகவும் சரியான வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மையும் கூட பொறுமைக்கும் எல்லை உண்டுதான் ஆனால் ..தாரிணி அடம்பிடிக்கும் சிறு குழந்தை அவளுக்கு பெரிய தண்டனையாக அமைந்து விட்டது விவாகரத்து ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! தாரிணிக்குப் பெரிய தண்டனைதான்! குழந்தை போன்ற ஒரு சில பிரச்சனைகள் உள்ள பெரிய குழந்தை....குமாரின் வீட்டிலும் முயற்சிகள் எடுத்தும் அதன் பின் அவர்களுக்குப் பொறுமை போய்....அப்படி முடிந்துவிட்டது....வாழ்க்கையே ஒரு புதிர்தானே. எத்தனை ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கிறது.! ஒவ்வொரு மணித் துளியுமே ரகசியமாகத்தான் கடந்து செல்கிறது. மனித மனங்களுக்கும் அந்த நொடி ரகசியத்தை அறிய கடினமாகத்தான் இருக்கிறது. அதனால் தான் முடிவுகள் பல்வேறாகிறது...மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. பூஸார் வந்தால் தாரிணிக்குக் கிடைத்தது பெரிய தண்டனை என்று தேம்ஸில் பெண்கள் போராட்டம் உண்ணாவிரதம்னு ரீயுடன் தொடங்கிவிடுவார்!!! பூஸார் எங்கேயோ எஞ்சாய் செய்து கொண்டிருக்கிறார். எஞ்சாய் செய்யட்டும் அப்புறம் இருக்கவே இருக்கு அடிக்கடித் தேம்ஸில் குதிப்பது போராட்டம் என்று..ஹஹஹஹ்

      கீதா

      நீக்கு
  8. வாழ்த்துக்கள் கீதா ,,அழகிய மலையாளம் கலந்த தமிழில் எழுதியிருக்கீங்க ,..சிவா காரெக்டர் இன்னொசென்ட் அண்ட் லொடலொட பெட்டி போல மனதில் வைக்காமல் பேசுவதும் அழகு ..குமாரும் தாரிணியும் பிரிந்திருக்கக்கூடாதோ என தோன்றுகிறது ..
    ..ஆனால் கடவுள் எழுதிய தீர்ப்பு அதை மாற்ற இயலாது ..
    அதே போல நெவர் டர்ன் பேக் ..போன விஷயங்கள் எதுவும் நமக்கு கிடைக்கப்போவதில்லை ..அதைவிட திரும்பி பாராமல் இருப்பதே நல்லது ..விவசாயி உழவு நிலத்தில் கால் வைத்து இறங்கியபின் பின்னூகி பார்க்க கூடாது என்பார்கள் ..எது வருகிறதோ இனி அதை face செய்யணும் தாரிணியும் குமாரும் ..பழைய நினைவுகள் ரெயில் பயணத்தோடு போய்விடட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஒவ்வொரு கேரக்டர் கட்டிங்கும் அருமையா காட்டியிருக்கார். அவங்களோட இயல்பை அவங்கவங்களோட பேச்சுல கொண்டு வந்திருக்கார். தாரிணிக்குக் கிடைத்த தண்டனை பெரிசா என்று மனதில் தோன்றுவதும், தண்டனை கொடுத்த குமாரேயும் தண்டனை அனுபவிப்பதும் மனதில் நிற்கிறது.

      நீக்கு
    2. ஏஞ்சல் ரொம்ப நன்றிப்பா....வாழ்த்திற்கு!! ஒன்று மட்டும் உறுதி ஏஞ்சல். ஜாதகமோ, ஜோஸ்யமோ...எதுவாக இருந்தாலும்....எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது கடவுள் எழுதும் தீர்ப்பு! அது பலசமயங்களில் நமக்குக் கோபத்தை வரவழைக்கலாம். ஆனால் அதில் மறைமுகமான நன்மைகள் இருக்கும் அது ரகசியம்தான். எனக்கும் கேள்விகள் எழும். ஏன் இப்படி அப்படி என்று. சிலதிற்கு விடை கிடைக்கும்...சிலதிற்கு விடை கிடைக்காது...கிடைக்கும் விடைகள் சமாதானமாகவும் இருக்காது. ஏதோ ஒரு தத்துவத்தில் மனதை அடக்கணுமே இல்லைனா அது பிறழ்ந்துடுமே!! அதனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் குமாரும் தாரிணியும் அதனை அவரவர் தத்துவ நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்துக் கொண்டு இனி ஆவதை ஃபேஸ் செய்ய வேண்டும்...

      கீதா

      நீக்கு
    3. மிக்க நன்றி ஸ்ரீராம்! உங்கள் பாராட்டிற்கும், நல்லா கூர்ந்து வாசித்து நான் என்ன நினைத்து எழுதினேனோ அதனை பிரதிபலித்ததிற்கு.

      ஸ்ரீராம் இதிலிருந்து என்ன தெரியுதுனா...தொடரா போடறதை விட ஒரே பார்ட்டா இல்லைனா அடுத்தடுத்து நெத சொல்லியிருப்பது போல போட்டா கதை ஓட்டம் விடாம இருக்குமோ...

      கீதா

      நீக்கு
    4. கௌதமன் அண்ணாவுக்கு மிகப் பெரிய நன்றி. கரு கொடுத்து கதை எழுதச் சொல்லி ஊக்கம் கொடுப்பதற்கு.... எங்கள் ப்ளாக்-நம்ம வீடு, எங்கள் க்ரியேஷன்ஸ் - நம்ம ஏரியா இப்படி எழுத்தாளர்களை, எழுதாதவர்களைக் கூட எழுத வைத்து ஆர்வம் கொடுத்து ஊக்குவித்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு, கௌரவிப்பது என்பது பெரிய விஷயம்!! அதற்கு உங்கள் இருவருக்கும் பெரிய பூங்கொத்து, ஆளுயர ரோஜா பூமாலை(இந்த ரோஜா உதிராத ரோஜாவாக்கும்...ஐயோ நார்தானே மிஞ்சும் நீங்க போடறதுக்குள்ளனு குரல் கொடுக்கவேண்டாம் ஹிஹிஹி) யப்பா தூக்க முடியலைப்பா...நெத, பூஸார், ஏஞ்சல், கில்லர்ஜி, ராரா எல்லாரும் வந்து கை கொடுங்கப்பா....

      இப்ப நம்ம வீடும் நம்ம ஏரியாவாக விரிந்து வருவதும் மிகப் பெரிய மகிழ்ச்சி!! அதாகப்பட்டது சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு!! என்று எடுத்துக் கொள்ளலாமா!!!! பின்ன நெத, பூஸார், ஏஞ்சல் எல்லாரும் நள/நளாயினி பாகம் செய்து அசத்துகிறார்களே....பெரிய பெரிய எழுத்தாளர்களின் கதைகள் வெளியாகிறதே!!

      வெற்றி நடை போடட்டும் இரு வலைத்தளங்களும்....மிக்க நன்றியும், வணக்கமும்....யாராவது ஜோடா குடுங்கப்பா...இதப் பேசறதுக்குள்ளயே குரல் எல்லாம் நடுங்குது!!

      கீதா

      (ஸ்ரீராம் கௌதம் அண்ணா உணர்சிவசப்பட்டெல்லாம் மைக் பிடிக்கலை...ஹிஹிஹி....உண்மையான, மனப்பூர்வமான கருத்து. இதை எங்கள் தள நண்பர் துளசியும் வழிமொழிகிறாராம்....)

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி!!! பின்னே வாயிச்சுட்டு வரணும்!!!! tati baed qara'a!!!!kama yasmah alwaqt!!!!ஹஹஹஹ இதற்கு மொழி இல்லை. எந்த மொழியில் சிரித்தாலும் இந்தச் சத்தம்தானே!!

      கீதா

      நீக்கு
  10. கதை நல்லா இருக்கு கீதாக்கா...

    பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமலே ரொம்ப சுவாரசியமா கதையை எழுதி இருக்கீங்க...

    ஆம் காலம் தவறிய உணர்வுகளால் பயன் இல்லை...திரும்ப குமார் தாரணியை ஏற்றுக் கொண்டிருந்தாலும்...மீண்டும் அதே சிக்கல்கள் தான் ஏற்றப்பட்டு இருக்கும்...

    நானும் போன மாதம் தான் பழம் பொரி சாப்பிட்டு பார்த்தேன்...வித்தியாசமாய் இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு! ஆம் எல்லாவற்றிற்கும் நேரம் இருக்குனு சொல்லறது அதுக்குத்தானோ??!!

      ஹை நீங்க பழம் பொரி சாப்பிட்டீங்களா!!! சூப்பர்!!! கேரளா சென்றிருந்தீர்களோ!!? செய்வதும் எளிது. நான் வீட்டில் செய்வதுண்டு...

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
    2. இல்ல அக்கா கேரளம் எல்லாம் போகல..பழம் பொரி அவருக்கு பிடிக்கும்..சோ எனக்கும் வாங்கி தந்தார்..

      ஆன அடுத்த பதிவு திருச்சூர் பத்தி தான்...

      நீக்கு
  11. அருமையான கதை. ஒவ்வொருவர் குணநலங்களும் அலசி ஆராய்ந்து சொன்ன விதம் அருமை.
    சில பிரிவுகள் நல்லது. சில பிரிவுகள் வேதனை தரும்.

    //“ரயில் பின்னோட்டு செல்லுனது போல லைஃபும் பின்னோட்டு போகாதே ஸார்!?”


    “நெவர் டர்ன் பேக்! அதுலருந்து பாடம் மட்டும் எடுத்துக்கணும். அதுதான் நல்லது சிவா! எதையும் சரி செய்ய முடியாதே! நம்ம வாழ்க்கைப் பயணமும் ரயில் பயணம் மாதிரிதான்”//

    சிவா, குமார் சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா மிக்க நன்றி கருத்திற்கும் பாராட்டிற்கும்....

      ஆம் நாம் பழசிலிருந்து பாடம் தான் கற்க முடியும் மீண்டும் அதைப் பெறவோ மாற்றவோ முடியாதே இல்லையா...மிக்க நன்றிக்கா...

      கீதா

      நீக்கு
  12. கதையை முழுவதுமாகப் படித்தேன். மொழி அவ்வளவு கஷ்டமாயில்லை.

    முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும், இங்கதான் சந்திக்கணும் என்று சொல்லும் கதைகளில் பெரிதாக திருப்பத்தைக் கொடுக்கமுடியாது. ஆனாலும் வித்தியாசமான களம், உரையாடல்கள். யாருக்குத்தான் டைவர்ஸ் கதைகளைப் படிக்க மனது இருக்கும்? நன்றாக எழுதியிருக்கீங்க.அதேசமயம், சிவாவின் உரையாடலைப் படிக்கும்போது, அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

    ரெண்டு கிளைகள் சேர்ந்து புதிய மரமாக பதியன் போடும்போது, இடைஞ்சல்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி வாழ்வதுதான் நம்ம சாமர்த்தியம். நம்முடைய க்ளோனையே நாம் திருமணம் செய்துகொள்ள இஷ்டப்படுவோமா (யாருமே.. அதாவது டிட்டோ குணம், எண்ணங்கள்). 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது' என்று சொல்வதே, கடவுளை முன்னிறுத்தி வாழ்க்கையை வாழ்ந்துவிடு என்று சொல்வதற்குத்தான்.

    ரொம்பவும் ரசித்த வரிகள்.
    "ரயில் பின்னோட்டு செல்லுனது போல லைஃபும் பின்னோட்டு போகாதே ஸார்!"
    "ஆ குட்டி சில மணிக்கூர் என்னோடு இரிக்கணும்னு விதிச்சதாயிருக்கும்"


    நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    "இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னைக்" - "ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்"-திருப்பாவை, "இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி"-வாரணமாயிரம் - எதிலேயிருன்ந்து அடித்தீர்கள்?

    தாமசம் இங்கதான் - தாமசம் இவிடத்தான் என்பதுதானே இயல்பா வரும் (தேஷ்யம், ஆக்ரஹிச்சேன் லாம் உபயோகப்படுத்தற ஆளுக்கு).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      //முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும், இங்கதான் சந்திக்கணும் என்று சொல்லும் கதைகளில் பெரிதாக திருப்பத்தைக் கொடுக்கமுடியாது.// ஆமாம். கண்டிஷனல் கதை.

      அடுத்த வரிகளுக்கு மிக்க நன்றி....

      சிவா கேரக்டரை எழுதும் போது அவன் பேசிய முதல் வரியை எழுதிய போது என்னை அறியாமல் நான் (பல சமயங்களில் என் உறவினர்களோடு பேசும் போது பாலக்காடு/கேரள/பிராமணர் மலையாளம், அதுவே வந்துவிட்டது. அப்படியே அதை நகர்த்திவிட்டேன். அதுவும் லொட லொட கேரக்டர் என்று மனதில் பதித்துவிட்டேன். எழுதும் பொது எனக்கும் அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் மனதில் வந்தார். ஸோ அப்படியே நகர்த்திவிட்டேன்!
      எங்கள் ஃப்ளாட்டில் இருப்பது 9 வீடுகள் எங்களையும் சேர்த்து. அதில் ஒரு குடும்பம் நாகர்கோயிலைச் சேர்ந்த என்னைப் போல மலையாளம் தமிழ் கலந்த பார்ட்டி. அவர்களுடன் பேசுவதும் இப்படி. எங்கள் தளத்தில் இந்தக் குடும்பத்தைத் தவிர்த்து மற்றொரு மலையாளக் குடும்பம். புதிதாய் வந்திருக்கிறார்கள். மற்றொரு குடும்பம் மனைவி மலையாளி, கணவர் பஞ்சாபி. இன்னும் இரு குடும்பங்கள் மலையாளிகள். அவர்கள் மலையாளமும் தமிழும் கலந்து தான் பேசுவார்கள். அப்படிப் பேசும் போது தாமஸம் இங்கதான் என்றுதான் பேசுகிறார்கள். நான் உட்பட....இங்கு சென்னையில் இருக்கும் என் கசினுடன் பேசும் போது கூட (அவள் கேரளத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்தவள். கல்யாணமாகி இங்கு) ஆக்ரஹிச்சேண்டி... தேஷ்யம் வந்துது என்று தான் பேசுகிறோம். ஸோ அப்படியே வந்துவிட்டது வரிகள்.

      நீக்கு
    2. /"இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னைக்" - "ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்"-திருப்பாவை, "இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி"-வாரணமாயிரம் - // இரண்டுமே எனக்கு மனப்பாடம். திருவனந்தபுரத்தில் இருந்த என் மாமி எனக்கு வாரனமாயிரம் கற்றுக் கொடுத்தார் ராகமாலிகையாக....இப்போதும் கல்யாணங்களில் மடிசார் கட்டும் போது அல்லது ஊஞ்சலின் போது மாமி பாடுவார் நான் ஒத்து ஊதுவேன்!!!!! அந்த வரிகளை வைத்து கல்யானத்திற்கென்று நானும் என் மாமியும் பாடல் எழுதிப் பாடியதுண்டு. அப்படி எடுத்ததுதான் இந்த வரிகள்.

      கீதா

      நீக்கு
  13. பல்வேறு இடங்களைக் கடந்து ரயில் செலதைப் போல பல்வேறு தடங்களைக் கடந்து செல்கின்றது - கதை...

    சுந்தர மலையாளம்.. அழகு.. ஆனாலும்,

    மனம் பாரமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ! இதில் முடிவு அப்படித்தான் இருக்க வேண்டும் இல்லையா அதனால் சங்கடம் வரலாம்...

      கீதா

      நீக்கு
  14. நல்ல கதை! இதே மாதிரி ஒரு பெண்ணை எனக்கும் தெரியும். ஆனால் விவாகரத்தெலலம் ஆகலை! தாக்குப் பிடிக்கிறது! கதை ஒரே சீராகச் செல்கிறது. இயல்பான சம்பாஷணை! அதிகம் வர்ணனைகள் இல்லாமல் கதைக் கரு மட்டும் வருகிறது. இதில் தாரிணிக்கு இரண்டாம் மணமும் பிடிக்கவில்லை! அதிலும் மனம் பொருந்தவில்லை! ஆக அந்தப் பெண்ணிடம் ஏதோ மனோவியாதி! தாழ்வு மனப்பான்மையா? அல்லது நினைத்தது உடனே நடக்கணும் என்ற எண்ணமா? கிட்டத்தட்ட இந்தக் கருவை வைத்தே நானும் எழுதி இருந்தேன்! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அக்க அந்தப் பெண் கொஞ்சம் கேரக்டர் என்றுதான் எடுத்துக் கொண்டேன். இப்போது அப்படியெல்லாமும் நடக்கிறது அக்கா. வெளியில் தெரியாமல் சொல்லிச் செய்து விடுகிறார்கள். இதில் அப்பெண்ணிற்குக் கிடைத்தது பெரிய தண்டனையாக இருக்கலாம் ஆனால் அவள் நினைத்தது உடனே நடக்க வேண்டும் என்று நினைப்பதுதான் குமாரின் முடிவுக்குக் காரணமாகிவிடுகிறது. ஒரு இடத்தில் சிவா கூட காம்ர்பமைஸஸ் என்று சொல்லிவிட்டு தொடராமல் அது போட்டு என்று சொல்லிவிடுவான். அதாவது அவனுக்கும் கஷ்டம் இருந்தாலும் அப்படியே சென்று விடுகிறான். ஆனால் குமாரால் முடியய்வில்லை. குமாருக்கு முதல் கல்யாணம். சிவாவிற்கு இரண்டாவது கல்யாணம். தாரிணிக்குச் சில குற்ற உணர்வுகள். சிவா பணக்காரன். அவள் பெற்றோரும் அவளுக்குப் பணத்தால் நிரப்பிவிடுகிறார்கள். அவளுக்கு வேலை செய்வதுதானெ பிடிக்காது..மனொவியாதி என்றும் சொல்லலாம்...ஆனால் கவனிக்கப்படவில்லை.....ஆனால் குமார் வீட்டில் சிம்பிள். நடுத்தரக் குடும்பம். அதனால் பல சங்கடங்கள்...பிரிவுகள். கதைக் கண்டிஷனும் அதுதானே பிரிவு...பொங்கி அழுதல்...

      உங்கள் கதையை வாசிக்கப் போகிறேன் அக்கா....இதே கருவா...ஆஹா...இதோ பேறேன்...
      மிக்க நன்றி கீதாக்கா
      கீதா

      நீக்கு
  15. அருமையான கதை...

    சகோதரிக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி கருத்திற்கும் வாழ்த்திற்கும்....

      நீக்கு
  16. ஒரு சிற்பியாலே அனாயாஸமாக ஒரு சிற்பத்தை செதுக்க முடியும்.அதுபோல கதாசிரியராலே ஒரு கதையை உண்டாக்க முடியும். இப்படி இந்தக் கதையைப் படித்தவுடன் தோன்றியது. முன்னே பின்னே பிசிறல் இல்லாமல் கதை ஓடுகிறது. உங்களைப் பற்றியெல்லாம் தெரியாது. கதை மனதிலே சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. எதிர்மறையான ஜோடிகளானாலும் காலங்கடந்து ஞானோதயம் மறைமுகமாகத்தான் அழக்கூட முடியும். மலைாளம்,தமிழ்,ஆங்கிலச் சொல்கள் மணிப்பிரவாளமாக அழகூட்டுகிறது. தான் என்பது பெண்களுக்குக் கூடாது. டிவோர்ஸில் ஏதாவது காரணம்.
    அவ்வளவுதான். பாராட்டுகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! காமாட்சியம்மா! உங்கள் பாராட்டிற்கு மிக்க மிக்க நன்றி! அம்மா. உங்கள் வரிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னாலும் எழுத முடியுமா? மீண்டும் எனது கல்லூரிக் காலத்தில் எழுதியது போன்று எழுத முடியுமா என்று இருந்தேன். முதலில் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தவர் என்னுடன் எழுதும் நண்பர் துளசிதரன். இதோ இப்போது தொடர்ந்து எனது இனிய அன்பான நண்பர் ஸ்ரீராமும், இங்கு கௌதம் அண்ணாவும் எழுத வைக்கிறார்கள்....மற்றும் தங்களைப் போன்றோரும் கருத்திடும் தோழிகள் சகோக்கள் அனைவரும் தொடர்ந்து ஊக்கம் தந்து வாழ்த்தவும் செய்கிறீர்கள்/செய்கிறார்கள். என்னைச் சுற்றி இங்கு அன்பான வட்டம். ஊக்குவிக்கும் வட்டம்...இங்கு எத்தனை எத்தனை நல்ல திறமையான, அனுபவம் நிறைந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்! அவர்களின் நடுவில் எனதும் வருகிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தினை பக்குவப்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. இது ஜஸ்ட் வளரும் பருவமே. இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற ஆர்வமும் மேலிடுகிறது. இன்னும் கற்பதற்கும் நிறைய இருக்கிறது.... வார்த்தைகள் இல்லை வேறு என்ன சொல்ல....என்று தெரியவில்லை..அம்மா..

      தங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். சமையல் குறிப்புகள் கண்டுள்ளேன். நீங்கள் பார்த்த இடம் குறித்து எழுதியதை வாசித்த நினைவும் இருக்கிறது... கருத்தும் இட்ட நினைவு... இனி தொடர்கிறோம். மீண்டும் மிக்க நன்றியுடன்...

      கீதா

      நீக்கு
    2. எதிர்மறையான ஜோடிகளானாலும் காலங்கடந்து ஞானோதயம் மறைமுகமாகத்தான் அழக்கூட முடியும். // ஆம் காமாட்சி அம்மா. பல ஜோடிகள் பிரிந்து சில வருடங்களுக்குப் பிறகு பிரிந்தது தவறோ என்று காலங்கடந்த ஞானோதயத்தில்தான் இருக்கிறார்கள்.

      மிக்க நன்றியம்மா

      கீதா

      நீக்கு
  17. கதையின் முடிவு ஏற்கனவே குறிக்கப்பட்டிருப்பதால் ஒரு அலுப்பு பொதுவாகத் தெரியவேண்டும். ஆனால் அப்படி நிகழாமல் வாசகரைக் கூட்டிச்செல்கிறது உங்கள் நடை. சிவா கேரக்டரை நன்றாக டெவலப் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ ஏகாந்தன் அவர்களுக்கு. தங்களின் கருத்திற்கும், வாழ்த்திற்கும்.

      நீக்கு
  18. ///குமாரின் கையில் கொடுத்தான். இறங்கி யாருமில்லாத இடம் சென்றதும், அதுவரை கட்டுப்படுத்திய உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் முகத்தைக் கர்சீஃபால் மூடிக் கொண்டு பொங்கி அழுதான். தாரிணியும் பொங்கிய அழுகையைக் கட்டுபடுத்த முடியாமல் யாருக்கும் தெரியாமல் அழ வேண்டி பாத்ரூமை நோக்கிச் சென்றாள்///

    இதுதான் மனித மனம் ஆம் சோசியர்கள் கணிப்பது மனதை அல்லவே ஆகவே தோற்ற திருமணங்களுக்கு அவர்கல் காரணவாதியும் அல்ல அவர்களுக்கு அன்றைய வருமானத்திற்கு நாம் வாடிக்கையாளர் அவ்வளவே அதற்காக சோசியரை இப்பொழுது இழுக்க கூடாது அவர் அடுத்த ஜோடிகளுக்கு பொருத்தம் பார்ப்பதில் பிஸியாக இருப்பார்.

    சிவா சரியான ஓட்டவாய் வில்லங்கத்தார் கதை சொல்லாமல் சிவாவை சொல்ல வைத்தது நல்ல யோசனை,
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் வாங்க ஜில்லர்ஜி! ஹோ இது டங்க் ஸ்லிப்பல்ல ஃபிங்கர்ஸ்லிப்!!! ஹிஹிஹி ஜில்லர்ஜி கூட ஓகேதான்....உங்க முந்தைய பதிவை வைச்சு ஹஹ்ஹஹ செரி செரி ...உங்க கொடுவா மீசையை நீங்க முறுக்கறுதுக்குள்ள நான் விஷயத்துக்குப் போய்டறேன்..

      உங்க சோசியர் சோனை முத்து கூடவா இப்படியான ஆளூ??!! அடடா....சரிதான் உங்கள் கருத்து...அப்ப நீங்க ஜில்லானந்தாவா ஆகி கரீக்டா சேர்த்து வையுங்க ஜி ஜோடிங்களை!! இது எப்புடி ஐடியா??!!

      சிவா சரியான ஓட்டவாய் வில்லங்கத்தார் கதை சொல்லாமல் சிவாவை சொல்ல வைத்தது நல்ல யோசனை,// ஹஹஹஹ

      மிக்க நன்றி ஜில்...ஸாரி ஸாரி கில்லர்ஜி!!!

      கீதா

      நீக்கு
    2. ஓடும் ரயிலில் தொடங்கும் கதை அதைப்போலவே வேகத்தோடு விரைகிறது.இயல்பான கதா பாத்திரங்கள், உரை நடை. சபாஷ்!

      நீக்கு
    3. மிக்க நன்றி பானுக்கா! கருத்திற்கும் பாராட்டிற்கும்!

      கீதா

      நீக்கு