புதன், 12 பிப்ரவரி, 2020

மாஸ்டர் ப்ளான் !

                       
அதிகாலையிலேயே அந்த வீடு இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டான் அவன். தன்னுடைய காரை, சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, நடந்து வந்து, அந்த வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்டான் அவன். 

வீட்டின் ரோடுப் பக்கக் கதவு திறக்க இயலாத வகையில் பூட்டிக் கிடந்தது. முன் பக்க ஜன்னல்கள் பாதி திறந்து, பாதி மூடிய நிலையில் இருந்தன. இரண்டு முறை, வீட்டைச் சுற்றி வந்தான். வீட்டின் பின்பக்கக் கதவு, சற்றே திறந்த நிலையில் இருந்ததை கவனித்தான். 




பின் பக்கக் கதவுக்கு நேரே இருந்த வேலிக் கதவு மூடியிருந்த நிலையில் இருந்தது. ஆனால் அந்தக் கதவு பூட்டப்படவில்லை. 

வீட்டின் வலது பக்க ஜன்னல், கதவுகள் இல்லாமல் திறந்த நிலையில் இருந்தது. 

வீட்டிற்குள் செல்ல பின்பக்கக் கதவும், அந்தக் கதவுக்கு நேரே உள்ள வேலிக் கதவும்தான் வழி என்று தெரிந்துகொண்டான். 

வீட்டின் முன்பக்க ரோடில் எப்பொழுதாவது ஏதாவது ஒரு கார் வேகமாக செல்லும். யாரும் இந்த வீடு இருக்கும் இடத்திற்கு அருகே வாகனத்தை நிறுத்துவதில்லை. இங்கே இப்படி ஒரு abandoned farmhouse இருப்பதை அந்த வழியில் செல்பவர்கள் யாரும் இலட்சியம் செய்யவில்லை. 

அதன் பிறகு, அவன் தன்னுடைய காரை ஓட்டியபடி, வீட்டின் முன்பக்க ரோடில் இரண்டு மைல் தூரம் சென்று அந்தப் பகுதியைப் பற்றித் தெரிந்துகொண்டான். 

அதே போல, வீட்டின் பின் பக்கப் பகுதியில் தூரத்தில் இருந்த சிறு ரோடில் சுற்றுப்பக்க பகுதிகளை காரில் சென்று பார்த்து வந்தான். 

ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக, காரில், அங்கிருந்து நான்கு மைல் தூரத்தில் இருந்த மக்கள் வாழும் பகுதிக்கு சென்றான். அங்கே காலை உணவு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டான். அருகில் இருந்த கடை ஒன்றில், நீளமான பச்சைக்கலர் பிளாஸ்டிக் கயிறு  வாங்கி, காரில் வைத்தான்.  அருகில் இருந்த பார்க் சென்று சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டான். பிறகு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டான். பிறகு மீண்டும் ஓய்வு. 

மாலை மூன்று மணி சுமாருக்கு அங்கிருந்து காரில் கிளம்பி, அந்த வீட்டுக்கு அருகே வந்தான். காரை, வீட்டின் பின்பக்கத்து ரோடில் சிறிது தூரத்தில், மரங்கள் அடர்ந்த பகுதியில் இருட்டான ஒரு பகுதியில் நிறுத்தினான். 

காரிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு,  கைகளில் கையுறை அணிந்துகொண்டு, அந்த வீட்டை நோக்கி நடந்தான். 

முதல் வேலையாக வீட்டைச் சுற்றிலும் இருந்த மரங்களின் மீது,  ஸ்பிரேயர் மூலமாக குறிப்பிட்ட செண்ட்டை ஸ்ப்ரே செய்தான். 

வீட்டின் அருகே வருகின்ற யாரும், அந்த செண்ட் வாசனையிலிருந்து தப்ப முடியாது. காற்று எந்தப்பக்கம் வீசினாலும், அங்கே அந்த செண்ட் வாசனை வீசியது.

பிறகு வேலிக் கதவைத் திறந்துகொண்டு, உள்ளே நுழைந்தான்.தன்னிடமிருந்த செண்ட் பாட்டில்கள், ஸ்ப்ரேயர் எல்லாவற்றையும்  திறந்திருந்த பின்பக்கத்துக் கதவு வழியாக வீட்டிற்குள் வீசினான். 

 வீட்டின் வலது பக்க ஜன்னல் வழியாக ஜாக்கிரதையாக வீட்டுக்குள் குதித்தான். அந்த ஜன்னல் இருக்கும் அறையின் வெளிப்பக்கத்திலிருந்து, உள்பக்கம் வரை இருப்பது போல தான் கொண்டு வந்திருந்த புடவையை முறுக்கி தரையில் அமைத்தான். அறையின் உள் பக்கத்தில் இருக்கின்ற புடவை முனையில், தான் வாங்கியிருந்த நீண்ட பிளாஸ்டிக் கயிற்றிலிருந்து ஒரு சிறு நீளத்தை வெட்டி எடுத்து  ஒரு முனையைக் கட்டினான். கயிற்றின் மறுமுனையை, ஜன்னலுக்கு வெளியே கொஞ்சம் வருமாறு அமைத்தான். பிறகு, அந்த ஜன்னல் வழியாகவே மீண்டும் வெளியே குதித்து பின் பக்க கதவு அருகே வந்தான். அங்கே அருகில் இருந்த மரக்கிளையில், தான் கொண்டுவந்திருந்த இரண்டு மொபைல் போன்களில் ஒன்றை, யார் கண்ணிலும் சுலபமாகப் படாத வகையில், கட்டி வைத்தான். 

ஒரு தடவை, தன்னுடைய இன்னொரு மொபைலிலிருந்து, அந்த மொபைலுக்கு அழைப்பு அனுப்பி, ரிங் டோன் சரியாக இயங்குகிறதா, அழைப்புச் சத்தம் பெரிதாக ஒலிக்கிறதா என்று நிச்சயப்படுத்திக்கொண்டான் அவன். 

கடைசியாக, தான் வாங்கியிருந்த பிளாஸ்டிக் கயிற்றில் மீதி இருந்த நீளமான பகுதியின் ஒரு முனையை, திறந்திருந்த வேலிக்கதவின் கீழ்ப்பகுதியில் கட்டினான். அந்த பிளாஸ்டிக் கயிற்றை, உயரமாக வளர்ந்திருந்த பச்சைப்புற்களின் வழியாக,  தரையில் கயிறு இருப்பது தெரியாத வகையில் எடுத்துக்கொண்டு போய், தூரத்தில் இருந்த மரத்துக்கு அருகே கயிற்றின் மறுமுனை வரும்படி வைத்தான். அந்தக் கயிற்றை இழுத்தால், வேலிக்கதவு மூடிக்கொண்டுவிடும் வகையில் அதை அமைத்தான், அவன். 



பலி மேடை தயார். வில்லன் வருகின்ற வரையில் பின் பக்கத்தில் தூரமாக இருந்த மரத்தின் பின்னால், மொபைலை ஒரு கையிலும், வேலிக் கதவின் பிளாஸ்டிக் கயிற்றின் மறு முனையை, இன்னொரு கையிலும் பிடித்தவாறு காத்திருந்தான் அவன். 

இப்போ, "தா, உயிரைத் தா!"  அத்தியாயத்தை மீண்டும் படிங்க.  

(தொடரும்) 

12 கருத்துகள்:

  1. மொபைலில் பாடல் ஒலித்தது.
    கயிற்றின் மூலம் கதவை திறந்தான் நீலு வரும. போது சூப்பர்.
    நீங்கள் போட்ட பாட்டு மறந்து விட்டது "வா அருகில் வா, தா உயிரை தா "
    பார்வதியின் ஆவி பாடினால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல், பார்வதி கேசட்டில் ரெக்கார்ட் செய்து, அம்மாவுக்கு அனுப்பியிருந்த பாடல்.

      நீக்கு
  2. இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும், தங்கள் எடுத்துச் சென்ற விதம் சிறப்பு. 

    பதிலளிநீக்கு
  3. அதிரடி திட்டம் சரி. மிக ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு
    அருமையாகச் செய்கிறான். அம்மா அவனிடம் விரிவாகச் சொல்லி இருக்கிறாரா.


    மீண்டும் படிக்கிறேன். வரைபடம் சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிறந்த தொழில் நுட்பம். இதான் நடந்திருக்கும்னு புரிஞ்சாலும் விவரித்த விதம் அருமையாக உள்ளது. கடைசியில் நினைத்தது போலவே நடந்து விட்டது போல் இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். திக்கற்ற பார்வதிக்கும் தெய்வம் துணையோ?

      நீக்கு
  5. படம் போட்டு விளக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. செம ப்ளானிங்க்... நேற்றே படித்து விட்டேன் - அலைபேசி வழி!

    பதிலளிநீக்கு