திங்கள், 3 பிப்ரவரி, 2020

இசைந்தால் இசை; இல்லையேல் வசை.


(நேற்றைய பதிவின் தொடர்ச்சி) 

" உருவங்கள் அழிவதில்லை படம் வெளிவரவில்லையா! ஏன்? " 

"சொல்கிறேன். கவிஞர் எழுதிய பாடலின் வரிகளுக்கு எந்த டியூன் சரியாக இருக்கும் என்று எல்லோரும் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தோம்.  அப்போது அங்கே வந்த பார்வதி,  புதிதாக ஒரு டியூனில் அந்த வரிகளைப் பாடிக் காட்டினாள். அதில் இழையோடிய ஒரு சோகம் எங்கள் மனதை என்னவோ செய்தது. "





"அப்புறம் ?"

" அந்தப் பாட்டை அவள் சொன்ன டியூனிலேயே போடலாம் என்று நான் சொன்னேன். அதனால் இசையமைப்பாளருக்கு மன வருத்தம். அவர் தயாரிப்பாளரிடம் போய் 'புதுசு புதுசா நடிக்க வரவங்க எல்லாம் என் தொழிலில் தலையிட்டால், அப்புறம் நான் எதற்கு இந்தப் படத்தில் இசையமைப்பாளர் என்ற பெயரில்?' என்று கேட்டு கோபமாக வெளிநடப்பு செய்துவிட்டார்.  அதற்குப்பின் தயாரிப்பாளர், நான் தனியாக இருக்கும்போது, என்னிடம் வந்து, 'கதாநாயகியை மாற்றினால் நல்லது' என்று சொன்னார். நான் இதுபற்றி அவசர முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம் என்று அவரிடம் சொன்னேன்." 

" இதெல்லாம் பார்வதிக்குத் தெரியுமா?"

" தெரியாது. இந்த விவரங்களை பார்வதியிடம் சொல்லாமல், வேறு சில பட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பார்வதியிடமிருந்து அடிக்கடி போன் வரும். என் உதவியாளர்களை விட்டு, அவ்வப்போது பொய்கள் சொல்லி, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். "

" அப்போதிலிருந்து, தயாரிப்பாளருக்கு பயந்து, பார்வதியை ஒதுக்கி வைக்க ஆராம்பித்துவிட்டாயா ?" 

" ஆமாம். ஆனால், பார்வதி ஒருநாள் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்துவிட்டாள். 'அந்தப் படத்தில் கதாநாயகி சான்ஸ் இல்லை என்றால் போகட்டும், வேறு படங்களில் எனக்கு சான்ஸ் கொடுங்கள். நான் கர்ப்பமாக இருக்கின்றேன். என்னைக் கல்யாணம் செய்துகொள்ளுங்கள் .. ' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். "

" அடடா ! மாட்டிக்கொண்டுவிட்டாயா?" 

" இண்டஸ்ட்ரியில் அப்போதான் எனக்கு ஓரளவு பெயர் வந்துகொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் ஒரு கர்ப்பவதியைக் கல்யாணம் செய்துகொண்டால், என் பெயர் புகழ் எல்லாம் என்ன ஆவது? அதனால் அவளைக் கடுமையான வார்த்தைகள் சொல்லி திட்டி திருப்பியனுப்பினேன். அதற்குப் பிறகு ஒரு வாரத்தில் அவள் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாள். " 

" பேப்பரில் எல்லாம் தற்கொலையா அல்லது கொலையா என்று கூட கிசு கிசு வந்ததே!"

" அதெல்லாம் பழைய கதை. அதை விடு. இப்போ அவள் அந்தக் காலத்தில் நடிப்பதாகயிருந்த படத்தைதான் இந்தக் காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றியமைத்து, இந்தக் கால நடிகர்களைக் கொண்டு எடுப்பதாக இருக்கிறேன்." 

" சரி, நீலு, நீ ஓய்வெடுத்துத் தூங்கு. நான் நாளை மாலை வந்து உன்னை லொகேஷன் பார்க்க அழைத்துச் செல்கிறேன்" என்று கூறி வெளியே வந்தார் தங்கதுரை. 

ஹோட்டல் முதல் தளத்திலிருந்து படி இறங்கி வந்த தங்கதுரையின்  அருகே வந்த ஓர் இளைஞன், " சார், எனக்கு ஒரு உதவி செய்வீர்களா ?" என்று கேட்டான். 

" என்ன உதவி? " 

" வாங்க ஹோட்டல் பாருக்கு சென்று அங்கே பேசலாம். "

(தொடரும்) 


12 கருத்துகள்:

  1. கான்வர்சேஷனில் கதையை நகர்த்தும் பாணி பிரமாதம். வாழ்த்துக்கள்

    கதாசிரியரே முழுக் கதையையும் சொல்கிற மாதிரியான இன்றைய சிறுகதை எழுத்து பாணியை கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துகிற இந்த வகை எழுத்தாற்றலுக்கு மாற்றுகிற பணிக்காகத் தான் எழுதுவதாக சில நேரங்களில் எனக்குத் தோன்றும்.

    தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான். உரையாடலிலேயே கதையை நகர்த்துவதில் ஒரு சௌகரியம் இருக்கு. அது என்ன என்று அப்புறம் சொல்கிறேன்.

      நீக்கு
  2. சஸ்பென்ஸ் ஆரம்பித்துவிட்டது.நாடகம் போலக்
    காட்சிகள் சொல்லால் நகர்கின்றன.
    இது எனக்குக் கைவராத கலை. மிக அருமை கௌதமன் ஜி. நல்ல கற்பனை வளம்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. //அவள் அந்தக் காலத்தில் நடிப்பதாகயிருந்த படத்தைதான் இந்தக் காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றியமைத்து, இந்தக் கால நடிகர்களைக் கொண்டு எடுப்பதாக இருக்கிறேன்." //

    பார்வதி வந்து நடிக்க போகிறார் அவர் பாத்திரத்தில். தேவி படக்கதை போல் இருக்கே!

    பதிலளிநீக்கு
  4. உருவங்கள் அழிவதில்லை என்ற தலைப்பைப் பார்த்தால் பார்வதி போல் உருவம் உடைய பெண்(பார்வதியின் பெண்ணாக கூட இருக்கலாம்) நடிக்க போகிறாளா?

    பதிலளிநீக்கு
  5. பார்வதி தான் கர்ப்பமாய் இருக்கையிலேயே இறந்து விட்டதால் அவள் பெண்ணோ, பிள்ளையோ வந்திருக்க முடியாது. ஆனால் பார்வதியின் கதை தெரிந்த யாரேனும் அவள் ஆவி போல் நடிக்கப் போறாங்களா? அல்லது அவள் ஆவி உண்மையாவே வந்திருக்கா? அல்லது அவளே புனர்ஜன்மம் எடுத்து வந்துட்டாளா?

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்.. கதை நன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எப்படியெல்லாம் கதை நகரப் போகிறது என்று பார்க்க நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு