வெள்ளி, 24 ஜனவரி, 2020

பண்டோராவின் பெட்டி 200124


கொஞ்சம் delicate subject. 

கவனமாகப் படியுங்கள். உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். 

சில மாதங்களுக்கு முன்பு, facebook பதிவு ஒன்றில், ஷீரடி சாய்பாபா கோயில்கள் பற்றி, நடுநிலை நண்பர் ஒருவர் பதிந்திருந்தார். 




சாய்பாபா கோயில்கள், தமிழ்நாட்டில் பெருகி வருவதைப் பற்றி அவர் கருத்துகளை எழுதியிருந்தார். 

பதிவைவிட, அதற்கு வந்த கருத்துரைகள், ஆத்திக, நாத்திக வாதங்கள், பிரதிவாதங்கள், சுவையாக இருந்தன. 

ஒருவர் எழுதியிருந்தார் .... " நான் எப்பவும் வணங்குகின்ற "........"வை விட்டுவிட்டு, இனிமேல் சாய் பாபாவைத்தான் வணங்க வேண்டுமா ? அதற்கு நான் ஒருக்காலும் சம்மதிக்கமாட்டேன் ....... " என்ற ரீதியில் எழுதியிருந்தார். 

அதைப் படித்த பின், எனக்குத் தோன்றிய சிந்தனை இது. 

எந்த மதத்தினராக இருந்தாலும், அந்த மதத்திற்கு என்று சில வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் உள்ளன. 

அவற்றை, அந்த மதத்தைச் சார்ந்த முன்னோர்கள், மதகுருக்கள் சொன்னபடி, நம்பிக்கை உள்ளவர்கள் செய்துகொண்டு உள்ளனர். 

இதில் ஏதும் பிரச்னை இல்லை. 

நாத்திக வாதங்களை சில மதங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. 

சில மதங்கள் நாத்திக வாதங்களை பொருட்படுத்துவதில்லை. 

என் பார்வையில், 

கடவுள் நம்பிக்கை என்பது மருந்துக்கடை போன்றது. 

சிலருக்கு, சில நோய்கள், சில மருந்துகளால்தான் சரியாகும். 

நாகையில், என்னுடைய சிறு வயதில், அந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக் குழந்தைகளுக்குக் கூட, சில சரும நோய்களுக்கு, நாகூர் தர்க்காவுக்குச் சென்று, மந்திரித்து, தாயத்துக் கட்டி வருவார்கள். சரும நோய்கள் சரியாகும். 

வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பல தரப்பட்ட வேண்டுதல்கள் செய்துகொண்டு, அவற்றை நிறைவேற்றி குணம் அடைந்த இந்துக்கள் பற்றிய விவரங்கள் அந்த மாதா கோவிலில் உள்ளன. 

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செடில் உற்சவத்தில், ஜாதி மத பேதம் இன்றி செடில் ஏற்றி குழந்தைகளுக்கு வேண்டுதல் நிறைவேற்றியவர்களையும் பார்த்ததுண்டு.

ஏன் இவற்றை எல்லாம் எழுதுகிறேன் என்றால், ஒரு கடவுளை மட்டும்தான் நம்புவேன், அவரை மட்டும்தான் வழிபடுவேன் என்று இருப்பவர்கள், பிரச்னை எதுவும் இல்லை என்றால், அப்படியே வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை. 

அதே போல் எந்தக் கடவுளையும் நம்பவில்லை என்று வாழ்பவர்களும், பிரச்னை இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருந்தால் சரிதான். 

ஆனால், பிரச்னைகள், சுகவீனம், நோய் வரும்போது, அதற்குரிய மருந்தை, பத்தியத்தைக் கடைபிடித்தல் நல்லது. 

அந்த மருந்துக்கான மருந்துக்கடைக்குச் சென்று, அந்த மருந்தை நோய் இருப்பவருக்குக் கொடுத்து, அவர்களை நோயின் பிடியிலிருந்து மீட்பதில் தவறு இல்லை. 

ஆனால், இனிமேல், என்னுடைய எல்லா வித நோய்களுக்கும் இதே மருந்தைத்தான் சாப்பிடுவேன் என்று அவரோ, அதைத்தான் எல்லாவற்றுக்கும் சாப்பிட்டாகவேண்டும் என்று மருந்துக் கடைக்காரரோ அல்லது டாக்டரோ சொன்னால், அது ஏற்புடையதாகாது. 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


13 கருத்துகள்:

  1. கடவுள் வழிபாட்டில் இரு வகை உண்டு. உலக ஆசைகளுக்காக வேண்டிக்கொள்வது -இதில் செல்வம், கல்வி, உடல்நலம் என எல்லா விருப்பங்களும் அடங்கும். இன்னொன்று அந்தப் பெரும் சக்தியிடம் பக்தி செலுத்துவது, பிரதிபலன் எதிர்பாராத அன்பு காட்டல், வணங்குதல், போற்றுதல் போன்றவை.

    இரண்டாவதை நம் மனதிற்கு உவப்பான தெய்வத்திடம் மட்டும்தான் மனமொன்றிச் செய்ய முடியும். அது ஒரு உருவமாகவோ இல்லை ஓரிரு உருவங்களாகவோ இருக்கலாம்.

    முதலாவதற்கு பல்வேறு தெய்வங்கள், பல்வேறு ப்ரார்த்தனை முறைகள் உள்ளன. (உதாரணமா சாய் சரிதம் ஏழு நாட்களுக்குள் படித்தல், சுந்தரகாண்ட பாராயணம்....நவக்ரஹ ஹோம்ம், சனீச்வர பகவான் ப்ரீர்த்தி, சஷ்டி கவச பாராயணம்.... என நிறைய இருக்கின்றன.

    நீங்கள் சொன்ன மருந்து உதாரணம் சரியானது அல்ல. உங்களுக்கு, டாக்டர் நாகேந்திரன் சொன்னா அப்பீலே கிடையாது என்றால் எனக்கு அதே பிரச்சனைக்கு டாக்டர் சுரேஷ்தான் சரியானவர் என நான் நம்பலாம். இது அவரவர் நம்பிக்கை, அனுபவம் பொறுத்தது.

    இதைத்தவிர உள்ளார்ந்த நம்பிக்கை இல்லாமல், ஓ.. ஆறு வாரம் சனிக்கிழமை சன்னிதியில் விளக்கேற்றணுமா.... காசா பணமா. அதையும் செய்து பார்த்திடுவோமே என்பது மாதிரியானது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // டாக்டர் நாகேந்திரன் சொன்னா அப்பீலே கிடையாது என்றால் எனக்கு அதே பிரச்சனைக்கு டாக்டர் சுரேஷ்தான் சரியானவர் என நான் நம்பலாம். // அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். ஆக மொத்தம் ஒரு மருந்து. அதை சொல்பவர் யார் என்பதில் பிரச்னை இல்லை. யாரோ சொல்லும் ஒரு மருந்து, நம் நம்பிக்கைக்கேற்ப நாம் சாப்பிடவேண்டும். அது நாகேந்திரன் சொன்னதாலோ அல்லது சுரேஷ் சொன்னதாலோ இல்லை.

      நீக்கு
  2. இதுவரை நம்பிய இறைவனை மறந்து விட்டு நேற்று புதிதாக வந்த சாய்பாபாவை (மனிதரை) வணங்குவது அர்த்தமற்றது

    அவர் அப்பழுகற்ற மனிதர் இதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

    அதற்காக அவரையும் கடவுளாக்குவது முறையற்றது.
    இன்னும் நித்தியை வணங்கும் மா'க்கள் உள்ளவரை உலகை மாற்ற இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை நம்பிய இறைவனை மறக்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நோய் இருந்தால், அந்த நோயைப் போக்க சரியான மருந்து சாப்பிடவேண்டும். நோய் சரியாகிவிட்டால், வழிபடும் இறைவனை மீண்டும் பிடித்துக்கொள்ளலாமே! இங்கே சாய் பாபாவைக் குறிப்பிட்டது ஓர் உதாரணத்திற்கு மட்டுமே.

      நீக்கு
    2. அதாவது கடவுள்கள் பெறுகி விட்டார்கள் என்பதற்கு சாயும் ஓர் உதாரணம் ஜி.

      இப்படியே....... போனால் அடுத்த ஐம்பது வருடங்களில் திரைப்படக் கூத்தாடி எம்.ஜி.ஆரும் கடவுளாகி விடுவாரே....

      நீக்கு
    3. ஹா ஹா ! மனிதன் என்பவன், தெய்வமாகலாம்! வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம், வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம் ...

      நீக்கு
  3. அடியார்கள் வழிபாடு எப்போதும் உண்டு.
    இறைவன் மனிதனாக பிறந்து நல்வழிகாட்டி சென்று இருக்கிறார்கள்.
    இறைவன் மனிதனாக வந்து உதவியதாக மதங்கள் சொல்கிறது.

    அடியார் வழிபாடு எல்லா மதங்களிலும் இருக்கிறது.
    கடவுள் பல வடிவங்களில் இருக்கிறார்.

    என் தம்பி, தங்கைகளுக்கு வீட்டில் வந்து வெள்ளிக்கிழமை மந்திரித்து செல்வார் முஸ்லீம் பெரியவர் அவரிடம் தாயத்து கட்டி கொண்டு இருக்கிறார்கள்.
    வேளாங்கண்ணிக்கு போய் இருக்கிறேன். நாகூருக்கும் போய் இருக்கிறேன்.
    நெல்லுக்கடை மார்யம்மன் என் வேண்டுதலை நிறைவேற்றி தந்தார். அவரை மீண்டும் பார்த்து நன்றி சொல்லி வந்தோம்.

    நம்பிக்கையுடன் இறைவனை, மகான்களை, சித்தர்களை வழிபடலாம் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  4. முன்பே என் வலைப்பதிவில் சொல்லி இருந்தேன்.
    எனக்கென்னவோ எல்லா தெய்வங்களும் வேண்டும் என்றுதான் தோன்றும். இவருக்கோ, குழந்தைகளுக்கோ நோய் வந்தால் முதலில் முடிச்சு வைப்பது ஷீர்டி பாபவுக்கு. கூடவே சமயபுரம், திருப்பதி ,முருகன் என்று தொடரும்.
    எல்லா ஊரிலும் இருந்ததால்
    அந்தத் தவிப்பு வரும் நேரம்,
    எதையாவது பிடித்துக் கொண்டால் தான் நிம்மதி.
    அதே போல எங்கள் லஸ் பிள்ளையார்.

    எல்லாமே குணமாகிவிடும்.
    மற்றவர்கள் சிரமப்படுவதைத் தாங்கிக் கொள்ளவே
    முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். எதை நம்புகிறோமோ அது மருந்தாகிறது.

      நீக்கு
  5. எனது வயது 70. என்னுடைய சிறு பிராயத்தில் எம்மதமும் சம்மதம் என்றே வளர்ந்தேன். மசூதியில் சென்று ஓதி விட்டு வருவது, வயறு வலிக்கு மந்திரித்த தண்ணீர் வாங்குவது போன்றவை அதில் அடக்கம். அதே போல் படித்த பளளியில் அசெம்பிளியில் கிறிஸ்துவ பாடல்கள் பாடுவது, மற்றும் புது வருட நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு சர்ச் செல்வது என்றெல்லாம் இருந்திருக்கிறேன். 6ஆம் வகுப்பில் ஆர்யன் செகண்டரி ஸ்கூலில் வெள்ளிக்கிழமை பஜனைகளில் கலந்து கூட்டத்தில் நம பார்வதி பதஹே என்றும் ஹர் ஹர் மஹாதேவ என்று பஜனை செய்ததும் உண்டு. 
    சாதி மத பேதமின்றி எல்லோரும் ஒன்றாய் வாழ்ந்த காலம் அது. என்னுடைய பள்ளி நண்பர்கள் அப்துல் மாலிக், லாரன்ஸ் ஜெயப்ரகாஷ், வெங்கட்ரமணி போன்றவர்கள் தற்போதும் தொடர்பில் உள்ளனர். மதித்தோம் மதிக்கப்பட்டோம். 
    ஆனால் தற்காலம்? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போவும் அந்த வயதில் இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். வயதானபின், நம் கண்ணோட்டம் மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  6. நல்ல பகிர்வு.

    பல விஷயங்கள் இங்கே அரசியல் ஆக்கப்படுகின்றது. எது நம்பிக்கை தருகிறதோ அதை நாடுவோம். சக மனிதரை நேசிப்போம்.

    பதிலளிநீக்கு