ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

என்னடி சொன்னார் ?


இது நேற்றைய பதிவாகிய யாரடி வந்தார் பதிவின் தொடர்ச்சி 


உள்ளே வந்த நபரை, மாலினி இதற்கு முன்பு பார்த்ததில்லை. 




மாலினி : "வாருங்கள், உட்காருங்கள். உங்கள் பெயர் என்ன?" 

வந்தவன் : " மேடம். என் பெயர் சேது. பத்திரிக்கைகளில் உங்கள் படத்தைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் நடித்த படத்தையும் பார்த்தேன். நேரில் பார்ப்பதற்கு நீங்க இன்னும் அழகாகவும், இளமையாகவும் இருக்கீங்க. விரைவில் தமிழ்ப்பட உலகின் நம்பர் ஒன் நடிகை எனப் பெயர் எடுப்பீர்கள் என்று தோன்றுகிறது." 

மா : " நன்றி. நீங்க எந்த டைரக்டரிடம் உதவியாளராக இருக்கின்றீர்கள்? என்ன ப்ராஜெக்ட் பற்றி என்னிடம் பேசவேண்டும்? " 

சே : " மேடம். சுருக்கமாக சில விவரங்களை சொல்கிறேன். தயவு செய்து முழுவதும் கேளுங்க. "

மா : " சரி சொல்லுங்க "

சே : " சில மாதங்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் எனக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள். ஒரு கல்யாண வீட்டில், எனக்கு அடையாளம் காட்டப்பட்ட ஒரு பெண்ணை, ஒரு சீரியலில் நடிக்க வைக்க, அவளிடமும், அவளுடைய பெற்றோரிடமும் பேசி, சம்மதிக்க வைப்பதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க். "

மா : " நான் நடுவே கேள்வி கேட்கலாமா?"

சே : " நான் சொல்லி முடித்துவிடுகிறேன். அதிலேயே உங்கள் சந்தேகம் எல்லாம் தீர்ந்துவிடும். அப்படி தீரவில்லை என்றால், கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன்."

மா : " ஓ கே - தொடர்ந்து சொல்லுங்கள். உங்களுக்கு இன்னும் இருபது நிமிடங்கள்தான் மீதி "

சே : " சரி மேடம். என்னுடைய நண்பன், கல்யாண வீட்டில் அந்தப் பெண்ணை எனக்கு அடையாளம் காட்டினான். அனுஷ்கா மேடம் சாயலில் இருந்தாள் அந்தப் பெண். அவள் பெயர் அனுராதா. நான் அனுவிடமும், அவளுடைய பெற்றோரிடமும் விடாமுயற்சியாகப் பேசிப் பேசி, அனுவை சீரியலில் நடிக்க வைக்க அனுமதி பெற்றுவிட்டேன். அவளின் பெற்றோர் ஒரே ஒரு கண்டிஷன் போட்டார்கள். "

மாலினி என்ன என்கிற கேள்வியை கேட்க நினைத்து, பிறகு அமைதியானாள். 

சே : " அவளின் பெற்றோர் என்ன சொன்னார்கள் என்றால், 'நல்ல சீரியல், நல்ல குடும்பப் பாங்கான வேடம் என்றால் சரிதான். ஆனால், என்னதான் சீரியலோ சினிமாவோ - ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால், ஊரில் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். அவள் சீரியலில் நடிக்க ஆரம்பிக்கு முன்பாக, கல்யாணம் செய்துகொண்டு, அவளுடைய கணவன் அனுமதியோடு நடிக்கட்டும்.  எங்களுக்கும் நிம்மதி, அவளுக்கும் நிம்மதி' என்றார்கள்"  

மாலினி இப்போது வியப்போடு சேதுவைப் பார்த்தாள். 

சே : " மேடம், இந்த கண்டிஷனுக்கு அனுவும் ஒப்புக்கொண்டாள். அனுவின் பெற்றோருக்கு என் மீது ஒரு கண் இருப்பதுபோல எனக்குப் பட்டது. நான் அப்புறம் தனியாக, அனுவிடம், அவள் யாரையாவது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாளா என்று கேட்டேன். என் மனதுக்குள் ஒரு நப்பாசை - அது நானாக இருக்கவேண்டும் என்று. "

மா : " இன்டரஸ்டிங் "

சே : " ஆம். ஆனால், அனு என்னிடம் சொன்ன பதில் என்னை திடுக்கிட வைத்தது. அவள் மனதில், கல்யாண வீட்டில் அவளை எனக்கு முதலில் அடையாளம் காட்டிய என் நண்பன்தான் இருக்கிறான் என்று தெரிந்ததும் நான் அதிர்ந்துபோனேன். மேலும் அனு, தன் சார்பாக என்னை என் நண்பனிடத்தில் பேசச் சொன்னாள். " 

மா : " அப்புறம்?" 

சே : " சரி, என் நண்பன்தான் அந்த அதிர்ஷ்டக்காரனாக இருக்கட்டுமே என்று நினைத்தேன். நேற்று என் நண்பனை மதிய நேரத்தில் அலுவலகத்தில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன்.  'வா ஒரு ஹோட்டலுக்குப் போய், லஞ்ச் சாப்பிட்டவாறே பேசலாம்' என்று அழைத்தேன். அவன் என் அழைப்பை ஏற்க மறுப்பவன் போல் தலையை ஆட்டினான். என் கையில் இருந்த சினிமாப் பத்திரிக்கையை என்னிடமிருந்து வாங்கிப் புரட்டினான். அதில் உங்கள் படம் இருந்த பக்கத்தை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். 'மாலினியை உனக்குத் தெரியுமா ?' என்று அவனிடம் கேட்டேன். பதில் ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்தவாறு தெரியாது என்பதுபோல தலையை ஆட்டினான். பிறகு அவன் தலையைக் குனிந்தவாறே என் முகத்தைப் பார்க்காமல் எழுந்து பாத்ரூம் சென்றான். அவனுடைய மேஜை இழுப்பறை திறந்து இருந்ததால், அதை மூடப்போனேன். அந்த இழுப்பறையில் அவனுடைய பர்ஸ் சற்று வெளியே நீட்டியவண்ணம் இருந்ததால், இழுப்பறையை மூட முடியவில்லை. அந்த பர்சை எடுத்து சரியாக மடித்து, உள்ளே வைக்கலாம் என்று எடுத்தேன். பர்ஸ் கை தவறிக் கீழே விழுந்தது. விழும்போது திறந்துகொண்ட அந்தப் பர்சின் புகைப்படம் வைக்கும்பகுதியில் உங்கள் படம் இருந்தது. பர்சை உள்ளே வைத்து இழுப்பறையை மூடினேன். " 

மா : " உங்க நண்பரின் படம் உங்கள் மொபைலில் இருந்தால் அதைக் காட்டுங்கள் " 

சே : தன் மொபைல் காலரியில் இருந்த படத்தைக் காட்டி, " இதோ இவன்தான் என் நண்பன் வெங்கட். இவனை உங்களுக்குத் தெரியுமா மேடம்?" 

மா : " சேது. நான் உங்களிடம் பொய் சொல்லப்போவதில்லை. ஆம். பிரபுவை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் உங்கள் அலுவலகத்தில் வேலைக்கு சேர்வதற்கு முன்பிருந்தே அவரைத் தெரியும். நான் சினிமாவில் அதிலும் கவர்ச்சியான வேடத்தில் நடித்தது அவருக்குப் பிடிக்கவில்லை. எங்களுக்குள் இருந்த நட்பு அவர் கூறிய சில வார்த்தைகளால் முறிந்து போயிற்று. "

சே : " சாரி மேடம். எனக்கு உங்களால் ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்கத்தான் நான் இங்கு வந்தேன்."

மா : " என்ன உதவி?" 

சே : " மேடம் - தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களைப் போன்ற ஒரு அழகியை காதலித்த வெங்கட், உங்கள் அழகில் கால் பங்கு கூட இல்லாத அனுராதாவை ஏற்றுக்கொள்வான் என்று எனக்குத் தோன்றவில்லை. அவனிடம் போய் அனுராதாவின் ஆசையை சொல்ல எனக்கு மனசு வரவில்லை. நீங்க வெங்கட்டோடு எடுத்துக்கொண்ட படம் ஏதாவது இருந்தால் அதை எனக்குக் கொடுத்து உதவுங்கள். நான் அதை அனுவிடம் காட்டி, வெங்கட்டின்  எண்ணத்தில் நீங்கள்தான் இருக்கின்றீர்கள் என்று அவளுக்கு உணர்த்திவிட்டேன் என்றால், அப்புறம் அவள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிப்பாள் என்று தோன்றுகிறது. மேலும் உங்களையே வார்த்தைகளால் காயப்படுத்தியவன் வெங்கட் என்று அனு தெரிந்துகொண்டால் அவள் மனசு மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. " 

மாலினி சேதுவிடம், அனுராதாவின் போட்டோவைக் காட்டச் சொன்னாள். சேது தன் மொபைல் காலரியில் இருந்த அனுவின் போட்டோவைக் காட்டினான். 


அதைப் பார்த்த மாலினி அதிர்ந்துபோனாள். 'ஆ! இந்த அனு இவ்வளவு பேரழகியா ! இவளையா தன்னுடைய அழகில் கால் பங்கு கூட இல்லாதவள் என்று இந்த சேது சொல்கிறான். கடவுளே - நான் பிரபுவை வெறுத்து ஒதுக்கி வைத்திருப்பது இந்த அனுவுக்குத் தெரிந்தால், என்னுடைய பிரபுவை இவள் சுலபமாகத் தட்டிக்கொண்டு போய்விடுவாளே' என்று நினைத்தாள்.

மாலினி, ஒரு முடிவுக்கு வந்தவளாக, " சரி சேது சார். நீங்க கேட்கும் உதவி எனக்கு நியாயமாகத்தான் படுகிறது. நானும் பிரபுவும் எடுத்துக்கொண்ட சில சந்தோஷப் படங்களை உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கிறேன். உங்கள் கல்யாணம் முடிந்தவுடன், நீங்களும் அனுவும் என் வீட்டிற்கு விருந்துண்ண வரவேண்டும். சரியா?" என்றாள். 

சே : " தாங்க்ஸ் எ டன் மேடம். உங்கள் உதவியை நான் வாழ்நாள் பூராவும் மறக்கமாட்டேன்" என்று மகிழ்ச்சியோடு சொன்ன சேது, மாலினியிடம் தன் மொபைல் எண் வாட்ஸ் அப் விவரங்கள் எழுதிக்கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். 

(தொடரும்) 

13 கருத்துகள்:

  1. அருமை. மிகவும் சுவாரசியமாக நகர்கிறது கதை. வாழ்த்துகள், தொடருங்கள், தொடர்வோம்!

    மேலும், இந்த பதிவை தொடர்கதை என வகைப்படுத்தியிருக்கலாம். எமது வலைத்திரட்டியில் உள்ள மெனுவில் காணப்படும் தலைப்புகளின் அடிப்படையில் தங்கள் பதிவின் குறிச்சொற்களை இணைக்க வேண்டும். அப்போதுதான் அந்தந்த மெனுவக்கு அது தானாகவே இணைந்து விடும். தயவுசெய்து இதனை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, அருமை. ஆனால் நான் வெங்கட் பச்சைச் சட்டைக்காரியை ஏற்றுக்கொள்வார் என நினைச்சேன். ஆனால் அவர் தான் மாலினிமேல் மாறாக் காதல் கொண்டவர்னு பானுமதி சொல்லிட்டாங்க. இப்போ இங்கேயும் மாலினியின் எண்ணம் தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! இனி என்ன? அனு சேதுவை ஏற்றுக்கொள்வாளா? ம்ஹூம், மாட்டாள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவள் காதலும் உண்மைக்காதலே! இஃகி,இஃஃகி,இஃகி, இது எப்பூடி இருக்கு?

    பதிலளிநீக்கு
  3. ஏன் இன்னிக்கு இது போணியே ஆகலை? இனியாவது யாரானும் வராங்களானு பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  4. ஓ..அப்ப வந்தது பிரபு இல்லியா...மாலினி மனம் கரைகிறது போல இருக்கே....
    அடுத்து நல்ல முடிவாக இருக்கும்னு நினைக்கிறேன்...

    கீதா...

    பதிலளிநீக்கு
  5. வெங்கட் பிரபுவின் வேலை இல்லையா சேதுவை அனுப்பியது?

    எப்படியோ அனுஷ் மாதிரி இருக்கும் பெண்ணும் வெகு அழகு என்று முடிவாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா அனுஷ் மாதிரி இருக்கும் பெண்தான் பேரழகி என்று மாலினியே நினைக்கிறாளே!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா.... நல்லாத்தான் போகுது கதை! முடிவு என்ன ஆகப் போகுதுன்னு பார்க்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ம் ... ம்ம் ... தூண்டில் போட்டாச்சு .... அயிரை மீனு சிக்குதான்னு பார்ப்போம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு