புதன், 8 ஏப்ரல், 2020

கொக்கி 191222 : 'மாலினி' :: பானுமதி வெங்கடேஸ்வரன்


நம்ம ஏரியாவில் சென்ற டிசம்பர் 22, வெளியான
கொக்கி 191222    (பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு) 
ஆரம்பத்தை எடுத்து, திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதியுள்ள கதை. மூன்று பகுதிகளில் இது முதல் பகுதி. 


அந்தப் பெரியவரை விட்டு விட்டு திரும்பிய வெங்கிட்டுவிற்கு, அப்படி சொன்னால் அவனுக்கு கோபம் வரும். என்னவொரு கர்நாடகமான பெயர்! ஆனால் அவனை குடும்ப நண்பரான கணேசன் அங்கிள் அப்படித்தான் கூப்பிடுவார். 



வெங்கட் பிரபு என்னும் அவன் பெயர் கொண்ட அவனை வெங்கி என்று
சிலரும், பிரபு என்று சிலரும் கூப்பிடுவார்கள். கணேசன் அங்கிள் மட்டும்
வெங்கிட்டு என்பார். சின்ன வயதில் அவனை சீண்டுவதற்காக அப்படி
கூப்பிட்டார்.

"அங்கிள், கால் மீ வெங்கி ஆர் பிரபு"

"என்னடா வெங்கி, மங்கி என்று, நன்னாவே இல்லை, என் பையன் பெயரும் பிரபு, உன்னைக் கூப்பிட்டால் அவன் திரும்பிப் பார்க்கிறான்".
அதனால் அவருக்கு மட்டும் அவன் வெங்கிட்டு.

அந்த பெயரையும் இப்போது அவனுடைய அப்பா அம்மா பெயர்களை
இணைத்து ரவி சித்ரா என்று மாற்றிக் கொண்டிருக்கிறான் திரை உலகில் ஒரு பிரபல இயக்குனருக்கு உதவியாளராக பணிபுரியும் வெங்கட் பிரபு.

ஏனென்றால் திரை உலகில்தான் வெங்கட், பிரபு, வெங்கட் பிரபு என்ற பெயர்களிலெல்லாம் ஏற்கனவே ஆட்கள் இருக்கிறார்களே. அந்த ரவிசித்ரா என்னும் வெங்கிட்டுவிற்கு ஆச்சர்யமும், கோபமும் வந்தது அந்த பெரியவர் சொன்னதைக் கேட்டு.

பெண் பாவம் பொல்லாதாமே..? எதை வைத்து இப்படி சொல்கிறார்? அல்லது ஏதாவது தெரியுமா? அல்லது அப்பா சொல்லுவாரே அசரீரி என்று, அந்த மாதிரி விஷயமா?

உண்மையில் வெங்கட் இந்த கல்யாணத்திற்கு வந்ததே அந்த பச்சை கலர் தாவணி பெண்ணை முன்னிட்டுதான். அவனுடைய டைரக்டர் தன்னுடைய அடுத்த படததிற்கு ஒரு புது முகத்தை தேடிக் கொண்டிருந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை.

" அனுஷ்கா மாதிரி ஒரு பொண்ணு வேணும்பா. அந்த கம்பீரம், அழகு,
முகத்தில் ஒரு புத்திசாலித்தனத்தோடு கூடிய இன்னொசன்ஸ்.."



"அனுஷ்காவையே போட்டுடலாமே சார்..."

"விளையாடறயா? அவ்ளோ பட்ஜெட் கிடையாது"

இந்தப் பெண் உயரம் தவிர 75% சதவீதம் அனுஷ்கா போல இருந்தாள். மேக்கப்பில் மிச்சத்தை நிரப்பி விடலாம்.

தன்னால் வர முடியாது என்பதால் அம்மாவிற்கு துணையாக அப்பா இவனை இந்த கல்யாணத்திற்கு போகச் சொல்லியிருந்தார். நேற்று பார்த்தவுடனேயே மனதில் ஒரு பொறி தட்டியது. அவளைப்பற்றி விவரங்களை எப்படியோ சேகரித்து விட்டான். அவளறியாமல் அவளை செல்போனில் புகைப்படம் எடுத்து,  இயக்குனருக்கு அனுப்ப," டேய்! விடாதடா." என்று பதில் அனுப்பியிருந்தார். 



இன்றைக்கு மற்றொரு உதவி இயக்குனராகிய சேதுவை அழைத்து வந்து அவனிடம் அந்த பச்சை தாவணி பெண்ணை அடையாளம் காட்டினான்.

அவன்,"நீ கவலையே படாதே, ஆளை அடையாளம் காட்டி விட்டாய், காரியத்தை கச்சிதமா முடித்து விடுகிறேன்." என்றான். அவன் அசகாயசூரன். வெறும் வாய்ச்சொல் வீரன் மட்டுமல்ல செயல் தீரனும் கூட . நிச்சயம் அந்தப் பெண்ணையும், அவள் பெற்றோர்களையும் சம்மதிக்க வைத்து விடுவான். அந்த சமயத்தில்தான் கணேசன் அங்கிள் இவனை கூப்பிட்டு யாரோ ஒரு பெரியவர் அட்ரஸ் மாறி வந்து விட்டார் என்றும், அவரை சரியான மண்டபத்தில் கொண்டு விட்டு விட்டு வரும்படியும் சொன்னார்.

பெரியவர் சும்மா வராமல் ஏதோ கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார். "என்ன வேலை பார்க்கிறாய்?" என்று கேட்கிறார். அசிஸ்டென்ட் டைரக்டர் என்று சொன்னால் இவருக்குப் புரியுமா? நடிகர்களுக்கு அல்லது நடிகைகளுக்கு வசனம் சொல்லிக் கொடுக்க வேண்டும். சீன் சொல்லத் தெரிய வேண்டும், வசனம் எழுத வேண்டும். அந்த வசனத்தை நடிகர்,நடிகைகளுக்கு சொல்லித்தர வேண்டும், கண்டினியூட்டியை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும், கதாநாயகி தொலைத்த காதணியைப்போல இன்னொன்று வாங்க கடை வீதியில் அலைய வேண்டும், ட்ராலி தள்ள வேண்டும், ஹீரோவையோ, ஹீரோயினையோ திட்ட முடியாத நேரத்தில் இயக்குனரின் கோபத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் சொன்னால் பெரியவருக்கு புரியுமா?

எப்படியோ அவரை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தால், ,'பெண் பாவம் பொல்லாது என்று அசரீரி மாதிரி ஏதோ சொல்கிறார்.

அப்பாவுக்கு இந்த மாதிரி விஷயங்களில் அதீத நம்பிக்கை உண்டு. எதையாவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தெருவிலோ, அல்லது டி.வி.யிலோ , "கவலைப்படாதே, எல்லாம் நல்லவிதமா நடக்கும்" என்று யாரோ யாருக்கோ சொன்னால், "பார் அசரீரி மாதிரி சொல்றான்" என்பார். அவர் ஏதாவது முக்கிய விஷயமாக வெளியே கிளம்பும் பொழுது வீட்டில் டி.வி.போட முடியாது. அதில் அசுப வார்த்தைகள் கேட்டுவிட்டால்?

இவர் யாரென்றே எனக்குத் தெரியாது. என்னையும் இவருக்குத் தெரியாது. ஆனாலும் தனக்கு மட்டும் தெரிந்த ஒரு விஷயத்தை சொல்கிறாரே? என்ற வியப்பு வந்தது. தான் மிகவும் நெருங்கிப் பழகும் மாலினியை கழட்டி விட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.

மாலினி என்னதான் அழகும், திறமையும் இருக்கும் நடிகையாக இருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. கதாநாயகியின் தோழிகளில் ஒருத்தியாக நிற்பாள், அதுவும் கதாநாயகிக்குப் பின்னால். கதாநாயகியின் அருகில் நின்றால் அவளை விட இவள் அழகாக தோன்றி விடும் அபாயம் உள்ளதே. இருந்தாலும் விடாமல் சினிமாக்காரர்களுக்கே உரிய நம்பிக்கையோடு காத்திருக்கிறாள். படப்பிடிப்பு இடைவேளைகளில் பேசி, பழகி நெருங்கி விட்டார்கள். இருவரில் யாரவது ஒருவர் செட்டிலானால் கூட திருமணம் செய்து கொண்டு விடலாம். ஆனால் அது சுலபத்தில் நடக்கும் விஷயமாகத் தெரியவில்லை.


(தொடரும்) 


9 கருத்துகள்:

  1. ஓ! டிசம்பரில் வெளி வந்த அந்த தாத்தா ஒரு பெண் இரண்டு மண்டபத்திலும் வந்து இரட்டை வேடம் போடுவாளே அந்தக் கதை பேஸ் ஓகே ஓகே..

    பானுக்கா செம ஸ்டார்ட். நீங்க பேசுவது போலவே கதையும் ஓடுது.

    தொடர்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அனுஷ் இங்கயும் வந்தாச்சு ...டைரக்டர், சரி அனுஷ் போல பெண் இல்லைனாலும் தமன்னா போலவாவது இருந்தா கிடைச்சா பிடின்னு சொல்லிருப்பதாக வந்தா நெல்லைக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு ஆரம்பம்.

    அனுஷ்கா - இந்தக் கதையிலும் வந்தாச்! :)

    பதிலளிநீக்கு
  4. // " அனுஷ்கா மாதிரி ஒரு பொண்ணு வேணும்பா. அந்த கம்பீரம், அழகு,
    முகத்தில் ஒரு புத்திசாலித்தனத்தோடு கூடிய இன்னொசன்ஸ்.."//

    ஸூப்பர்... ஸூப்பர்...

    பதிலளிநீக்கு
  5. //அனுஷ்கா மாதிரி ஒரு பொண்ணு வேணும்பா. அந்த கம்பீரம், அழகு,
    முகத்தில் ஒரு புத்திசாலித்தனத்தோடு கூடிய இன்னொசன்ஸ்.."//

    ஸ்ரீராமுக்கு தாங்க முடியாத சந்தோஷம்.

    பதிலளிநீக்கு

  6. //அவன்,"நீ கவலையே படாதே, ஆளை அடையாளம் காட்டி விட்டாய், காரியத்தை கச்சிதமா முடித்து விடுகிறேன்."//

    இதை தான் வயதானவர் கேட்டு விட்டு அந்த பெண்ணுக்கு ஆபத்து என்றாரோ!

    கதை நல்லா இருக்கிரது தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. புதுக்கதையா? முற்றிலும் திரைப்படப் பின்னணியில்? வெளுத்துக்கட்டுங்க. அடுத்ததையும் படிச்சுடறேன்.

    பதிலளிநீக்கு
  8. கல்யாண மண்டபத்தில் வச்சே எங்களை ஒரு வழி பண்ணுறீங்க ... நடக்கட்டும்... நடக்கட்டும்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு