செவ்வாய், 5 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 05::உதிரம் கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!



உலக இரத்த தானம் செய்வோர் தினம். (ஜூன் பதினான்கு)

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அதைவிட, 'உதிரம தானம் செய்தோர், உயிர் கொடுத்தோரே' என்று சொல்லிவிடலாம். 





எனக்கு வெகுநாட்கள் வரை இரத்ததானம் செய்வதற்கு பயம் இருந்து வந்தது. என்னுடைய இரத்த வகை என்ன என்று கூட அறியாமல் இருந்து வந்தேன். அசோக் லேலண்டில் குறைந்த பட்சம், வருடம் ஒருமுறையாவது இரத்த தான முகாம் நடைபெறும். அசோக் லேலண்டு தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் இரத்த தானம் செய்வார்கள். சில சமயங்களில், தொடர்ந்து ஒரு வாரம் எங்கள் டிரெய்னிங் சென்டரில், இரத்த தான முகாம் நடைபெறும். 




இரத்ததானத்தின் சிறப்பு பற்றி எடுத்துக் கூறி, என்னை இரத்த தானம் செய்ய அனுப்பி வைத்தவர், என்னுடைய மறக்க முடியாத இனிய நண்பர், இளவேனில். அவர் அதுவரையிலும், நாற்பதுக்கு மேற்பட்ட முறைகள் இரத்ததானம் செய்தவர். (அவரைப் பற்றிய பல விவரங்கள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விவரமாகப் பதிவிடுகின்றேன். அவர் அநியாயமாக ஒரு விபத்தில் உயிரிழந்தார்.) 





முதல் முறையாக டிரெய்னிங் சென்டரில், நண்பர் இளவேனிலுடன் சென்று இரத்ததானம் செய்து வந்தேன். அதற்கு ஒரு வாரம் கழித்து, எனக்கு, 'இரத்த தானம் செய்வோர் அடையாள அட்டை' (Voluntary Blood Donors Association Card) வந்து சேர்ந்தது. அதில், என்னுடைய இரத்த வகை A2(-) என்று குறிப்பிட்டிருந்தார்கள். அசோக் லேலண்டின் சிறப்பு இரத்ததானப் பிரதிநிதி ஒருவர் (பெயர் மறந்து போய் விட்டது) இயந்திரப் பழுது பார்க்கும் பகுதியை சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன் என்னை இன்டர்காமில் அழைத்து, "சார் உங்க பிளட் க்ரூப் ரேர் வகை. இனிமேல் பிளட் டொனேஷன் காமப்களில் இரத்தம் கொடுக்காதீர்கள். அவசியம் ஏற்படும்பொழுது மட்டும் இரத்ததானம் செய்யுங்கள்" என்றார்.



அதற்குப் பிறகு, பொன்னேரி பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்வீட் கடை வைத்திருக்கும் ஒருவரின் நான்கு வயது சிறிய பையனுக்காகவும், அண்ணா நகரில் இருக்கும் ஆஷ்லி என்ற ஒரு குழந்தைக்காகவும், ஆஸ்பத்திரிக்குச் சென்று இரத்ததானம் செய்துவிட்டு  வந்தேன். 


இரண்டாவது இரத்ததானம் செய்த சில மாதங்கள் கழித்து, குரோம்பட்டை இராதாநகர் பகுதியில், வேறு ஒரு பிரச்னைக்காக ஒரு (எலும்பு சிகிச்சை) மருத்துவரிடம் ஆலோசனை பெறச் சென்றிருந்தேன். என்னைப் பற்றிய விவரங்களை கேட்ட அவரிடம், யதேச்சையாக இரத்ததானம் செய்தது பற்றியும் கூறினேன். என்னுடைய பிரச்னைக்கு மருந்து எழுதிக்கொடுத்த அவர், நான் இரத்ததானம் செய்பவன் என்ற காரணத்தால், என்னிடம் கட்டணம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. 




வாசகர்களில், இரத்ததானம் செய்தோருக்கு, செய்வோருக்கு, பல்லாயிரக் கணக்கான இதய நன்றிகள். இரத்ததானம் பற்றி ஐயங்கள் எதுவும் இருந்தால், பின்னூட்டமாகப் பதியுங்கள்; எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்கள் யாரையாவது அணுகி, விளக்கம் பெற்று, வெளியிடுகின்றோம்.


உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம். 


வாழ்க வையகம். 
                

42 கருத்துகள்:

  1. வணக்கம் கௌ அண்ணா.

    ரத்ததானம் என்பது உயர்ந்த தானம். பயம் தேவையில்லைதான்.

    நீங்களும் கொடுத்திருப்பது சிறப்பான விஷயம். உங்கள் வகை ரேர் தான்.

    ஆனால் ஒரு வயதிற்கு மேல் கொடுக்க முடியாது இல்லையா?

    பொதுவாக, கொடுத்தால் மூன்று மாதத்திற்குப் பிறகுதான் அடுத்த தானம் என்று சொல்வதுண்டு ஆனால் சிலர் 6 மாதம் என்றும் சொல்வதுண்டு...

    எங்கள் வீட்டிலும் கொடுப்போர் உண்டு அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகள். பதினெட்டு வயதிலிருந்து அறுபத்தைந்து வயதுக்குள் இருக்கும் எந்த ஆரோக்கிய மனிதரும் அறுபது நாட்களுக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம் என்று கையேடுகள் தெரிவிக்கின்றன. இரத்ததானம் செய்யும் நபர், குறைந்தது ஐம்பது கிலோ எடை கொண்டவராக இருக்கவேண்டும் என்றும் அந்தக் கையேடு குறிப்பிடுகிறது.

      நீக்கு
  2. எனக்குத்தான் கொடுக்க முடியாமல் போனது. நான் ஸ்வீட்டோ ஸ்வீட்டு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வீட் 61 அதிரா என்ன சொல்வாரோ தெரியலை!

      நீக்கு
    2. ஸ்வீட்டோ ஸ்வீட்யாக இருந்தாலும் ரத்ததானம் கொடுக்கலாம் என்று மருத்துவர் கூறினார்... அவர்கள் ஸ்வீட்யை பிரித்து எடுத்துக்கொள்வார்கள் என்று சொன்னார்கள்...

      நீக்கு
    3. கௌ அண்ணா அதிரா இந்தக் கருத்தை பார்க்கலை ஹா ஹா ஹா நான் எஸ்கேப்!!! 61 எங்கே....16 எங்கே!!!!! (ஓ நான் என்றும் ஸ்வீட் 16 அதான் என்னால் ரத்தம் கொடுக்க முடியலை போல!! ஹிஹிஹி)

      கீதா

      நீக்கு
    4. எங்கள் குடும்ப மருத்துவர் என்னைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என்னதான் சுகர் பிரிக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும். சாதாரணமாகக் கொடுக்கும் ரத்தத்திலேயே சில சமயம் தவறுகள் நேர்கிறது எனவே தெரிந்தும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

      கீதா

      நீக்கு
    5. ////ஸ்வீட் 61 அதிரா என்ன சொல்வாரோ தெரியலை///
      ஆஆஆஅ இப்போதானே பார்க்கிறேன்ன்ன்ன் விடுங்கோ என் கையை விடுங்கோ மீ இப்பவே காசிக்குப் போறேன்ன்ன்ன்ன் கெள அண்ணனே சொன்ன பிறகு இந்த உசிறு:) உடம்பில இருந்து என்ன பலன்ன்ன்ன்ன்ன்ன்:)....

      ஹையோ கெள அண்ணன் அஞ்சு கீதாவைப்போல பின்னால இருந்து படிக்ககுடா ஹையோ பெல்ல்ல்ல்ல்ல்ல்ல் அடிக்க்க்க்க்க்க்:)

      நீக்கு
    6. ஹா ஹா ஹா --- பார்க்கமாட்டீர்கள் என்று நினைத்தேன்!

      நீக்கு
  3. ரத்ததானம் செய்பவர் என்பதால் மருத்த்வுஅர் கட்டணம் எதுவும் பெறாதது அட! என்று சொல்ல வைத்தது..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ரத்த தானம் செய்பவர்களைப் பார்த்துப் பொறாமை தான் படணும். ஒரு முறை யாரோ என்னுடைய நெகடிவ் க்ரூப் ரத்தவகை வேணும்னு கேட்க நான் வாயே திறக்கலை! அப்புறமா அவர் கோபத்தோடு என்னிடம் பேச, பின்னர் வாயைத் திறந்து ஆஸ்த்மா, பிபி இரண்டுக்குமாக 20 வருஷங்களுக்கும் மேல் மருந்துகள் எடுத்துக்கொள்வதையும்,ஸ்டீராயிட் ஆஸ்த்மாவுக்காக எடுத்துக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்பதையும் சொல்ல நேர்ந்தது. அதன் பின்னர் தான் சமாதானம் ஆனார்!

    பதிலளிநீக்கு
  5. என் மைத்துனர் 2012 ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருக்கும்போது ரத்ததானம் செய்தவர்களைக் குறித்து இன்றும் நன்றியுடன் நினைக்கிறோம். சுமார் பத்துப் பெண்கள். வந்து ரத்ததானம் செய்து விட்டுப் போனார்கள். பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்துக் கௌரவித்தோம்.

    பதிலளிநீக்கு
  6. உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்.

    வாழ்க வையகம். //

    மிகவும் அருமையான கொடை குருதி கொடை.
    உங்கள் சேவை மிகவும் பாராட்ட வேண்டும், உங்களுக்கு வணக்கங்கள்.
    தனியாக புண்ணியம் செய்ய வேண்டியது இல்லை, உங்களிடம் இரத்தம் பெற்றவர்கள் உங்களை வாழ்த்துவார்கள் அது போதும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. அபுதாபியில் வாழ்ந்த காலம்வரை தொடர்ந்து இரத்த தானம் செய்து வந்தேன்.

    இனிதான் இங்கும் தொடரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நான் இரண்டு மூன்று முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். பிறகு எனக்கு ஹீமோக்ளோபின் லெவல் குறைவு என்று சொல்லி இரத்த தானத்துக்குச் சென்றிருந்தபோது, என்னாக் கொடுக்கமுடியாது என்று சிலமுறை திருப்பி அனுப்பிவிட்டார்கள். என்னுடையது பி நெகடிவ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ? எனக்கும் ஹிமோக்ளோபின் குறைவுதான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்த இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது. டாக்டர் என்னை தினமும் நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சொன்னார். சிறிய வயதிலிருந்தே என்னிடம் இருந்த கெட்டப் பழக்கம் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்ததுதான். இப்போ கடந்த இரண்டு மூன்று வாரங்களாக, காலையில் ஒரு லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க ஆரம்பித்துள்ளேன். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

      நீக்கு
    2. இதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. எப்போ, எழுந்த பிறகா, வெறும் வயிரா என்றெல்லாம்..

      நீக்கு
    3. அங்க இருந்தபோது மாதுளை, பேரீச்சை சாப்பிடச் சொன்னார்... நான் டாக்டர்ட நான் அவைகளைச் சாப்பிடும் அளவைச் சொன்னதும் அப்படியுமா என்றார். நான் நிறைய தடவை, மூணு மாத சீசனில் ஒரு நாளைக்கு மூன்று மாதுளை அல்லது நாலு சாப்பிடுவேன். ஆரஞ்சும் அதே அளவு. பேரீச்சை ... கேட்கவே வேண்டாம்... இருந்தும் வித்தியாசம் இல்லை

      நீக்கு
    4. காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் குடிக்கிறேன்.

      நீக்கு
    5. நெல்லைத்தமிழன், எனக்குத் தெரிஞ்சதை சொல்கிறேன்,இதில் விரும்பியதைப் பொறுக்கி எடுத்துக்கோங்க:).

      ஹீமோகுளோபின் குறைஞ்சால் உணவிலதான் எடுக்கோணும்.. பச்சை நிற கீரை வகைகள், முக்கியமாக முருங்கை இலை, மற்றும் கிரீன் பீஸ் இவை எல்லாம் அடிக்கடி சேர்ப்பது நல்லது.

      இந்த பேரீட்சம்பழம் பற்றி நானும் அறிஞ்சேன், ஆனா பின்பு சொன்னார்கள், பேரீட்சையில் அயன் இருக்கு, ஆனாலும் அதிலிருக்கும் அயனை விட இனிப்புத்தன்மைதானாம் அதிகம், இயற்கை இனிப்பு உடம்புக்கு கேடு இல்லை என்பினம், இருப்பினும், அதிகம் பேரீட்சம்பழங்கள் சாப்பிட்டால் அயன் ஏறுவதை விட, சுகர் கூட்டிவிடும் எனவும் அறிஞ்சேன்.

      நீக்கு
    6. தண்ணி குடிப்பது நெ.தமிழன்... இது எவ்ளோ நன்மைகளை நமக்கு அளிக்கிறதாம்.. காலையில் கண் முழிச்சவுடன், கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணியாக குடிக்கோடும்.. அதாவது வாம் வோட்டர்.

      இப்படிக் குடிச்சால், சுகர், பிரசர்.. இவற்றை கொன்றோலில் வச்சிருக்க உதவுமாம், மற்றும் முக்கியமாக அசிடிட்டி இருப்போர் இப்படி தண்ணி குடிச்சால், நெஞ்செரிப்பு நிக்குமாம், கொன்சிபேசன், வயிற்று+உடம்புச் சூட்டைக் குறைச்சு சீராக்கும், தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றுமாம், மற்றும் நமக்குத் தெரியாமல் நம்முள் இருக்கும் சில வருத்தங்களையும் சீர்படுத்துமாம்... இதுக்கு காலையில் கண் முழிச்சதும் குறைஞ்சது அரை லீட்டர்[2 டம்ளர்] தண்ணியாவது குடிக்கோணும் மெல்லிய சூட்டில்.

      எனக்கு நீண்டகாலமாக அசிடிட்டி இருக்கு, காலைச் சாப்பாடு லேட்டானால் நெஞ்செரிக்கும், ஆனாலும் நான் ஏச்சு வாங்கி வாங்கி விரதம் இருப்பேன்:).. எனக்கும்தான் குடும்ப டொக்டர் சொன்னாக, வீட்டு டொக்டர் சொன்னாக, பக்கத்து டொக்டர் சொன்னாக, சித்த டொக்டர் சொன்னாக, ஆயுள்வேதி டொக்டர் சொன்னாக.. காலையில் தண்ணி குடிக்கச் சொல்லி... ஆனா மீ சொல்லுக் கேட்கலியே:)

      ஆனா என் பிரச்சனை என்ன எனில், கண் முழிச்சு எழும்பிட்டால் ரீ வேணும். அப்போ தண்ணி குடிச்சால் குறைஞ்சது ஒரு மணிநேரம் எதுவும் உள்ளே தள்ளக்கூடாது!.. அப்போதான் பலன் கிடைக்கும்.. அப்போ எப்படி தண்ணி குடிச்சு ரீ குடிப்பதென தண்ணி குடிக்காமலேயே இருந்தேன், மற்றும் விடிய எழும்பினால் இங்கு தண்ணி ஐஸ்போல இருக்கும், அப்போ எழும்பி சூடு பண்ண விரும்பாமலும்.. விட்டிருந்தேன்..

      இப்போ இந்த வருடத்திலிருந்து, ஒரு பெரிய ஃபிளாஸ்க்கில் நைட் சுடுதண்ணி ஊத்தி பெட் அருகே வச்சிட்டால், விடிய சூடு அளவா இருக்குது குடிக்க.

      எத்தனை மணிக்கு முழிப்பு வந்தாலும்[3 மணிக்கு மேல்], மடமடவெனக் குடிச்சிட்டுப் படுத்துவிடுவேன்.. அப்போ எழும்பபியவுடன் ரீ குடிக்கவும் முடியுது, அசிடிட்டியும் இல்லாததுபோல இருக்கு... கெள அண்ணன் சொன்னதைப்போல நிறைய நல்லா இருக்குது.

      நல்ல நாள் பார்த்து ஆரம்பியுங்கோ. காசா பணமா?:).. இதனால் எந்தக் கெடுதியும் இல்லை எனும்போது ஆரம்பிப்பதில் என்ன பிரச்சனை:).. பிள்ளைகளுக்கும் பழக்கினால் நல்லதே..

      நீக்கு
  9. கல்லூரிக் காலத்தில் இரத்த தானம் செய்ததற்கு 2 ஆரஞ்சுகளும் 3-4 முட்டைகளும் கொடுத்தார்கள். எங்க கிளாசில் (எம்.எஸ்.ஸி) எல்லா நண்பர்களும் எனக்கு முட்டை கொடு, எனக்கு என்று ஒரே கூச்சல். அந்த வயது... எல்லோர் முன்பும் நானே உடைத்துக் குடித்துவிட்டேன். இப்போ நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆ நெல்லைத் தமிழன் முட்டை குடிச்சிட்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  10. A2(-) பிளட் க்ரூப் கிடைப்பது ரேர் வகை...

    நான் முதன்முதலில் ரத்ததானம் செய்தது, எனது நண்பர் இனையதுல்லா அவர்களின் துணைவியாருக்கு...

    பதிலளிநீக்கு
  11. இரத்த தானம் என்பது பெரிய விசயம்தான், நான் இதுவரை செய்ததில்லை, விருப்பம் ஆனா பயம்.

    என் கணவர் அடிக்கடி கொடுத்திருக்கிறார். தன் இரத்தத்தைக் கொடுத்து, தானே ஒபரேஷன் செய்து பேசண்ட்டைக் காப்பாற்றிய கதையும் நடந்திருக்கு.

    ஒரு தடவை ரத்தம் கிடைக்காமல் போகவே, ஒரு வாரத்திலேயே இரு தடவைகள், என் ஹஸ் தன் இரத்தத்தை எடுக்கச் சொல்ல, லாப்பில் சொல்லிட்டாராம், இல்லை டொக்டர் அப்படிக் கொடுக்ககூடாது அது உங்களுக்கு நல்லதல்ல நான் எடுக்க மாட்டேன் என, அதுக்கு இவர், நான் சொல்கிறேன் எடு, பேசண்ட்டைக் காப்பாற்ற வேறு வழி இல்லை எனக் குடுத்தாராம்... இது தி.முன் நடந்தது.

    இப்போ எங்கள் மூத்தவரும், 18 வயதானதும் தன் பெயரை இணைத்துவிட்டார் , இன்னும் அழைப்பு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கணவரின் பெருந்தன்மையை வணங்குகிறேன். உங்கள் ஏழு தலைமுறைகள் சிறப்பாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

      நீக்கு
    2. அதிரா உங்கள் கணவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் வணக்கங்களும். உங்கள் பையரும் அதில் இணைந்திருப்பது அதுவும் அவரும் மருத்துவம் அல்லவா சேர்ந்திருக்கிறார்...தந்தையைப் போல நல்ல மருத்துவர் ஆகப் போகிறார்! காட் ப்ளெஸ்!

      கீதா

      நீக்கு
    3. //உங்கள் ஏழு தலைமுறைகள் //

      ஆவ்வ்வ்வ்வ் அப்ப்போ என் பூட்டப் பிள்ளையின், பிள்ளையின் பிள்ளையின் பிள்ளையின் தலைமுறை என்னாவது?:)) ஹா ஹா ஹா நன்றி கெள அண்ணன்.

      நன்றி கீதா. பிளட் செக் பண்ண எடுத்திருக்கிறார்கள், பின்பு ரிசல்ட் அறிவிச்சு, அதன் பின்பே போய்க் குடுக்க முடியும்.

      நீக்கு
  12. இரத்ததானம் செய்வது நல்லதுதான்.. அதில் நமக்கு தீங்கிருப்பதாக அறியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. கௌதம்ஜி இப்போதுதான் உங்கள் பதிவுகளை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். மீள் பதிவு என்றாலும் நாங்கள் வாசித்ததில்லையே.

    பழைய பதிவுகளையும் வாசித்தேன். உங்கள் ரயில் பயணம், திகில், மெஷின்கள் குறித்த விஷயங்கள், நல்ல நண்பரின் மறைவு எல்லாம் வாசித்துவிட்டேன். ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

    ரத்ததானம் மிக நல்ல விஷயம். பல வருடங்களுக்கு முன் ஓரிரு முறை கொடுத்ததுண்டு. அப்புறம் அதற்கான வாய்ப்பும் இல்லை. நாங்கள் இருப்பது ஒரு கிராமம். காய்ச்சல் போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு அருகிலும், 10 கிமீ தள்ளி நிலம்பூரிலும் மருத்துவ வசதிகள் உண்டு. ஆனால் அதையும் மீறி என்றால் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் இருக்கும் ஊரில்தான் மருத்துவமனை. பெரிய எல்லா வசதிகளும் கொண்ட மருத்துவமனை. அதனாலோ என்னவோ வாய்ப்பே இல்லாமல் போனது.

    நீங்கள் கொடுத்திருப்பது குறித்து பாராட்டுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. இரத்த தானம் என்பது கிட்டத்தட்ட உயிர் தானம் மாதிரியே . சில தவறுகள் நடப்பதால் கவனம் தேவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஆனால் இரத்ததானம் கேட்டு, தானம் செய்கிறவர்களிடம் இரத்தம் பெறுகின்ற மருத்துவ மனைகளில் தவறுகள் எதுவும் நடப்பதில்லை.

      நீக்கு