ஞாயிறு, 10 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 10 :: லஞ்ச எதிர்ப்பு!



இது அசோக் லேலண்டு அனுபவம் இல்லை என்றாலும், அசோக் லேலண்டில் சேருவதற்காக, எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ற வகையில் பகிர்கின்றேன்.




அசோக் லேலண்டு இண்டர்வியூ முடிந்து சில மாதங்கள் (!) கழித்து, என்னை, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன், டிசம்பர் இரண்டாம் தேதி (1971) வந்து பார்க்கும்படி, கடிதம் எழுதியிருந்தனர்.




ஒன்று: மார்புப் பகுதியின் எக்ஸ் ரே படம்.

இரண்டு : வாக்சினேஷன் சான்றிதழ்.

மூன்று : டிப்ளோமா சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட் ஒரிஜினல்.


அண்ணனுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக, கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல், எக்ஸ் ரே (அதற்குரிய கட்டணத்துடன்தான்!) எடுத்துக் கொண்டேன். நாங்கள் கேட்காமலேயே அதில் ஒரு ரிப்போர்ட் வேறு - கவர் மீது ஒட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதிலே பார்த்தால் - எனக்கு பிராங்கிடிஸ் இருப்பதாக கண்டுபிடித்து எழுதியிருந்தார் யாரோ ஒருவர். ('என்னை நீ முன்னே பின்னே பாத்துருக்கியா ஐயா? அப்புறம் ஏன் இந்தக் கொலை வெறி!')

நான் அந்த ரிப்போர்ட்டைப் பார்த்த பிறகு, என்னுடைய கனவில் அடிக்கடி வியட்நாம் வீடு சிவாஜி வந்து இரத்தம் கக்கியபடி " நா ம ஒண்ணு நெனச்சா தெய்வம் வேறு நெனைக்குதே .... நாம என்னப்பா பண்ணமுடியும், என்ன்ன்ன.......ப்ப்ப்பா பண்ண முடியும் ....." என்று வசனம் பேசி மார்பைப் பிடித்துக் கொண்டு 'லொக்கு லொக்கு ..' என்று இருமினார்! !


சரி எப்படியோ போகட்டும் (எப்படிப் போனது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்!) - அடுத்த விஷயம் இன் தி அஜெண்டா ஈஸ் - வேக்சினேஷன் சான்றிதழ்.

எனக்கு வேக்சினேஷன் செய்யப்பட்டது, கடலூரில் ரெட்டிச் சத்திரத் தெருவில், குடியிருந்த வீட்டில், நான் தவழ்ந்து முடிந்து, தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்திருந்த நாட்களில். அப்போ யாரோ வீட்டுக்கு வீடு வந்து, குழந்தைகள் எல்லோரையும் கட்டாயப் படுத்தி அம்மை ஊசி குத்தி சென்றார்கள் என்று அம்மா சொன்ன ஞாபகம். அது மட்டும் அல்ல, அம்மை ஊசி குத்தப்பட்ட இடம் கையில் (இரண்டு கைகளிலும்) புஜ பல பராக்கிரமன் போல வீங்கிக் கொண்டு, என்னுடைய அம்மா ரயில் ஓடு, மண்டை ஓடு என்று கிடைத்த ஓடுகளை எல்லாம் இழைத்து போட்டு அந்தக் காயங்களை ஆற்றினார்கள் என்பதும் வரலாறு. தினமும் நான் வலி பொறுக்காமல் அழும்போதெல்லாம், அம்மா அம்மை ஊசிக் குத்தியவர்களை அர்ச்சனை செய்துகொண்டே இருப்பார்கள். இப்போ போய் அவர்களைப் பார்த்து எனக்கு வேக்சினேஷன் சான்றிதழ் வேண்டும் என்று கேட்டால் - அவர்கள் என்னை துரத்தித் துரத்தி அடிக்க மாட்டார்களோ!


புரசைவாக்கத்தில், எதிர் போர்ஷனில் குடியிருந்த எவர்சில்வர் கோபால் (பெரம்பூர் பாரக்ஸ் ரோடில் எவர்சில்வர் பாத்திரங்கள் செய்கின்ற சிறிய தொழிற்சாலை வைத்திருந்தார்) எளிய யோசனை ஒன்று கூறினார். 'கங்காதீஸ்வரர் டாங்க் பக்கத்தில் சென்னை கார்ப்பொரேஷன் ஹெல்த் செண்டர் ஒன்று இருக்கின்றது. அங்கே போய் சுலபமாக சான்றிதழ் பெற்று வரலாம்' என்றார்.


நவம்பர் இருபத்தொன்பதாம் தேதி, திங்கட்கிழமை. காலை இராகு காலத்தில், அந்த அலுவலகம் சென்றேன். அங்கே ஒரு செவிலி உள்ளும் புறமும் வேகமாக நடந்துகொண்டே இருந்தார். எதையோ எடுத்து வருவார். அதை வைத்துவிட்டு வேறு எதையோ எடுத்துச் செல்வார். முகத்தில் ஒரு கடு கடு. என்னைப் பார்த்ததும், "என்ன வேண்டும்?" என்று கேட்டார், கடு கடு குறையாமல்.


நான் சற்றுத் தயக்கமாக, 'வேக்சினேஷன் சர்டிபிகேட்' என்றேன்.


"எப்போ அம்மை குத்திகிட்டே?"


"ரொம்ப நாள் (!) முன்னாடி."


"எங்கே?"


"கையில"


"அத்த கேக்கல ... எந்த ஊருல?"


"க .. க ... கடலூருல ...."


"வெளையாடுறியா? இங்க குத்திகினாதான் நாங்க சர்டிபிகீட்டு அல்லாம் குடுப்போம்."


"சரி. குத்திக்கிறேன்."


" செத்த நேரம் குந்து. ஆபீசரு ஒம்பது மணிக்கு வருவாரு. அவரு சொன்னாதான் குத்துறது, சர்டிபிகேட்டு எல்லாம்...."


குந்தினேன்.


ஆபீசர் வந்தார். நீல பாண்ட் வெள்ளை சட்டை. நர்சிடம், என்னைக் காட்டி ஏதோ கேட்டார். நர்ஸ் ஏதோ ஜாடை காட்டி ரகசியமாக கூறினார். ஆபீசர் ஜாடை காட்டி என்னை தன் மேஜைக்கருகே அழைத்தார். சென்றேன். பேரு என்ன? எங்கேயிருந்து வாறீங்க? விலாசம்? போன்ற கேள்விகளுக்கு பதில் சுலபமாக சொல்லிவிட்டேன்.


"வேலை பாக்குறீங்களா?"


"இல்லை."


"எதுக்காக சர்டிபிகேட்டு?"


(மாட்டிகிட்டேனோ? - அசோக் லேலண்டில் வேலையில் சேர என்று சொன்னால் - முதல் மாத சம்பளத்தை லஞ்சமாகக் கேட்பாரோ என்றெல்லாம் பயம் வந்துவிட்டது.)


"வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றேன். இண்டர்வியூ செய்பவர்கள் என்னுடைய எல்லா சர்டிபிகேட்டுகளையும் பார்க்க ஆசைப் படுகின்றார்கள். வேக்சினேஷன் சர்டிபிகேட் மட்டும்தான் இல்லை; மீதி எல்லாம் இருக்கு. அதனாலத்தான் ..." என்றேன். அவர் நம்பியதாகத் தெரியவில்லை.


"இங்கே யாரோடு தங்கி இருக்கின்றீர்கள்?"


"அண்ணனோடு."


"அவர் எங்கே வேலை பார்க்கின்றார்?"


"கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்."


"டாக்டரா?"


"இல்லை"


கொஞ்ச நேரம் என் முகத்தைப் பார்த்தார். நானும் பேசாமல் அவர் முகத்தைப் பார்த்தேன். சரி இந்த ஆளை வேறு விதத்தில் மடக்கலாம் என்று தீர்மானித்து விட்டார் போலிருந்தது.


"இன்றைக்கு வேக்சினேஷன் போட்டுகிட்டா அடுத்த வாரம்தான் சர்டிபிகேட் கிடைக்கும்."


பதறிப் போய்விட்டேன். "இல்லை சார். எனக்கு இன்றைக்கே சர்டிபிகேட் வேண்டும்."


அவர் வெற்றிப் புன்னகையுடன், "அதற்கு பீஸ் கொடுக்கணும்" என்றார்.


"எவ்வளவு?" என்றேன்.


அவர் கண்களைத் தாழ்த்தி ... "ஏதோ நீங்க இஷ்டப்பட்ட அமௌண்ட்..." என்றார்.


அப்போதான் எனக்கு, 'இது சம்திங் விவகாரம்' என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. சென்னை மாநகரத்திலே எனக்கு அறிமுகமான முதல் லஞ்ச லாவண்ய நிகழ்வு இதுதான்.


"ஓ கே" என்றேன்.


அவர் சந்தோஷமாக, "போய் வாக்சினேஷன் குத்திக்குங்க. நான் சர்டிபிகேட் தாறேன்." என்றார்.


என் சட்டைப் பையில் அப்பொழுது இருந்தது ஒரே ஒரு எட்டணா காசுதான். ஆனாலும் என்ன தைரியம்!


நான் ஆறாம் கிளாஸ் படிக்கும் பொழுது கூட அம்மை ஊசி குத்திக் கொண்டது அப்போ ஞாபகம் வந்தது. கையில் முழங்கை பகுதி மடியும் இடத்தில், இரண்டு இடங்களில் ஓரங்குல இடைவெளியில் அம்மைப் பால் வைப்பார்கள். பிறகு சின்னச் சின்ன ஊசியாக கால் அங்குல வட்டத்தில் அமைந்த ஓர் ஊசியை அம்மைப் பால் புள்ளிகளுக்கு மேலே வைத்து, கொஞ்சம் அமுக்கி ஒரே ஒரு சுற்று சுற்றுவார்கள். லேசாக எறும்பு கடித்தது போல இருக்கும். அவ்வளவுதான்.


கடு கடு நர்சும் இப்படிச் செய்வார் என்று (நம்பி) கையை நீட்டினேன்.


இரண்டு சொட்டு அம்மைப் பால் வைக்கும் வரை எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தது.


அப்புறம் ..... ஐயோ கொடுமை! கூரான கோணூசி (போன்ற) ஒன்றை எடுத்துக் கொண்டு, 'சைக்கோ' படத்தில் நடக்கின்ற கொலை போல, 'சதக், சதக், சதக்' என்று ஒவ்வொரு இடத்திலும் ஐந்து சதக்குகள் ... குத்திவிட்டார் கடு கடு.







'ஹூம் முன்பாவது எட்டணா கொடுக்கலாம் என்று நினைத்தேன் - பாவிகளா - இந்த சைக்கோ கொலைக்கு நான் ஒன்றும் தரமாட்டேன்' என்று முடிவெடுத்தேன்.


நர்ஸ் சென்று, ஆபீசர் தயாராக வைத்திருந்த சர்டிபிகேட்டைக் கொண்டு வந்து கொடுத்தார்.


அதை நான்காக மடித்து, பாண்ட் பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு, "தாங்க்ஸ்" என்று கூறியபடி, வாயிலை நோக்கி வேகமாக நடந்தேன்.


ஆபீசர், நர்சிடம், 'என்ன சொல்லிவிட்டுப் போறாரு அந்த ஆளு?' என்று கேட்டது மங்கலாகக் காதில் கேட்டது.


நர்ஸ் ஏதோ சொல்லிவிட்டு, 'துரத்திப் பிடிக்கட்டுமா' என்று கேட்டது போல இருந்தது.


"வேண்டாம் - போகட்டும். விட்டுடுங்க...."

37 கருத்துகள்:

  1. ஆஆஆஆவ்வ்வ் இண்டைக்கும் மீதான் 1ஸ்ட்டூஊஊ ஓஓஓ லலலாஆ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ மீ டூ...நினைச்சேன் நீங்க வருவீங்கனு...கருத்தோடு போட்டுருக்கேனாகும்...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஹா ஹா கீதா லேட்டாகும் வர என நினைச்சு, பதறாமல் வந்தேன் ஆனாலும் வந்திட்டீங்க:)

      நீக்கு
    3. நல்லிரவு கீதா... நாளை சந்திப்போம்.

      நீக்கு
    4. மை டைம் என்ற ரகசியம் பூஸாருக்குத் தெரிஞ்சு போச்சே!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. அதிரா இதுக்காக சிவராத்திரி கணக்கா கண்ணு முழிச்சிக் காத்திருந்தாங்க போலிருக்கு!

      நீக்கு
  2. காலை வணக்கம் கௌ அண்ணா....

    //வசனம் பேசி மார்பைப் பிடித்துக் கொண்டு 'லொக்கு லொக்கு ..' என்று இருமினார்! !//

    ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சிவாஜி படத்தில் முகம் மட்டும் மனசு க்ராஃபிக்ஸ்ல கௌ அண்ணா முகத்தை போட்டுச்சு...ஹையோ செமையா சிரித்துவிட்டேன்...

      கீதா

      நீக்கு
  3. ////என்னுடைய அம்மா ரயில் ஓடு, மண்டை ஓடு என்று கிடைத்த ஓடுகளை எல்லாம் இழைத்து போட்டு அந்தக் காயங்களை ஆற்றினார்கள் ///
    ஹா ஹா ஹா என்ன கொடுமை இது:)..

    பதிலளிநீக்கு
  4. பொக்கட்டில் எட்டணா மட்டும் வைத்து, பணம் தருகிறேன் எனச் சொல்லிட்டீங்க..என்னா தைரியம்:)...

    அந்தக் காலத்திலேயே லஞ்சமோ... அதெல்லாம் ரொம்ப அருமையான தங்கமான காலம், இப்போதான் கெட்டுப்போச்சு என்பார்களே.. அப்போ அக்காலத்திலும் எல்லாம் இருந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  5. துரத்தி இருந்தால்? என்ன பண்ணியிருப்பீங்க கெள அண்ணன்?... இந்த ஊசிக்கும் அடையாளம் வந்ததோ?...
    ஹா ஹா ஹ சூப்பர் இன்றைய அனுபவம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரத்தி இருந்தால் என்னைப் பிடிக்க அங்கே யாராலும் முடியாது. எல்லோருமே லஞ்சப்பணத்தில் சாப்பிட்டு, தொந்தியும் தொப்பையுமாக இருந்தார்கள்!

      நீக்கு
  6. அதென்ன ரயில் ஓடு ?
    அங்கேயே சீட்டிங் போட்டு விட்டீர்களா ? ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு ஏன் ரயிலோடு என்ற பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் காலத்தில் இரயில்வே நிலையங்களின் ஓடுகள் அந்த பெரிய சைஸ் ஓடுகளால் வேயப்பட்டிருந்ததோ என்னவோ? தண்ணீரை நிறைய உறிஞ்சும்.

      நீக்கு
  7. அப்புறம் ..... ஐயோ கொடுமை! கூரான கோணூசி (போன்ற) ஒன்றை எடுத்துக் கொண்டு, 'சைக்கோ' படத்தில் நடக்கின்ற கொலை போல, 'சதக், சதக், சதக்' என்று ஒவ்வொரு இடத்திலும் ஐந்து சதக்குகள் ... குத்திவிட்டார் கடு கடு.//

    இப்படியா குத்தினார்கள்...

    பின்னே இப்படித் குத்தினா எதுக்கு எட்டணா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. காலை இராகு காலத்தில், அந்த அலுவலகம் சென்றேன். அங்கே ஒரு செவிலி உள்ளும் புறமும் வேகமாக நடந்துகொண்டே இருந்தார்.//

    அது எப்பவுமே அரசு ஆஸ்பத்திரில ராகுகாலம் தானே அண்ணா...ஹா ஹா ஹா

    அப்போவே லஞ்சம் எல்லாம் தலை எடுத்திருந்தது இல்லையா..அப்ப இதுவும் பரம்பரைதானோ!!>>

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரி / ஹெல்த் செண்டர் என்றால், கேள்வியே கேட்கவேண்டாம்! அந்தக் காலத்தில் கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட இடத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடாத இடம் கார்ப்பரேஷன் ஸ்கூல் மட்டுமே! எம்ஜியாரே பாடினாரே === " ஊருக்கெல்லாம் விளக்கு போட வந்த பணத்திலே, தான் வெளிச்சமாக வாழ்ந்திருந்தார் நகரசபையிலே!" என்று!

      நீக்கு
  9. //என்னுடைய அம்மா ரயில் ஓடு, மண்டை ஓடு என்று கிடைத்த ஓடுகளை எல்லாம் இழைத்து போட்டு அந்தக் காயங்களை ஆற்றினார்கள் //

    ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. உங்கள் அனுபவங்களை ரொம்ப ஸ்வாரஸ்யமா உங்க நகைச்சுவை உணர்வோடு சொல்லறீங்க சூப்பர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. உங்க முகத்தைப் பார்த்து நிச்சயம் காசு பேராது என்று எக்ஸ்டிராவாக ரெண்டு ஊசிக்குத்து விழுந்துவிட்டதோ?

    பதிலளிநீக்கு
  12. ஹாஹா, நல்ல அனுபவம் தான். அப்போல்லாம் பள்ளியிலே கட்டாயமாய் மெடிகல் செக்கப் இருக்கும், அதிலே கையில் கிடைத்த ஊசிகளை எல்லாம் வைத்துக் குத்தி எடுத்துடுவாங்க. நானும் இந்த அம்மைப்பால் குத்திக்கிறது, அப்புறமா பிசிஜி வாக்சினேஷன், காலரா ஊசி என நிறையப் போட்டுக்கொண்டு அலறிப் பள்ளியையே ஸ்தம்பிக்க வைச்சிருக்கேன். அந்த ஞாபகம் எல்லாம் வந்தது. ஆனாலும் உங்களை வேலையில் சேரும் முன்னே பாடாய்த் தான் படுத்தி இருக்காங்க! :))) ஜமாளிச்சுட்டீங்க! அடுத்து வேலையில் சேர்ந்த படலம் தொடர்வதற்க்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. பார்த்தீர்களா, ஒரு பச்சைப் புள்ளைய எப்படி பாடாப் படுத்தியிருக்காங்க என்று!

      நீக்கு
  14. //அதை நான்காக மடித்து, பாண்ட் பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு, "தாங்க்ஸ்" என்று கூறியபடி, வாயிலை நோக்கி வேகமாக நடந்தேன்.//

    உங்கள் தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    முன்பே பணம் கேட்டு வாங்கிய பின் தான் ஊசி குத்துவேன் என்றால் என்ன செய்து இருப்பீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஆரம்பக் கட்ட லஞ்ச நிலை. அவங்க எல்லோருமே எல் போர்டு போலிருக்கு!

      நீக்கு
  15. //'ஹூம் முன்பாவது எட்டணா கொடுக்கலாம் என்று நினைத்தேன் - பாவிகளா - இந்த சைக்கோ கொலைக்கு நான் ஒன்றும் தரமாட்டேன்' என்று முடிவெடுத்தேன்.//

    நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு
  16. ஊசிக்குத்திய நர்சம்மா.... ஹாஹா... என் அனுபவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நெய்வேலியில் அந்த நர்சை மருத்துவமனை இல்லாமல் வேறெங்கே பார்த்தாலும் ஒரு பயம் வரும்!

    அனுபவங்கள் ஸ்வாரஸ்யம்! தொடரட்டும்.

    பதிலளிநீக்கு