ஞாயிறு, 17 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 17:: முட்டை போட்டியா?


அசோக் லேலண்டில் அது ஒரு வெயில் கால மதிய நேரம். கால் நடையாக காண்டீன் வரை சென்று, நாற்பது பைசா சாப்பாடு சாப்பிட்டு, கால்நடையாக என் பணி இடம் திரும்பினேன். (இரண்டு பேர்களுக்கு கருத்துரை பதிய பாயிண்ட் கிடைத்து விட்டது என்று நினைக்கின்றேன். பார்ப்போம்!)

வெயில் காலங்களில், வெளியே சுற்றிவிட்டு வந்தால், இரண்டு புகலிடங்கள் அந்த நாட்களில் மிகவும் பிரசித்தம். ஒன்று நகல் யந்திரம் உள்ள அறை. மற்றது மேலாளர் அறை.




அந்த அறைகள் குளிர் பதன எந்திரங்கள் கொண்ட அறைகள் என்பதால், (தமிழுல சொன்னா ஏ சி ரூம்!) வெயிலுக்கு இதமாக, சற்று இளைப்பாறலாம்.



மதிய நேர டிஸ்கஷனுக்காக என்றே கூட சில பேப்பர்களை எடுத்து வைத்துவிடுவோம். சில நாட்களில், மேலாளர் சாப்பிட செல்வதற்கு முன்பாகவே போய் சாப்பிட்டு வந்து , அவர் அறையை விட்டு கிளம்புவதற்குள், அங்கே தஞ்சம் புகுந்து, "நீங்க போய் சாப்பிட்டுவிட்டு நிதானமா வாங்க சார், எப்போ ஈ டி (Executive Director) வந்து கேட்டாலும், ' மானேஜர் இப்போதான் சாப்பிடப் போனார்' என்று சொல்லிவிடுகிறேன்!" என்று சொல்லி விடுவேன். மானேஜருக்கும் அந்த டீலிங் ரொம்பப் பிடிச்சிருந்தது!

ஒரு நாள், இப்படி மேலாளர் அறைக்குள் நான் நுழைந்த தருணத்தில், அவர் போனில், "முட்டை போட்டியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். சரி, யாரோ சத்துணவுக்கூட ஆயாவோடு போனில் உரையாடுகிறார் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

தொடர்ந்து அவர், "அதாம்பா எல்லோரும் செய்யறதுதானே. அதைத்தான் கேட்டேன். முட்டை போட்டியா?" என்றார். பிறகுதான் கவனித்தேன் அவர் பேசிக் கொண்டிருந்தது, வெளித் தொலை பேசி இல்லை. டிபார்ட்மெண்டுகளுக்கிடையே பேசப் பயன் படுகின்ற, உள் தொலைபேசி. (internal telephone) 'இதேதடா விசித்திரமாக இருக்கிறதே! அசோக் லேலண்டில், அடை காக்கும் கோழிகளை கூட அப்பாயிண்ட் செய்கிறார்களா' என்று ஆச்சரியத்துடன் அந்த ஆந்திரா யுனிவெர்சிடி அதிகாரியை நோக்கினேன்.




அப்புறம், 'அப்படியே மறுமுனையில் ஒரு கோழி பேசிக் கொண்டிருந்தாலும், இவருக்கு கோழி பாஷை தெரியாதே!' என்று நினைத்தேன். இதற்குள், மறுமுனையில் பேசிக்கொண்டிருந்தவர், இவர் என்ன கேட்கிறார் என்று புரியாமல், பக்கத்தில் யாராவது தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் போனைக் கொடுக்கும்படி கேட்டிருப்பார் போலிருக்கு. அதிகாரி என்னிடம் போனைக் கொடுத்தார்.
 
நான் போனை கையில் வாங்கி, காதில் வைத்து, 'ஹலோ?' என்று வாயால் கேட்டேன். மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவர், 'திட்டமிடுதல்' (Planning Department) பகுதி நண்பர். எனக்கும் தெரிந்தவர்.

   
என் குரலை அடையாளம் கண்டு கொண்டு, "கௌதமா - அவர் என்ன கேட்குறாருன்னு எனக்குப் புரியல. நீ கேட்டு விளக்கமா சொல்லு" என்றார்.
   
நான் அதிகாரியை பார்த்தேன். அவர் சொன்னார்: "அவரு திருப்பதி போயிட்டு வந்தாராம். அதுதான், (தலையைக் காட்டி) முட்டை போட்டு வந்தாரா' என்று கேட்டேன்" என்றார்.



நான் போனில், அந்த நண்பரிடம், "அது ஒண்ணுமில்லே சார். நீங்க திருப்பதி போயிட்டு வந்திருக்கீங்களே, மொட்டை போட்டு வந்திருக்கிறீர்களா' என்று கேட்கிறார் சார்" என்றேன். அவர் மறுமுனையில் சிரித்த சிரிப்பில், என் கையில் இருந்த ரிசீவர் அதிர்ந்தது.



*************** ************** **************

அதே அதிகாரியின் சம்பந்தப் பட்ட மற்றுமொரு சுவையான அனுபவம்:


எங்களுடைய (பழைய) 370 எஞ்சின் கிராங்க் ஷாப்டில், ஒரு சிறிய மாற்றம் செய்து, அதை ஒரு ட்ரயல் பேட்ச் உற்பத்தி செய்து, தமிழகத்தில் பல பகுதிகளில் அந்த கிராங்க் ஷாப்ட் பொருத்தப்பட்ட எஞ்சின், பேருந்துகளில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தது. எல்லா இடங்களிலிருந்தும் கிடைத்த அறிக்கைகள், சம்பந்தப்பட்ட எஞ்சின்கள் குறை ஏதுமின்றி, நன்றாக இயங்கிக் கொண்டுள்ளன என்பதுதான்.




மூத்த அதிகாரிகளின் உயர்மட்டக் குழு சந்திப்பின் போது, இந்த விவரங்கள் அளிக்கப்பட்டன. அப்பொழுது ஒரு (வடக்குப் பகுதி சர்விஸ்) அதிகாரி, இந்த மாற்றம் செய்யப்பட்ட எஞ்சின் உள்ள பேருந்துகள், எங்கே அதிக அளவில் சோதனை ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கின்றன? என்று கேட்டார்.
       
இந்த ஆந்திர அதிகாரி, உடனே மீட்டிங் ரூமிலிருந்து, அந்த பிராஜெக்ட் இன்சார்ஜ் (நாராயணசாமி என்று ஞாபகம்) ரூமிற்கு போன் செய்து, விவரங்கள் கேட்டு அறிந்தார். ஒரு காகிதத்தில் விவரங்களை எழுதிக் கொண்டார்.
         
மீட்டிங் ரூமில் இருந்த அனைத்து உயர் அதிகாரிகளிடமும், பெருமையாக சொன்னார். "இந்த மாற்றம் செய்யப்பட்ட என்ஜின் உள்ள வண்டிகள், அதிக அளவில் ஓடிக் கொண்டிருப்பது, தஞ்சை பெருமாள் டிரான்ஸ்போர்ட். "



சிலர், சரி என்று தலை ஆட்டி கேட்டுக் கொண்டனர். சிலர் புருவம் உயர்த்தினர். ஒருவர் மட்டும் கேட்டார், "அது என்ன புதுசா இருக்கு? நான் கேள்விப் பட்டதே இல்லையே!"
 
நம் அதிகாரி, போன் செய்து பிராஜெக்ட் இன் சார்ஜை, மீட்டிங் அறைக்கு உடனே வரும் படி அழைத்தார்.
   
மீட்டிங் ஹாலுக்கு சென்ற பிராஜெக்ட் இன்சார்ஜிடம், எல்லோரும், "யாருப்பா அந்த தஞ்சை பெருமாள்? நீங்க பாட்டுக்க புதுப் புது ஆட்களிடம் சோதனை வண்டிகளை கொடுத்து சோதனை செய்தால், நாளைக்கு வேறு பெரிய கஸ்டமர்களுக்கு அந்த மாற்றங்கள் நம்பகமானவை என்று எங்களால் எப்படி நிரூபிக்க முடியும்?" என்றெல்லாம் கேள்விகள் கேட்க, பிராஜெக்ட் இன் சார்ஜ் கூறினார். "சார், அது தஞ்சை பெருமாள் டிரான்ஸ்போர்ட் இல்லை; தந்தை பெரியார் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்!"
                 

18 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா!

    கால் நடையாக காண்டீன் வரை சென்று, நாற்பது பைசா சாப்பாடு சாப்பிட்டு// (கால் நடையாகனு சொல்லிட்டு ப்ராக்கெட்ல லொள்ளூ!! ஹா ஹா ஹா)

    கால் நடையாக// கேப் இல்லாம எழுதினா வேற மாதிரி ஆயிடுமே ஹா ஹா ஹா ஒயிங்கா நடந்து சென்றேன்னு சொல்றத விட்டுப் போட்டு!!!! ஹா ஹா ஹா ஹா

    //40 பைசாதானா சாப்பாடு!!//

    ஆஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால் நடையை வேறு விதத்தில் நினைச்சு சிரித்துவிட்டேன்!!

      கீதா

      நீக்கு
    2. கால்நடையாக//

      இதுதான் சிரிப்புக்குக் காரணம் சிரித்து முடில!!! சரி அப்புறம் எப்படி ஆஃபீஸ் உள்ள விட்டாங்க!!!?

      கீதா

      நீக்கு
    3. வாங்கோ, வாங்கோ - நான் கொஞ்சம் லேட்டு. அதிசயமாக ஒரு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து பல பக்கங்கள் படித்ததால் இங்கே வர லேட்டு ஆயிடிச்சு. கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  2. வெயில் காலங்களில், வெளியே சுற்றிவிட்டு வந்தால், இரண்டு புகலிடங்கள் அந்த நாட்களில் மிகவும் பிரசித்தம். ஒன்று நகல் யந்திரம் உள்ள அறை. மற்றது மேலாளர் அறை.//

    இப்பவும் சென்னைல ஸ்பென்ஸர் இல்லைனா மால் போனா ஓசில ஏசில இருந்துட்டு வரலாம்...அதான் வெயில் வந்தா கூட்டம் அள்ளுதோ..அங்கெல்லாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! ஓ சி ஏ சி யும் ஓ சி சிற்றுண்டியும் சுகமானவை!

      நீக்கு
  3. "நீங்க போய் சாப்பிட்டுவிட்டு நிதானமா வாங்க சார், எப்போ ஈ டி (Executive Director) வந்து கேட்டாலும், ' மானேஜர் இப்போதான் சாப்பிடப் போனார்' என்று சொல்லிவிடுகிறேன்!" //

    ஹா ஹா ஹா இன்னா தக்கினிக்கி!!!!

    முட்டை போட்டியா!! ஹா ஹா ஹா அந்த பாரா முழுவதும் சிரிப்புதான்!!

    நான் நாமம் சிம்பல் பார்த்ததும் சரிதான் யாரோ யாருக்கோ நாமம் சாத்திவிட்டாங்கனு நினைச்சேன்..!!!!!! அப்புறம் விஷயம் தந்தை தஞ்சையானது தெரிஞ்சுச்சு!!!

    கீதா



    பதிலளிநீக்கு
  4. நீங்க கால் நடையாகத் தான் 40 பைசா சாப்பாடு சாப்பிட செல்வீர்கள். எப்படி கால்நடைக்குத் தகுந்த சாப்பாடு தருவார்களா? நாங்கள் பொடி நடையாகத் தான் 65 பைசா சாப்பாடு சாப்பிட கான்டீன் செல்வோம். லஞ்ச் அவர் 1மணி நேரம் எடுத்துக் கொள்வோம். சாப்பிட்டு விட்டு மாமர நிழலில் ஒரு ஜெனரல் டிஸ்கசன் கொஞ்ச நேரம் நடைபெறும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா சுவையான உணவு, சுகமான அரட்டை வேறென்ன வேண்டும் நமக்கு!

      நீக்கு
  5. பதில்கள்
    1. நல்ல மனிதர். வலைச்சரம் தொடுக்க எங்களை அழைத்தபோது, அவருடன் பேசியிருக்கிறேன்.

      நீக்கு
  6. சுவையான அனுபவங்கள்.

    முட்டை போட்டியா? நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
  7. நல்ல நகைச்சுவையாக இருக்கிறது பதிவு.
    தஞ்சை பெருமாள், முட்டை போட்டியா எல்லாம் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  8. நல்ல சுவையான பதிவு, உங்க கான்டீன் சாப்பாடு போலவே! :))) அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு